Tuesday, May 09, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 4

மதம் எப்படித் தோன்றியது? இன்று நம்மை நாத்திகம் பேச வைக்கும் பகுத்தறிவுதான் மதம் தோன்றவும் காரணமாக இருந்தது.

மனிதனின் பகுத்தறிவு அறிவியல் வளராத காலத்திலும் தன்னைச் சுற்றி நடப்பது குறித்து விளக்கம் தேடியது. காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் மறைவது ஏன் என்பதில் தொடங்கி பிறப்பு இறப்பு வரை அனைத்திற்க்கும் விளக்கம் தேடியது. ஆனால் அவனால் அனைத்து விசயங்களுக்கும் விளக்கம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவனால் ஆராய்ந்து அறிய முடியாத விசயங்கள் பல இருப்பதைக் கண்ட மனிதன் தன் அறிவுக்கு புலப்படாத விசயங்கள் அனைத்தையும் இறைவன் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்தான்.

இப்படி தன்னால் ஆராய்ந்து அறிய முடியாத விசயங்களை இறைவன் என்று நினைத்தது தான் மனிதனின் மதங்களின் பெயரால் செய்ய ஆரம்பித்த முதல் மூடத்தனம்.

இறை நிலை என்பது ஒரு எல்லையில்லாத சக்தி நிலை.

இந்த பூமி உருவாகும் சமயம் அப்பொழுது இருந்த சுற்றுப் புறச் சூழல்களில் ஒரு பில்லியனில் ஒரு வீதம் சூழல் வேறு மாறி இருந்திருந்தாலும் உயிர் உருவாகி இருக்காது என்று அறிவியல் நமக்கு கூறுகிறது ஆகவே இறை நிலை இல்லை என்பது மூடத்தனம்.

ஆனால் இறை நிலை என்பது மதம் சார்ந்தது என்று எண்ணுவது அதை விட மூடத்தனமானது.

புரியாத விசயங்கள் அனைத்தும் இறைவன் என்று எண்ணியதால் தான் இன்று ஒவ்வொரு மதமும் வெவ்வேறு இறைவனை சென்றடைகிறது என்று மனிதன் எண்ணுகிறான்.

என் இறைவன்தான் உயர்ந்தவன் என் மதக் கோட்பாடுதான் உயர்ந்தது என்று எண்ணுபவர்களை விட மூடர்கள் உலகில் இல்லை.

அனைத்து மதங்களைலும் பொதுவான ஒரு விசயம் உண்டெனில் அது புனித நூல்கள், அவை போதனை செய்வது அன்பையும், மனித நேயத்தையும்.

கிருஷ்ணரும், நபிகளும், கிறிஸ்துவும் ஒரே கால கட்டங்களில் தோன்றி இருந்தால் இறை நிலைக்கு ஒரே பெயர் கிடைத்திருக்கும், நாமும் அவர்கள் அனைவரும் ஒரே இறை நிலையை பற்றித் தான் போதனை செய்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்திருப்போம்.

ஆனால் அவர்கள் வெவ்வேறு சமயங்களில் கலாச்சாரங்களில் தோன்றியதால்தான் ஒவ்வொருவருக்கும் இறைவன் அந்தந்த கலாச்சாரங்களின் அடிப்படையில் சித்தரிக்கப் படுகிறான்.

இன்று இதனை உணராத மனிதன் மதத்தை இறை நிலைக்கு முன் வைத்து மதத்தின் பெயரால் அழிவு வேளைகளில் ஈடுபட்டு வருகிறான்.

மதத்தை தாண்டி இறை நிலையை உணருங்கள் மதங்களைப் புறக்கணித்து மனித நேயத்தின் மூலம் இறை நிலையை அடையுங்கள்.

வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

4 comments:

')) said...

செந்தில்,

நல்ல பதிவு. கிட்டத்தட்ட எனது எண்ணமும் இதுதான். இந்தப்பதிவில் எழுதியுள்ளேன்.
http://sukas.blogspot.com/2006/01/4_16.html

கடவுள் ஒரு comfort zone. அதை விடுத்தல் அவ்வளவு எளிதல்ல ;)

சுகா

')) said...

//ஆனால் அவர்கள் வெவ்வேறு சமயங்களில் கலாச்சாரங்களில் தோன்றியதால்தான் ஒவ்வொருவருக்கும் இறைவன் அந்தந்த கலாச்சாரங்களின் அடிப்படையில் சித்தரிக்கப் படுகிறான்//

பரம்பொருளான கடவுள் எங்கெங்கு அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கங்கு தேவையான நேரத்தில் அவதரிப்பதாக பகவத்கீதை சொல்கிறது. ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் சீசரின் அதிகார வர்க்கம் ஏழைகளை கொடுமைப்படுத்திய பொழுது அங்கு பரம்பொருள் ஏசுவாக அவதரித்தார்.

இந்துக்களின் யாக வழிபாட்டு முறையும் சாதி மேலாண்மை கொடுமையும் ஓங்கிய பொழுது புத்தர் அவதரித்தார்.

முகமது நபியின் வரலாறு எனக்கு அவ்வளவாகத்தெரியாது. ஆனால் அவரும் ஒரு கொடுமையான ச்முதாயச்சூழ்நிலையில் மக்களை காக்க அவதரித்திருப்பார் என்பது திண்ணம்.

இது ஒரு தொடர் நிகழ்வு. மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேஇருக்கும். ஒரு முறை இறைவன் தோன்றிய பிறகு உலகமே திருந்தியிருந்தால் மீண்டும் தோன்ற வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இதைப்புரிந்து கொண்டால் எனது மதம் உனது மதம் என்ற வேறுபாடே இருந்திருக்காது.

')) said...

நன்றி சுகா, நன்றி சூப்பர் சுப்ரா, மதத்தால் மனித குலத்திற்கு அழிவு வந்து விடுமோ என்ற பயத்தில் எழுதப்பட்ட பதிவு. மதங்கள் கலைகளைக் காக்க எப்படி பயன் படுத்தப் பட்டன மனிதன் அவ்வாறு எவ்வாறு தவறாக உணர்ந்து கொள்கிறான் என்பதை பற்றியும் எழுதலாம் என்றிருக்கிறேன்.

')) said...

//ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் சீசரின் அதிகார வர்க்கம் ஏழைகளை கொடுமைப்படுத்திய பொழுது அங்கு பரம்பொருள் ஏசுவாக அவதரித்தார்.
//

தோன்றியது சரிதான்.
ஆனால் அவர் தோன்றியதுக்கும் சீசரின் கொடுமைக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா? அப்படித் தோன்றியிருந்தால் அந்த நோக்கத்தில் ஒரு துரும்பையாவது செய்தாரா?
தன் நோக்கம் என்னவென்று தெளிவாகவே சொல்லியிருக்கிறார். அது 'சீசரிடமிருந்து விடுவிப்பதன்று'
சீசரின் கொடுமை பற்றியும் அவர் ஏதும் கதைக்கவில்லை. அதை எதிர்த்துக்கூட ஏதுமில்லை.