Wednesday, May 03, 2006

மதம்தனை புறக்கணியுங்கள்

மதங்கள் மனிதனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. அவனுக்கு நீதி போதனை, தர்மம், ஒழுக்கம், மனித நேயம் போன்றவைகளை கற்றுத் தரவே மதங்கள் உருவாக்கப்பட்டன. ராமர் நம்மிடையே வாழ்ந்து வந்தால் பாபர் மசூதியை இடிக்க அனுமதி சொல்லி இருப்பாரா? கிறிஸ்து சிலுவைப் போர் என்ற பெயரில் படை எடுக்கச் சொல்லி இருப்பாரா? முகமது நபிகள் இன்று இஸ்லாமிய தீவிரவாதத்தை அனுமதித்திருப்பாரா?

பாபர் மசூதி இடிப்பு, சிலுவைப் போர், இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் அல்ல தீண்டாமை, நிற வெறி, பெண்ணடிமைத்தனம் என்று மதம் என்ற பெயரால் மனிதன் என்னென்ன கொடுமைகளைச் செய்கிறான். இது மனிதனின் தவறு என்றாலும் அதனை மனிதன் எந்த ஒரு மன கிலேசமும் இல்லாமல் செய்ய மதம் அவனுக்கு சலுகை அளிக்கிறது.

எந்த ஒரு கொலைக் குற்றவாளிக்கும் குற்ற உணர்வு என்பது இருக்கும் அப்படி இல்லாதவனை நாம் சைக்கோ என்ற கொடூர புத்திக்காரன் என்கிறோம் ஆனால் இன்று மதத்தின் பெயரால் புனிதப் போர் என்று ஒரு சைக்கோ கூட செய்ய இயலாத கொடூரங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மதங்களின் பெயரால் அரசியல் பலம் வேறு இவர்களுக்கு அதனால் இவர்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனையும் கிடையாது.

மதம் என்பது இன்று மனிதனின் ஆக்கங்களுக்கு பயன் படுவதை விட அவனுடைய அழிவிற்கே வழி வகுக்கிறது.

மனிதனின் கொடூர புத்தியையும், வக்கிர எண்ணங்களையும் குற்ற உணர்வு இல்லாமல் நியாயப் படுத்திக் கொள்ளவே மதம் இன்று பயன்படுகிறது.

ராமர் கோயில் இடித்தவர்களும், சிலுவைப் போர் புரிபவர்களும், இஸ்லாமிய தீவிரவாதிகளும் மதம் என்ற ஒன்று இல்லை எனில் இந்த கொடுரங்களை செய்வார்களா? செய்வார்கள் ஏனெனில் அவர்களின் வக்கிர புத்தி அது இல்லை எனில் மற்றொரு கொடுமையில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கும் ஆனால் அந்த சமயத்தில் அவர்களால் புனிதப் போரில் ஈடுபட்டதாக நம் பின்னால் ஒளிந்து கொள்ள முடியாது.

என் மதத்தை நம்பி இருக்கும் பல கோடி மக்களுக்காக செய்தேன் என்று தன்னுடைய செயலுக்கு காரணம் காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது.

பிறப்பால் ஹிந்துவாகிய நான் இன்று ஹிந்து மதம் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதால் இன்று மதக் கலவரங்கள் நிற்கப் போவதில்லை.

நான் ஹிந்து, நீ முஸ்லீம் நாம் இருவரும் சகோதரர் என்று வாழ்ந்தால் மதங்களின் பெயரால் நடக்கும் கொடுமைகளை நிறுத்த முடியாது.

ஏனெனில் நான் ஹிந்து என்று அடையாளம் காட்டிக் கொள்வதாலேயே ஹிந்துவின் காவலர்கள் என்று கொடுமைகள் புரிகிறார்கள்.

ஹிந்து, முஸ்லீம் என்ற அடையாளங்கள் களையப்பட வேண்டிய நேரம் வந்தாகி விட்டது அந்த மாதிரி அடையாளங்களை களையப் படாவிட்டால் கண்டிப்பாக நியுக்கிளியர் பாம் மதங்களின் பெயரால் வீசப் பட்டு மனித குலம் அழிவைச் சந்திக்கும்.

அது அந்த பாம் வீசிய ஒரு தனி ஒரு மனிதனின் தவறாக கண்டிப்பாக இருக்காது, மதம் என்ற ஒன்றை பின் பற்றிக் கொண்டிருக்கும் எல்லா மனிதர்களின் தவறும்தான்.

5 comments:

')) said...

மதங்கள் யாவும் ஒரே மூலத்திலிருந்தே வந்தன என்று நம்புகிறேன். மதங்களை நாம் புறக்கணிக்கக் கூடாது. மாறாக, மதத்தின் பெயரால் தவறான போதனைகளுக்கு தம் மதத்தவர்களை ஆட்படுத்திக்கொண்டிருக்கும் மூடத்தனமான மதத்தலைவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

அவர்கள் செய்வது என்ன?
தமது (அரசியல் மற்றும் சொந்த) ஆதாயங்களுக்காக அப்பாவிகளை பலியாடுகளாக்குவது தான்.

மதம் மனிதனை நல்வழிப்படுத்தவே வந்தது என்பதை உணரும் ஒவ்வொருவரும் தாமே தமது மதத்தை ஆய்ந்தறிய முயல வேண்டும். மொத்தத்தில் கல்வியறிவு அவசியம்.

')) said...

மதம் முக்கியமா? மனிதம் முக்கியமா? மதம் உள்ளவரை மனிதம் மேலும் மேலும் குறைந்து கொண்டே வருகிறது ஆகவே மதம் என்ற நம்பிக்கைகளை களையாவிடில் மதத்தால் மனிதர்களின் அழிவு நிச்சயம்

')) said...


ஹிந்து, முஸ்லீம் என்ற அடையாளங்கள் களையப்பட வேண்டிய நேரம் வந்தாகி விட்டது அந்த மாதிரி அடையாளங்களை களையப் படாவிட்டால் கண்டிப்பாக நியுக்கிளியர் பாம் மதங்களின் பெயரால் வீசப் பட்டு மனித குலம் அழிவைச் சந்திக்கும்.

குமரன் அற்புதமாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
நீங்கள் சொல்லியிருப்பதுபோல், மத நம்பிக்கையற்றவர்களால் உலகில் இதுவரை எந்தவிதமான பெரிய கலவரங்களும் - வன்முறைகளும் - படுகொலைகளும் ஏற்பட்டதில்லை. ஆனால், யார் மத நம்பிக்கையாளர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ, மிகுந்த கடவுள் நம்பிக்கையாளர்காளக அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ அவர்கள்தான் மக்களை கூறுபோட்டு - சமூகத்தை பிணக்காடாக்கி வருகின்றனர்.
எனவே நீங்கள் கூறியிருப்பது போல் மத அடையாளங்கள் நிச்சயம் களைப்பட வேண்டும். அது குல்லவாக இருந்தாலும், விபூதியாக இருந்தாலும், சிலுவையாக இருந்தாலும் - மொத்தத்தில் மனித நேயம் தேவைப்படுகிறது. இது குறித்து செல்வன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். மிகவும் ரசிக்கத்தக்கதாகவும், அது சமயம் மனித நேயத்தையும் - ஜனநாயகத்தையும் வலியுறுத்தும் பாணியில் பதிந்திருக்கிறார். உங்கள் பணிகள் சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.

')) said...

நன்றி இப்னு ஹம்துன் அவர்களே, நன்றி சந்திப்பு அவர்களே

பனிப் போர் ரஷ்யாவிற்க்கும், அமெரிக்காவிற்க்கும் முடிந்த பின்

இன்று நியுக்கிளியர் பாம் போடும் நிலை

இஸ்ரேல் - அமெரிக்கா - அரபு நாடுகள் இடையே உள்ள மத வேறுபாடுகளாயே உருவாகி உள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயும் மதத்தின் பெயராலேயே நியுக்கிளியர் பாம் ஒருவர் மேல் ஒருவர் போடுவோம் என்ற நிலை உள்ளது.

மக்களின் எண்ணங்கள் மாறவில்லை எனில் மனித குலம் மதத்தின் பெயரால் அழிவை சந்திக்கும் நிலை உள்ளது.

')) said...

ஜாதியில்லா சமுதாயம் சாத்தியமா!

வெளி உலகம் எப்படியோ சுமார் ஆயிரம்பேர் கூடும் ‘தமிழ்மணத்திலாவது’ சண்டையில்லா வாசம் வீசுவோமே!

நிலத்தில் நீர்நிறப்பி வைக்கப்பட்டுள்ள எல்லா தண்ணீர் குடத்திலும் வானத்து சூரியன் தனித்தனியே தெரிந்தாலும் சூரியன் என்னவோ ஒன்றுதான், அதை மூடிவைப்பதனால் ‘அது’அதற்குள் அடங்குமோ!
அதில் என்குடத்துசூரியந்தான்பெரிசு,உயர்ந்தது,தெளிவானது,
ஒளிபொருந்தியது என்று பேசிக்கொண்டிருப்பதில் யாருக்கு என்ன நன்மை.
மூடிய குடத்துக்குள் இல்லாதகதிரவன் போல் வறட்டுகெளரவம், வீம்பாகி மூடிய உன் இதயத்துள்ளும் ஒன்றும் இருக்காது.
அணு முதல் அண்டமெங்கும் வியாபித்திருக்கும் ஆற்றலை உனக்கு பிடித்த, நம்பிக்கைகொண்ட பெயரில், உருவத்தில் போற்றுவது,பாடுவது,பேசுவது அடுத்தவனுக்கு இடையூறின்றி
யார் மனசும்நோகாமல் செய்தால் பிரச்சணையில்லை.

மதம் மொழி சாதி எல்லாமே கும்பல்கும்பலாய் வாழ்ந்தமனிதன்
அவன் வாழ்கைவசதிக்காக உருவாக்கிக்கொண்டது.
அந்தநாள் மதம் இன்றும் மாறாமலிருக்கிறதா! பண்டைய மொழிதான் இன்றுநாம் எழுதுகிறோமா!பேசத்தான் செய்கிறோமா! இல்லையல்லவா அதேபோல் சாதியென்ன எல்லாமே மாறிப்போகும்.
அது எப்படிமாறும்- இயற்கையாகவோ, செயற்கையாகவோ மாறும்.
நீ என்னநினைக்கிறாய் உன்மதம் உன்மொழி உன்இனம் எங்கும் பரவிநிழைக்க விரும்புகிறாய்,என் மக்களே சிறந்தோர் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் மற்றவர்கள் எல்லாம்பிறகுதான். இந்த மனிதனின் மாண்புமிகு மனப்பான்மைதான் ஆட்டத்தின் அஸ்திவாரமே! ‘ஆட்டம்முடிவில் அஸ்திக்ளின்சாரம்’

என் மதம் இல்லாமல்போய் விடும்,என் மொழி இல்லாமல் போய்விடும்- விடமாட்டேன் அதற்காக பிரச்சாரம் செய்வேன்,என்சொத்து முழுவது அதற்காக வாரிக்கொடுப்பேன்
என் ஜாதிக்காரன் மட்டும் நன்றாக இருக்க பாடுபடுவேன் என்றால் என்னசெய்ய முடியம். உனக்கு அதனால் கிடைக்கும் நிம்மதி,பேரும் புகழும் குறுகியவட்டமாய் போய்விடும், இதையே நீ பாரபச்சமின்றி எல்லோருக்கும் பயன்பட ஏதேனும்செய்தால் உண்மைஉலகம் உன்னை வாழ்த்தும்.
[இன்று17.6.06 எனது பிளாக்கிள் வெளியிட்டதை உங்களுக்கு அப்படியே பின்னூட்டமாக்கியுள்ளேன்]