Wednesday, October 17, 2007

ஓ மனமே!!!

அழகான பெண்கள் எல்லோருமே உன்னையே ஞாபகப்படுத்துகின்றனர். அவர்கள் ஏன் அழகாக தெரிகிறார்கள் என்பதை உன்னை வைத்தே நிர்ணயம் செய்கின்றேன் நான். முகவெட்டு உன்னைப் போலவே இருக்கிறதே, உயரம் உன்னை விட எத்தனை இஞ்ச் கூட இல்லை குறைவு அந்தப் பெண்ணின் மூக்கு உன் மூக்கு போல கூர்மையாக இல்லையே என்று அழகைப் பார்க்கும் இடத்தில் எல்லாமே நீதான் எனக்குத் தெரிகிறாய்.

கடவுள் ஒரு வரம் கொடுத்தால் மூன்று வரம் வேண்டும் என்பவன் முட்டாள் எனக்கு ஒரு வரம் மட்டும் போதும் ஒரு நொடிப் பொழுதேனும் நான் நானாகவே இருந்தாலும் நீ என்னை நீ நீயாகவே விரும்ப வேண்டும் என்ற வரம் என்று கேட்பேன். நூறு ஜென்மம் வேண்டும் சாகா வரம் வேண்டும் என்ற பேராசை இருந்தாலும் ஒரு நொடிப் பொழுது போதும் எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை உன்னோடு நூறு ஜென்மம் உட்பட.

ஆப்பிள் வட்டமாக சிகப்பு நிறத்தில் இருக்கும், சிகப்பு என்றால் இப்படி இருக்கும், வட்டம் என்றால் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தவர் வாத்தியார் என்றால் நீயும் எனக்கு வாத்தியார் தான் அழகு என்றால் என்ன கவிதை ஏன் எல்லோரும் ரசிக்கிறார்கள், ராத்திரியில் தூக்கம் இல்லாமல் இருப்பது கூட எத்தனை இனிமையானது என்பதை கற்றுக் கொடுத்தது நீயல்லவா?

Sunday, September 23, 2007

சிற்சில வருத்தங்கள், ராமர், சிந்தனைகள்

திருமணம் என்பது பல அழகான உறவுகளின் தொடக்கம். திசை இல்லாமல் திக்கித் திரியும் ஆணுக்கும் பிடிப்பும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வும் கொடுக்கும் ஒரு மிக அற்புதமான ஒரு சடங்கு திருமணம்.

கடந்த இரண்டு வருடங்களில் மிக விரைவாக குறைந்து கொண்டிருக்கிறது எங்களுடைய நட்பின் பேச்சுலர் பட்டாளம்.

இந்த இரு வருடங்களில் மிக மகிழ்ச்சியான தருணங்கள் எது என்று யோசித்துப் பார்த்தால் நண்பர்களின் திருமணங்களுக்கு மற்ற நண்பர்களுடன் சென்று மேலும் மற்ற ஊர்களில் இருந்து வந்திருக்கும் மற்ற நண்பர்களைப் பார்த்து பேசித் திரிந்த தருணங்கள் மனதிற்கு வருகிறது.

ஒவ்வொரு கல்யாணமும் ஒவ்வொரு மாதிரி, ஆனால் எல்லாமே ஆண் பெண்ணும் ஒரு அழகான பந்தத்தில் நுழைவது பற்றியது தானே?

இந்த கல்யாணங்களுக்கு செல்லும் சமயம் எல்லாம் நண்பர்களுக்காக மனதில் மகிழ்ச்சி கொண்டாலும் மனதின் ஓரத்தில் சின்ன உறுத்தல்.

4 தோசை வாங்கி 20 பேர் அதில் கை வைத்து 4 தோசையில் 1 தோசையை மேஜைக்கு தாரை வார்த்துக் கொண்டு உணவு உண்ட நாங்கள், 5 Dew வாங்கி 20 பேர் குடித்துக் கொண்டிருந்த நாங்கள்,பழகும் சமயம் நீ செட்டியாரா? கவுண்டரா? வன்னியாரா? இல்லை ஐய்யரா? என்று பார்த்து பார்த்து பழகாத நாங்கள். திருமணத்தில் மட்டும் கவுண்டராய், வன்னியராய், செட்டியாராய், ஐய்யராய் பிரிந்து போகிறோம்.

எங்க ஜாதியில் படித்த பெண்கள் கிடைப்பது மிக கஷ்டம்டா, எங்க கேஸ்ட்ல வேலைக்கு போற பொண்ணுங்க மாப்பிளை பாரின்ல இருக்கணும்ன்னு நினைக்கிறாங்க என்று கல்யாண விஷயத்தில் ஜாதி ஜாதி என்று 5 வருடங்களாக யார் எந்த ஜாதி என்று அறிந்து கொள்ளாத நான் எல்லோருடைய ஜாதியையும் தெரிந்து கொண்டு விட்டேன்.

இதில் இன்னும் வருத்தப்பட வைக்கும் விஷயம் ஏண்டா கல்யாணம் வேற கேஸ்ட்ல பண்ணிக்க வேண்டியது தானே போன்ற கேள்விகள் இது போன்ற சமயத்தில் எழாமலே இருந்து விடுவதுதான்.

ஜாதியை ஒழிக்கவே முடியாதா?

ராமர் விவகாரம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. நாசா புகைப்படம் என்ற ஒரு பொய்யான தடயத்துடன் ஒரு அற்புதமான அரசியல் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மூட மதி கொண்ட மக்கள் பலர் இதற்கு துணையாக பல துணைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ராமர், கிறிஸ்து, நபிகள் போன்றவர்கள் உண்மையில் இறைவனாகவும் இறை தூதர்களாகவும் இருந்தால் அவர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். ஏனெனில் அவர்கள் பேரில் மக்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி மனித இனத்துக்கே துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இதனை தடுத்து நிறுத்தாமல் இருக்கிறார்களே அதனால்.

இந்த மூடத்தனத்தை தடுத்து நிறுத்த இயலாததாலேயே இவர்கள் இறைவனாகவும் இறை தூதுவர்களாகவும் இருக்க முடியாது.

சில நாட்களுக்கு முன்னால் எங்கேயோ படித்த செய்தி ஒன்று விஞ்ஞானிகள் மனிதனின் எண்ணங்களை படித்து அதன் மூலம் வாகனங்களை நகர்த்தும் டெக்னிக்கை கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது ஆனால் சில காலங்களில் இது எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தப்படும் டெக்னாலஜியாகி விடும்.

இது ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் போன்ற உடல் அசைக்க முடியாத வாய் பேச முடியாதவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். ஆனால் இந்த டெக்னாலஜியின் உபயோகம் இதனுடன் முடிந்து விடப் போவதில்லை இது சில வருடங்களில் மனிதன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு டெக்னாலஜியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, August 19, 2007

GOD must be alien !!!! - 3

சமீபத்தில் Star Gate என்ற படம் பார்த்தேன். பிரமாதமான படம் ஒன்றும் இல்லை. எகிப்து பிரமீடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வித்தியாசமான ஒரு யந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். பழங்காலமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்திருந்த அந்த யந்திரம் மூலம் பல வெளிச்ச வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கிரகத்திற்கு அதனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியும் வேறு சிலரும் செல்கிறார்கள்.

அந்த கிரகத்தில் பல காலங்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய வம்சாவளியினர் ஆகியோர் அடிமையாக நடத்தப்படுவதைக் கண்டறிகிறார்கள். அந்த கிரகத்தின் உயிரினம் ஒன்று மனிதர்களை தன்னுடைய சக்தியால் இது போல நடத்துகிறது. இப்போது சென்ற மனிதர்கள் அந்த உயிரினத்தை முறியடித்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் என்னுடைய ஆர்வத்தைக் கிளறிய விஷயம் என்னவெனில் இந்த உயிரினம் மனிதர்களை எப்படி அடிமையாக்குகிறது என்றால், தான் ஒரு கடவுள் என்றும் அனைவரும் தன்னை வழிபட வேண்டும் என்று சொல்லி அடிமையாக்குகிறது. அந்த உயிரினத்தின் அறிவியல் நுட்பம் மூலம் கண்டு பிடித்த விமானம் போன்ற கருவிகளை பயன்படுத்தி தான் தான் கடவுள் என்று மக்களை நம்ப வைக்கிறது.

மனிதனுக்கு உள்ள ஒரு உணர்வு என்னவெனில் தன் அறிவுக்கு புலப்படாத விஷயங்களும் அனைத்துமே அனைத்தையும் இயக்கும் கடவுளால் தான் இயங்குகிறது என்று நம்புவது இல்லை அது தான் கடவுள் என்று நம்புவது.

இதனை உபயோகித்து தான் மனிதனை அந்த உயிரினம் அடிமைப் படுத்துகிறது.

இதே முட்டாள் தனம் பூமியிலும் நடக்கிறது. அடுத்தவனை அடக்கியாள வேண்டும் என்ற வேட்கையிலும் தனக்குத் தெரிந்தது தான் உண்மை என்ற மனிதனின் ஆணவத்தை நம்பித் தான் இன்றைய மதங்கள் இயங்கி வருகின்றன. மதங்கள் காலம் காலமாக அதன் உதவியால் அனுபவித்த வந்த அதிகாரம் போகம் போன்றவைகள் பறி போய் விடக் கூடாதே என்பதால் பலர் செத்தாலும் பரவாயில்லை என்று மூடத்தனத்தை இன்னும் மக்கள் மத்தியில் பரவச் செய்ய முற்பட்டுக் கொண்டிருக்கிறது சில கூட்டங்கள்.

மக்களும் ஆட்டு மந்தை போல அதன் பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் அந்த உயிரினத்திற்கு எதிராக பல வருடங்களுக்கு முன்னால் ஒரு புரட்சி வெடித்திருப்பதை கண்டு பிடிப்பான் கதாநாயகன். அந்த புரட்சியை பல வருடங்களுக்கு முன்னாலேயே அடக்கிய அந்த உயிரினம் மீண்டும் புரட்சி வெடிக்காமல் இருக்க மனிதர்களுக்குள் படிப்பு சொல்லிக் கொடுப்பதை நிறுத்த சொல்லி விடும். படிப்பு அறிவு இல்லாததால் அப்படி ஒரு புரட்சி நடந்த விஷயம் அப்படியே காற்றில் கரைந்து விடும்.

நம்முடைய வரலாற்றிலும் இது போன்ற பல தடவை நடந்திருக்கிறது என்பதும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சூனியக்காரிகள் என்று படித்த பெண்காளை எரித்தது. கலிலியோவை சிறையில் அடைத்து, மக்களை பாகுபடித்தி 1% மக்கள் மட்டுமே படித்தவர்களாக வைத்திருந்தது, பெண்கள் முகத்தை மூடி அடிமைப் படுத்துவது இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் எடுக்கலாம் நம்முடைய வரலாற்றில் இருந்து.

இன்றைய அறிவியல் யுகத்தில் வரலாற்றில் புரிந்த இதே கொடுமைகளை வேறு முகம் கொண்டு இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆதிக்க வாத சக்திகள். ஆனால் வரலாற்றில் மக்களுக்கு இல்லாத ஒரு விஷயம் இன்று நம்மிடத்தில் இருக்கிறது. அது தான் பல விஷயங்களைப் பற்றிய புரிதல், புரியாத விஷயங்களை புரிந்து கொள்ள முயலுதல்.

மனிதன் வடிவமைத்த இறைவனின் எந்த வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் மாயங்கள் நிறைந்ததாகவே அவை இருக்கின்றன. அப்படி மாயங்கள் நிறைந்தது தான் இறைவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மனிதன் இறைவனை அல்ல மாயம் செய்யத் தெரிந்த அவனை விட சற்று அறிவு அதிகம் கொண்டிருக்கும் ஒரு வேற்றுகிரகவாசியைத்(Alien) தான் தேடிக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் இறைவனை உணர மார்க்கங்கள் தேவையில்லை மதங்கள் மனிதனை இறைவன் அருகில் இல்லை அவனை தூர விலக்குகின்றன என்றே கருதுகிறேன்.

கடவுளை அவருடைய கட்டளைகள் அவருடைய வழி என்று கடவுளை மனிதனின் உருவாகவே வடித்து வந்திருக்கிறான் மனிதன். இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பதே ஒரு தூசி இந்த பிரபஞ்சத்தின் சக்தி வடிவம் தான் இறைவன் என்றால் மனிதன் என்பவன் ஒன்றுமே இல்லாத ஒரு துகள் அதனை அறிந்து அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சின்ன வாழ்வில் அமைதியாக வாழ்ந்து வருவதே அறிவுள்ளவன் செயல்.

Tuesday, August 14, 2007

ரௌலிங் முட்டாளாக்குகிறாரா?

சில சமயம் சில பதிவுகளைப் படிக்கும் போது எரிச்சல் வரும் கோபம் வரும்.

எனக்கும் இந்தப் பதிவைப் படித்த உடன் கோபம் எரிச்சல் தான் வந்தது ஆனால் அதனை விட மிகுந்து வருத்தம் வந்தது.

அந்தப் பதிவில் இருந்து சில Excerpts

"இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும்."

ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா?

ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள்.

இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!

முதலில் ரௌலிங் பற்றியும் அவரது பதிப்பகத்தாரான Bloomsbury பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரௌலிங்க்கு முதன் முதலில் இந்த கதை உருவான இடம் ஒரு ரயில் பயணத்தில் 1990ல். அவர் கதை புத்தகமாக வெளியானது 1996ன் கடைசியில். இந்த ஏழு வருட காலகட்டத்தில் ரௌலிங்கின் வாழ்க்கையை சற்றுப் பார்க்கலாம். இங்கிலாந்தில் பிறந்த ரௌலிங் போர்ச்சுகலை சேர்ந்த ஒருத்தரைக் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுகல் செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் திருமணம் ரத்தாகி இங்கிலாந்து வருகிறார்.

வேலை எதுவும் இல்லாததால் இங்கிலாந்து அரசாங்கம் கொடுக்கும் Welfareல் சில காலம் ஒரு வயது கூட முடியாத குழந்தையுடன் காலம் தள்ளுகிறார். குழந்தை தூங்கிய உடன் கிடைக்கும் நேரத்தில் மட்டும் எழுதுகிறார். இப்படியே 6 வருடம் எழுதிய முடித்த உடன் ஒரு ஏஜண்டுக்கு இரு பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் அடிக்கிறார்(ஜெராக்ஸ் எடுக்க பணம் இல்லாததால்). முதல் ஏஜண்ட் அவருடைய கதையை பிடிக்காமல் திருப்பி அனுப்பும் சமயம் ரௌலிங் அனுப்பிய பைல் பெரியதாக இருந்ததால் அதனை திருப்பி அனுப்பாமல் விட்டு விடுகிறார்.

மீண்டும் அவர் எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் செய்து இரண்டாவது ஏஜெண்டிடம் அனுப்புகிறார். இரண்டாவது ஏஜெண்ட் கதை பிடித்துப் போய் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்.

அதே சமயத்தில் ஒரு டீச்சராக வேலைக்கு ஒரிடத்தில் சேருகிறார். இரண்டாவது புத்தகம் வெளியாகும் வரை டீச்சராகவே பணி புரிகிறார். இரண்டாவது புத்தகம் வெளியான அதே சமயம் அமெரிக்க பதிப்பகத்தார்(Scholastic) முதல் கதையை அமெரிக்காவில் வெளியிட அந்த சமயத்தில் மிக அதிகமான தொகையாக கருதப்பட்ட 1 லட்சம் டாலருக்கு எடுத்துக் கொள்கிறார்(இன்று ரௌலிங்கின் மதிப்பு ஒரு பில்லியனுக்கு மேலே என்று கணக்கிடப்படுகிறது).

Bloomsbury குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். இந்தியாவில் குழந்தைகள் பதிப்பகங்களின் கதை எப்படியோ அதே போலத்தான் Bloomsbury கதையும். மிகப் பெரிய பதிப்பகம் கிடையாது. சில நூறு புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். ஹாரிப்பாட்டரின் முதல் புத்தகம் 1000த்துக்கும் குறைவாகவே வெளியிடப் பட்டது.

இன்று ஹாரிப்பாட்டர் புத்தகங்கள் வெளியாகும் முன்னரே 30 லட்சம்(இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்) விற்றுத் தீர்ந்திருக்கின்றன. வெளியான முதல் நாள் மட்டும் 1.1 கோடி புத்தகம் வெளியான 10 நாளில் 15 கோடி புத்தகம் விற்றிருக்கிறது.

ஏழு புத்தகங்களும் சேர்த்து 350 மில்லியன் அதாவது 35 கோடி புத்தகங்கள் 64 மொழிகளில் விற்றிருக்கிறது.

குழந்தைகள் நாவல் என்று இல்லை எந்த ஒரு நாவலும் இது வரை ஹாரி பாட்டர் அளவுக்கு விற்றதில்லை விற்கவும் போவதில்லை.

இந்தப் புத்தகம் வெளியான சமயம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஒன்றும் பெரிய players கிடையாது. எதோ 1 கோடி போட்டி இரு கோடி எடுக்கும் வியாபாரத் தந்திரம் எல்லாம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தாலும் செய்திருக்க முடியாது. இந்த நாவலைப் படித்த ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் சொல்லி அப்படியே தான் பிரபலமானது ஹாரி பாட்டர்.

இந்த உலகம் ஐடியல் உலகம் கிடையாது. 1000 ரூபாய் சட்டை வாங்கி போடும் சமயம் 100 ரூபாய்க்கு சட்டை இருக்கு அதை வாங்கிப் போட்டுட்டா போதும் மீதி 900 ரூபாய் அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவலாம் என்று எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம்.

இவ்வளவு பேரும் புகழும் கிடைத்ததால் ரௌலிங் கெட்டவரா? இந்தியாவின் மீடியாக்களுக்கு காசு கொடுத்து அவர் தான் இது போன்ற செய்திகளை காட்டச் சொல்கிறாரா? கண்டிப்பாக ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே கிடையாது.

இது போல எத்தனை புத்தகங்கள் இதே போன்ற வியாபாரத் தந்திரம் மூலம் விற்றுத் தீர்ந்திருக்கிறது? இந்தப் பதிவில் எழுதி வைத்திருக்கிறேன் இனி மேல் ரௌலிங் நினைத்தால் கூட ஹாரி பாட்டர் போன்ற பிரபலமான ஒரு புத்தகம் எழுத முடியாது இது போன்ற ஒரு euphoria இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு புத்தக வெளியீட்டால் வராது.

ஹாரிபாட்டர் வெளியாகும் அதே நாளில் அந்தப் புத்தகம் பல லைப்ரரிகளுக்கும் அனுப்ப பட்டுள்ளது.

ரஜினி படத்திற்கு 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்றது அதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்? ரஜினி இதில் எல்லாம் தலையிட்டு கூடாது என்று சொல்ல வேண்டுமா?

அப்படி சொல்ல வேண்டும் என்று கருதுபவர் 100 ரூபாய் சட்டைக்காரரைப் போல Ideal நபராக இருக்க வேண்டும் இல்லை என்றால் முதுகைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Thursday, August 09, 2007

GOD must be alien !!!! - 2

நமக்கு காய்ச்சல் தலைவலி போன்றவை வருவதற்கு காரணியாக இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை உயிரினம் என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே தோன்றுகிறது உயிரினங்களில் மிக முக்கியமான ஒரு ஆற்றல் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வது தான். மனிதன் ஒரு நுட்பம் வாய்ந்த மிருகம் என்று அறியப்படுவதற்கு பலர் அவனுடைய மூளை தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு பரிணாம வளர்ச்சி மூளையை விட மிக முக்கியமான ஆயுதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அதுதான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் மற்ற மிருகங்களிடத்தில் இருந்து தாக்குப் பிடிக்க வைத்தது. அதுதான் Opposable Thumb( எதிர்மறையான வளையக் கூடிய பெருவிரல்).

ஒரு நாய் நம் மீது கல் எடுத்து எறிய முடியுமா? இல்லை கம்பு எடுத்து சுற்ற முடியுமா? அதற்கு கை இல்லை அதனால் முடியாது என்றால் உண்மை இல்லை. நாய்க்கு நம் போலவே கை இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட அது முடியுமா? முடியாது ஏனென்றால் அதனுடைய பெருவிரல் அமைப்பு அது போல இல்லை. கீழ்கண்ட விஷயங்களை பெருவிரல் உதவி இல்லாமல் செய்து பார்க்க முயற்சி செய்தால் இதன் மகத்துவம் நமக்குத் தெரியும்.

1. ஒற்றைத் தாள் பேப்பரை எடுத்துப் பாருங்கள்
2. ஒரு மேஜை மேல் இருக்கும் பேனா இல்லை பேப்பரை எடுத்துப் பாருங்கள்.
3. புத்தகத்தை கையில் எடுத்து பக்கங்களை பெருவிரல் உதவி இல்லாமல் திருப்பிப் பாருங்கள்.

இது போல நாம் அன்றாடம் செய்யும் பல விஷயங்களுக்கு பெருவிரலை எவ்வளவு தூரம் நம்பி இருக்கிறோம் என்று தெரியும். ஏகலைவன் பெருவிரலை துரோணர் கேட்டது என்ன ஒரு கோழைத்தனமான செயல் எனபது பெருவிரல் மகிமை புரிந்தால் தான் தெரியும்.

இப்படிப்பட்ட மகத்துவமான பெருவிரல் மனிதர்களுக்கு மட்டும்தான் மிக சரியான முறையில் அமைந்திருக்கிறது. நம் முன்னோர்களான குரங்குகளுக்கும் இது ஒரு அளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

மனிதன் இனம் இன்று பெருமிதம், சிறுமிதம் கொள்ளும் பல ஆற்றல்களுக்கு மிக முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயற்கையின் இந்த சிறிய பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு தான்.

இதே போல பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் இந்த கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளிடத்திலும் இருக்கிறது. எய்ட்ஸ் நோய் உருவாக்கும் வைரஸ் கிருமி இந்த பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு ஒரு மிக மிக சிறந்த உதாரணம்.

இந்த கிருமிகளை ஆங்கிலத்தில் பாராசைட் என்று சொல்லுவார்கள். பாராஸைட் என்பதற்கு விளக்கம் என்னவெறால் மற்ற உயிரினங்களிடத்தில் ஒட்டிக் கொண்டு அதனால் உயிர் வாழ்ந்து கொண்டு அதற்கு துன்பம் விளைவிக்கும் உயிரினம்(மனிதனையும் பூமியின் பாராஸைட் என்று சொன்னால் தவறில்லையோ?).

இந்த வைரஸ்கள் மனிதனுக்கு துன்பம் விளைவிக்கின்றன என்பதால் மனிதன் அதற்கு எதிராக மருந்துகளை கண்டு பிடித்தான். இந்த வைரஸ்கள் அந்த மருந்துகளுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானதுதான் எய்ட்ஸ் வைரஸ்.

இதனை சற்று வேறு மாதிரியாக யோசித்துப் பார்க்கிறேன் நமக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கிருமிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போமா இல்லை இவற்றை எதிர்க்கும் ஆற்றலாகிய மருந்துகளை கண்டுபிடித்திருப்போமா இல்லை இவற்றைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்போமா?

ஒரு வகையில் பார்த்தால் மனிதன் என்பவன் இந்த கிருமிகளுக்கு கடவுள் போல. மனிதன் இல்லையென்றால் பல கிருமிகள் உருவாகி கூட இருக்காது அதே போல் மனிதன் நினைத்தால் இந்த கிருமிகளை அழித்து விட முடியும்.

நாம் கடவுளைப் எந்த வகையில் பார்க்கிறோமோ இந்த கிருமிகளுக்கு யோசிக்கும் திறன் இருந்தால் மனிதனைப் பற்றி அதே போல யோசிக்கலாம்.

ஆனால் மனிதன் என்பவனுக்கு இந்த கிருமிகளைப் பற்றி கவலையே இல்லை காய்ச்சல் வந்தால் மருந்து சாப்பிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அவனுக்கு முக்கியம் மற்றபடி வேறு கவலைகள் இல்லை.

இந்த பிரபஞ்சத்துடன் மனிதனை ஒப்பிட்டால் அவன் ஒரு கிருமி கூட கிடையாது.

இந்த கிருமிகளையும் மனிதனையும் ஒரே சமயத்தில் பெரிது படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம் இந்த கிருமி மனிதன் அளவுக்கு பெரிது படுத்தினால் அதே அளவில் பெரிதுபடுத்தப்பட்ட மனிதன் இமய மலை அளவுக்கு இருப்பான்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் இமய மலை அளவு பெரியதாக இருக்கும் ஒன்று மனிதன் அளவில் இருக்கும் கிருமிகளை துன்பம் விளைவிக்கிறது என்பதற்காக மட்டும் கண்டு கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தை, இது போன்ற பல பிரபஞ்சங்களை ஆட்டுவிக்கும் சக்தி ஒன்று மனிதனை ஏன் கண்டு கொள்ள வேண்டும் இல்லை மனிதன் ஏன் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாக வேண்டும்?

இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் கண்டிப்பாக மனிதன் என்பவன் சும்மா இந்த சக்தி தான் நம்மை இயக்குகிறது என்பது கப்ஸா நாமும் ஏதோ அப்படியே இருக்கிறோம் அவ்வளவுதான் மற்றபடி கடவுள் என்ற அந்த சக்திக்கு மனிதன் என்ன செய்கிறான் அவன் எப்படி இருக்கிறான் என்ற கவலை எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது.

கடவுள் விதித்தபடி நான் வாழ்கிறேன் என்பது போன்ற வாக்கியங்கள் என் கடவுள் விதித்த விதி உன் கடவுள் விதித்த விதி என்பதெல்லாம் மூடத்தனத்தின் உச்சகட்டம் இல்லை ஆணவத்தின் இமயம்.

எல்லாவற்றையும் இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் அந்த சக்தி மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதெல்லாம் முக்கியத்துவமாக இருக்காது. அல்லா, கிறிஸ்து, ராமர் என்பதெல்லாம் இந்த சக்தியை குறிக்காது. கடவுள் விதித்தது என்று ஒன்றுமே இருக்காது.

மனிதனுடைய உடல் இல்லாமல் இயங்க முடியாது கிருமிகள் போலத்தான் நாமும் இந்த பூமியில். இந்த பூமி இல்லை என்றால் இயங்க முடியாத ஒரு கிருமி. அந்த கிருமியை நாம் எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறோமோ அதே போலத்தான் இந்த பூமியில் நாமும் இருக்கிறோம்.

பிரபஞ்ச இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் நாம் கடவுள் என்று யோசித்துக் கொண்டிருப்பது உருவகித்துக் கொண்டிருப்பது எதனை அல்லது எவற்றை?

ஆடு மாடுகளை நாம் நடத்துவது போல நம்மை நடத்தும் ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆடு மாடுகளுக்கு மின்சாரம் என்பது எப்படி ஒரு மாயாஜாலமோ அதே போல நமக்கு மாயாஜாலமாக தெரியும் அல்லது தெரிவிக்கும் சக்திதான் நமக்குக் கடவுள் அது வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது ஏனென்றால்....

Monday, April 09, 2007

GOD must be alien!!!! - 1

"Hayflick limit" பூமியில் உள்ள உயிரினங்கள் ஏன் முதுமை அடைகிறான் ஏன் இறந்து போகிறான் என்பதை மிக எளிய முறையில் விளக்கும் கண்டுபிடிப்பு. உயிரினங்களுக்கு அடிப்படையானவை செல்கள். ஆணின் விந்து பெண்ணின் ஓவத்துடன் இணைந்த உடன் ஒரு செல் ஒன்று உருவாகுகிறது. இந்த ஒரு செல்லில் இருந்து தான் மனிதன் என்பவன் உருவாகுகிறான். இந்த ஒரு செல் விந்து ஓவத்துடன் இணைந்த சிறிது நேரத்திலேயே பல செல்களாக பிரியத் துவங்குகிறது.

மனிதனுடைய உடலில் பல வகையான செல்கள் உள்ளன. நமது தோலில் உள்ள செல்கள் நமது ரத்த நாளங்களில் உள்ள செல்களை விட வித்தியாசமானவை. ஆனால் இவை அனைத்தும் ஒரே ஒரு செல்லில் இருந்து தான் உருவாகுகிறது. அந்த ஒரு செல் ஒத்த பல செல்களாய் மாறிய உடன், ஒவ்வொரு செல்லிலும் சில ஜீன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். மற்ற ஜீன்கள் வேலை செய்யாமல் அமைதியாகி விடும். இப்படி ஜீன்கள் வேலை செய்வதையும் செய்யாததையும் பொறுத்து அந்த ஒரு செல்லில் இருந்து பிரிந்து வந்த ஒத்த செல்கள் வேறு வேறு செல்களாய் மாறத் தொடங்கும்.

இப்படி ஒவ்வொரு செல்லும் மாறி வேறு வேறு செல்களாய் மாறுவதை Cellular differentiation என்று சொல்லுவார்கள்.

இந்த Cellular differentiation முழுமை அடைந்த உடன், நம் உடலில் உள்ள செல்கள் பிரியத் தொடங்கும், பிரிந்து புது செல்களாய் செல்கள் உருவாக உருவாக பழைய செல்கள் இறக்கக் துவங்கும். ஆனால் இந்த செல்கள் பிரிந்து கொண்டே இருப்பது இல்லை ஒரு குறிப்பிட்ட தடவை பிரிந்த உடன் இந்த செல்கள் மீண்டும் பிரியும் தன்மையை இழக்கின்றன. இப்படி எத்தனை தடவை இந்த செல்கள் பிரியும் என்பதை மிக துல்லியமாக வரையறுத்து சொல்வதுதான் "Hayflick limit".

மனிதர்களுக்கு "Hayflick limit" 52, அதாவது மனிதர்களுடைய செல்கள் 52 தடவை மட்டுமே பிரிந்து போகும் தன்மை கொண்டது. இதில் முதல் முறையாக உருவான செல்களுக்கும் 52 தடவை உருவாகும் செல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. 52 தடவை பிரிந்து உருவான செல்களால் தான் முதுமை உருவாகுகிறது.

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 100,000,000,000,000 செல்கள் அதாவது 1 போட்டு 14 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனை வருமோ அத்தனை செல்கள்.

ஆனால் இதில் இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் 10 போட்டும் 14 பூஜ்ஜியங்கள் போட்டால் வரும் தொகை கொண்ட செல்களை உடைய நாமும் ஒரே ஒரு செல் கொண்ட ஒன்றும் உயிரினம் தான். இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் நம்முடைய கொள்ளு கொள்ளு கொள்ளு என்று பல கொள்ளு போட்டால் கிடைக்கும் கொள்ளுத் தாத்தா இந்த ஒரு செல் உயிரினம் தான்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நம்மால் பார்க்க முடிந்த அண்டவெளிகள் மட்டும் 100, 000, 000, 000 அதாவது 1 போட்டு 11 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனையோ அத்தனை. நம்மால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எத்தனை அண்டவெளிகள் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நம் உடலில் இருக்கும் ஒரு செல் மட்டும் தனியாக எடுத்தால் நம் கண்களுக்குக் கூடத் தெரியாது. இந்த பிரபஞ்சத்தை ஒரு உருவமாக எடுத்துக் கொண்டால் நம் அண்ட வெளி என்பது ஒரு செல் என்று வைத்துக் கொள்ளலாம் அதாவது நமது அண்டவெளி என்பது கண்களுக்குப் புலப்படாத ஒரு செல் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் சமயம். இந்த அண்ட வெளியுடன் ஒப்பிடும் சமயம் நமது சூரியனை ஒரு செல்லாக கருதலாம். அதாவது நமது மொத்த அண்டவெளியையும் மனிதன் உருவத்துக்கு சுருக்கினால் சூரியனை கண்களால் காண இயலாது.

நமது சூரியனை மனிதனையும் ஒப்பிடவே முடியாது. ஒரு லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்த சூரியனுடன் நம்மை எப்படி ஒப்பிடுவது?

இதற்கும் இந்த பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

கடவுள் என்பவரைப் பற்றி நாம் யோசிக்கும் சமயத்தில் எல்லாம் நாம் அவர் எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்தி வடிவமாகத்தான் கருதுகிறோம்.

இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தி வடிவம் இறைவன் என்று வைத்துக் கொண்டால் நம்மையும் அவரேதான் கட்டுப்படுத்துகிறார் என்பது ஆணவத்தின் உச்சகட்டம். இந்த பிரபஞ்சத்துடன் நம்மை ஒப்பிட்டு நாம் தூசு என்று நினைத்தால் கூட அது ஆணவத்தின், மூடத்தனத்தின் உச்ச்சகட்டம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் நம்மையும் ஒரே சக்தி கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டால் அது நம்முடைய மூடத்தனத்தின் உச்சகட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த பிரபஞ்சத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்தி தான் உண்மையான இறைவன். அப்படி என்றால் கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது யாரை எதனை?

கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வேற்றுகிரகவாசிகளாக தான் இருக்க வேண்டும். முட்டாள்தனமாக தோன்றினாலும் இது தான் உண்மை என்பதற்கு நம்முடைய எல்லாப் புனித நூல்களிலும் உதாரணங்கள் இருக்கின்றன நம் கண் முன்னே இதற்கு சாட்சியங்களும் இருக்கின்றன. அவை என்னவென்றால் ......

Wednesday, January 10, 2007

atheism-myth understood??!!

"பகுத்தறிவு என்பது மர்மங்களை அறிந்து கொண்டது. "

எங்கேயோ எப்போதோ படித்த வாசகம் இது. பல சமயங்களில் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன்.

சினிமா நடிகைகளின் இடுப்பு, அவர்கள் கட்டியிருக்கும் சேலை ஆகியவற்றுக்கு அடுத்து மனித குலத்தைக் ஆர்வத்தை சுண்டி இழுப்பதில் மர்மங்களுக்கு பெரிய பங்கு உண்டு.

பிரேமானந்தா போன்ற போலிச் சாமியார்களின் வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, கையில் விபூதி கொட்டச் செய்வது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மனிதர்கள் ஏமாறுவது மனிதர்களுக்கு மர்மங்களில் உள்ள ஆர்வத்தாலும், ஈர்ப்பினாலும்தான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை தவிர்த்தும் பல மர்மங்கள் இந்த உலகில் உண்டு.

ஆவிகள் என்பது இன்னும் மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாத மர்மம் தான். பெர்முடா முக்கோணம் என்பதும் இன்று மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே இருக்கிறது. சில மனிதர்களுக்கு இருக்கும் சக்திகள் இல்லை சிலரால் செய்ய முடிகின்ற சில செயல்கள்(உதா யூரி கெல்லரின் ஸ்பூனை கண் பார்வையாலேயே வளைக்கும் திறன்) போன்றவை மர்மமாகவே இருக்கிறது. Ripley's beleive it or not போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும் சில விஷயங்கள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இது போன்ற மர்மங்கள் அனைத்தையும் பகுத்தறிவு அறிந்து கொண்டேன் என்கிறது இந்த சொல்லாடல்.முதன் முதலில் இந்த வாசகத்தைப் படித்த சமயம், இவ்வளவு மர்மங்களையும் அறிந்தேன் என்று சொல்கிறதே என்ன ஒரு ஆணவமான சொல்லாடல் என்று தோன்றியது.

பின் யோசித்துப் பார்க்கும் சமயம் இன்றைய உலகில் மர்மங்கள் என்பது குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது.

Big bang என்பது தெரியும் முன்னால் எப்படி இந்த உலகம் உருவானது என்பதே ஒரு மிகப் பெரிய மர்மம்தான். இன்றும் அது மர்மம் இல்லை அதனை அறிந்து கொண்டேன் என்று சொல்ல இயலாது என்றாலும் அந்த மர்மத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்து விட்டது என்பதை அறிவுள்ளோர் அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இதே போன்று பல மர்மங்களின் முடிச்சு அவிழ்ந்து கொண்டே தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஆவிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில ஒரு விதமான பிரமிப்பாக ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில் psychon என்ற பொருள் ஒன்று இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இந்த் பொருள்கள் உடலுக்குள் எல்லா இடங்களில் பரவி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பொருள் ம் உடலுக்குள் நம்முடைய உணர்வுகளை நரம்புகள் மூலம் எடுத்துச் செல்ல உதவுகின்றதாக கூறுகிறார்கள். மேலும் இந்த்ப் பொருள்கள் நாம் இறக்கும் சமயம் நம் உடலை விட்டு வெளியே வெளியேறி ஆவி போன்ற தோற்றம் அளிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சி மூலமாக நிறைவேறாத ஏக்கம், ஆசை உள்ளவர்கள் ஆவியாகுகிறார்கள் என்று இருக்கும் நம்பிக்கைகள் கூட விளக்க முடியும் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு கேபிள் இல்லாமல் ஆண்டனா மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் வீடுகளில் பக்கத்தில் கேபிள் ஒயர் சென்றால் சன் டீவி புள்ளி புள்ளியாக தெரிகிறது இல்லையா அது போலத்தான் இதுவும் என்கிறார்கள். நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கும் எண்ணங்கள் வெளியே கசிவதால் உண்டாகும் பிம்பங்களை பிரதிபலிப்பே ஆவி என்பது போல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்படும் உணர்வு அல்லது அவர்கள் யோசிப்பது சில சமயம் வாய் விட்டு சொல்லாமலே நமக்குப் புரிகிறது இல்லையா? அதுவும் இந்த வகையையே சார்ந்ததே.

இது ஒரு வகை ஆராய்ச்சியே வேறு விதமாகவும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களுக்கு இருக்கும் விஷேசமான சக்திகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

கண் தெரியாத ஒருவருக்கு ஏன் கேட்கும் திறன் அதிகமாக இருக்கிறது? அந்த சக்தியை அவர்கள் அதிகமாக நம்பி இருப்பதால் அந்த சக்தியை நமது மூளை அதிகமாக வளர்த்து விடுகிறது. இதே போல மோப்ப சக்தி மனிதர்களுக்கு ஏன் இல்லை ஏனெனில் மோப்ப சக்தியை நம்பி மனிதர்கள் வாழவில்லை. அவனுக்கு ஏதேனும் ஒரு காரணத்திற்காக அது அதிகமாக தேவைப்பட்டிருந்தால் அந்த சக்தி அவனுக்கு இருந்திருக்கும். இதே போல தான் விஷேசமான சக்திகளும் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டு வருகிறது.

ஒரு ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு ஏன் telepathy சக்தி இல்லை மனிதர்களுக்கு இது ஒரு அத்தியாவசியமான ஒரு தேவை இல்லை. அதனால் அந்த சக்தியை மூளை வளர்த்துக் கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். மேலும் அந்த ஆராய்ச்சியில் ஆபத்துக் காலங்களில் இல்லை நம்மையே அறியாமல் பல சமயம் நாம் டெலிபதி போன்ற சக்திகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். யாராவது நெருங்கிய உறவினருக்கு ஆபத்து ஏற்படும் சமயம் அவருக்கு நெருக்கமானவர்கள் அதனை உணர்வது போன்ற சம்பவங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதெல்லாம் நாம் நம்மை அறியாமலே telepathy உபயோகித்து செய்வதாக சொல்கிறார்கள்.

இந்த சக்திகளை மனிதர்களால் வளர்த்துக் கொள்ள முடியுமா என்றும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு பக்கத்து அறையில் மாட்டி இருக்கும் ஓவியம் என்ன என்பதை அறியும் ஆராய்ச்சிகள். இதன் மூலம் டெலிபதி உணர்வு மூளையின் எந்தப் பகுதியில் இருந்து செயல்படுகிறது என்பது போன்றவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

யூரி கெல்லர் spoonஐ வளைத்துக் காட்டியது போல இன்னும் பல விஷயங்கள் மனிதர்களால் செய்ய முடியும் ஆனால் spoonஐ வளைப்பதை விட வேறு முக்கியமான பல விஷயங்கள் இருப்பதால் அவர்கள் செய்வதில்லை என்றும் சொல்கிறது ஆராய்ச்சி.

இதே போலத்தான் பெர்மூடா முக்கோணம் குறித்த ஆராய்ச்சிகளும் காந்த சக்தி, மின் சக்தி போன்றவை இந்தப் பகுதிகளில் சீராக இல்லாத காரணங்களால் கப்பல்கள், விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் இல்லை வேறு விதமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஆகவே உலகில் உள்ள மர்மங்களை எல்லாம் அறிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவமானதாக ஆரம்பத்தில் தோன்றினாலும் அதனைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் சமயம் வேறு விதமாக தோன்றுகிறது.

அந்த சொல்லாடல் மர்மங்களை அறிந்து கொண்டேன் என்று சொல்வது மர்மங்களை முழுவதுமாக புரிந்து கொண்டேன் என்பது போல அர்தத்தில் இல்லை. ஆனால் அதன் அர்த்தம் எந்த விதமான மர்மமாக இருந்தாலும் அதனை புரிந்து கொள்ள தேவையான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் அமைந்திருக்கிறது.

நிற வெறி என்பது melanin பற்றிய மர்மத்தை அறிந்து கொள்ளாததால் உருவானது. ஜாதிகள் எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து மனிதர்களாக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாததால் உருவானது தான். இன்று ஏற்படும் மத சண்டைகள் பிரபஞ்சத் தோற்றத்தில் தொடங்கி எல்லா விஷயங்களிலும் பிற மதம் மட்டும் தப்பு தப்பாக போதிக்கவில்லை தன் மதமும் தப்பு தப்பாகத் தான் போதிக்கிறது என்பதை உணராததால் வருவது தான்.

மர்மங்களை புரிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவம் இல்லை அறியாமையில் இருந்து வெளியே வரும் ஒரு வாயில்.

மதனின் மனிதனும் மர்மங்களும் படித்த போது தோன்றிய சில சிந்தனைகள்.