Monday, November 20, 2006

இலவசம் இளப்பம் காதல்

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”

கல்பனா பக்கத்தில் கொஞ்ச நேரம் இருந்தா இந்தப் பாடலைக் கேட்கலாம். கல்பனாவுக்கு எல்லாமே தேடல் தான். அவங்க அப்பா கத்துக் கொடுத்தது. சின்ன வயசில் அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் போது பொறுமையா அது என்ன என்று சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதற்கு அப்புறம் வேற எதைப் பத்தியும் கேட்க முடியாது. அதுக்குள்ள இவங்க அப்பா அதைப் பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவார். பேரை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதனைப் பற்றி கொஞ்சம் விவரமும் தெரியும் வரை விட மாட்டார்.

சாமின்னா என்னான்னு தெரியணுமா? எனக்கு தெரிஞ்சது இது. இது அவங்க சொன்னது. இது இன்னொருத்தர் சொன்னது. இங்க இது மாதிரி சொல்லி இருக்கு. ஆக இதில் இருந்து சாமின்னா என்னான்னு நீயே முடிவு பண்ணிக்கோ அப்படின்னு சொல்லீடுவார்.

"இன்னைக்கும் எல்லாருமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி எல்லாரும் யாரோ எப்பவோ சொன்னதை அப்படியே நம்பீட்டு இருக்காங்க, மாற்றம் ஒண்ணு மட்டும் தான் நிலையானதுன்னு எல்லோரும் புரிஞ்சுக்கணும். மனிதன்,மதம்,அரசாங்கம்,கொள்கைகள் எல்லாமே சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் காலகட்டத்துக்கு தகுந்த மாதிரியும் மாறிகிட்டே இருக்கணும் அப்போ தான் நிலைக்க முடியும். பழையன் கழிதலும், புதியன புகுதலும் என்பது தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கணும்.

மாற்றங்களை யாரும் ஒத்துக்கலேன்னாலும் நடந்துகிட்டே தான் இருக்கும். அதை ஒத்துகிட்டு அமைதியா வழிவிடாம எங்க அப்பன் பாட்டன் காலத்தில் இருந்து இருக்கறதுன்னால நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சில பேர் நினைக்கறதுனால தான் எல்லாப் பிரச்சனையும்.

இதில என்ன ஒரு வேதனையான விஷயம்ன்னா ஒரு பழையதுக்கு பதிலா புதுசா ஒண்ணை நுழைக்கறவங்களே அது பழசாகும் வேற புதுசா ஒண்ணு வரும் பொழுது குறுக்கே நிற்கறாங்க இதனால் எத்தனை பிரச்சனைகள் தெரியுமா. மனித சரித்திரம் புல்லா இது போலத் தான் நடந்துட்டே இருக்கு."

என்று பேசிக் கொண்டே வந்த கல்பனா அபி கவனம் எங்கோயோ போவதைப் பார்த்து விட்டு

"ஏண்டா குரங்கு நான் எவ்வளவு சீரியஸா பேசீட்டு இருக்கேன் அங்க அந்த மஞ்ச சுடிதாரைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருக்கியா?" என்று தோளில் ஓங்கிக் குத்தினாள்.

"இல்லை இல்லை. மதங்கற அமைப்பு ரொம்ப தப்புதான். உலகில் பல அநியாயத்துக்கும் அதுதான் காரணமா இருக்கு நான் ஒத்துக்கறேன்." என்றான் அபி.

"ஏண்டா நான் பேசுன ஒரு வார்த்தையைக் கூட கவனிக்கலியா?" என்று மீண்டும் குத்தினாள் கல்பனா.

"இல்லை இல்லை மதம் பத்தி பேசலியா? அப்போ பிளாக் ஹோல்சைப் பத்தியா? ஐய்யோ அடிக்காத ப்ளீஸ். அப்போ தேடல் பத்தி பேசினியா? ஐயோ அடிக்காத அடிக்காத ப்ளீஸ்" என்றான் அபி.

"போடா பன்னி, குரங்கு, கரடி எங்கூட பேசாத போடா" என்று திட்டிக் கொண்டே வந்தாள்.

"அய்யோ சாரிமா சாரிமா நீ என்ன டாபிக்கைப் பத்தி பேசினேன்னு சொல்லு நீ என்ன பேசுனேன்னு நான் அப்படியே திரும்பி பேசிக் காட்டுறேன். ப்ளீஸ் ப்ளீஸ்." என்றான் அபி.

அவனுடன் சண்டைப் போட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை ரெண்டு நிமிஷம் கூட தாங்காது என்று தெரிந்து வைத்திருந்த கல்பனா. "ஏண்டா நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கேன். போயும் போயும் அந்த யெல்லோ சுடிதாருக்காக நீ இப்படி பண்ணீட்டியேடா?" என்றாள்.

"எல்லாத்துலேயும் தொலை நோக்குப் பார்வை வேணும்ன்னு சொல்லுவே இதில் மட்டும் உனக்கு அது இல்லையே. நான் அந்த யெல்லோ சுடிதாரைப் பார்க்கலே. அதையும் தாண்டி ஒரு பிங்க் கலர் டாப்ஸ் போட்டுகிட்டு ஒரு குட்டி நிக்குது பாரு அதைத் தான் பார்த்தேன்." என்றான் அபி.

"டேய் உன் ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி பாருடா. குரங்கு மாதிரி இருந்துட்டு உனக்கு கிளி கேட்குதா? அடங்குடா" என்றாள் கல்பனா.

ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்று ஒரு ஒரு நிமிஷ சண்டை மீண்டும் ஆரம்பமானது.

அபி கல்பனா அப்பாவின் உயிர் தோழனின் பிள்ளை. இருவரும் சிறு வயதில் இருந்து இணைபிரியாத நண்பர்கள். அபி கல்பனாவிற்கு நேர் எதிர். எல்லாத்தையும் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது என்று நினைக்கும் ஆள்.

வாழ்க்கையே கண் மூடி கண் திறக்கறதுக்குள்ளே முடிந்து விடும் அதனால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை கொண்டவன்.

இந்த இரு துருவங்களும் பிறந்ததில் இருந்து பிரிந்ததை கிடையாது. ஒட்டிப் பிறந்த சயாமீஸ் டிவின்ஸ் மாதிரி சேர்ந்தே இருப்பார்கள்.

பூப்பெய்திய காலத்தில் கல்பனா அம்மா சொன்ன தகவல்களைக் கல்பனா அபியிடம் சொல்ல கல்பனாவை விட அதிக கவலைப் பட்டு ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லை அபி.

இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதிலும் வல்லவர்கள்.

அதுவும் கல்பனாவோட ரகசிய டைரி பத்தி அபி கிண்டல் அடிக்க ஆரம்பிச்சா கல்பனா உடனே டென்ஷன் ஆகி விடுவாள்.

கல்பனா பத்தி அபிக்கு தெரியாதது என்று ஒன்றுமே இல்லாவிட்டாலும் கல்பனா ரகசியமா ஒரு டைரி எழுதி வந்தாள். அதை அபிக்கு தெரியாமல் பல காலம் ஒளித்து வைத்தாலும் கடைசியா அபி கண்ணில மாட்டீடுச்சு. விடுவானா அன்னைக்கு இருந்து ஒரே கிண்டல்தான்.

கல்பனாவுக்கு ராஜகுமாரன் வெள்ளைக் குதிரையில் வந்து இளவரசியை மீட்டுச் செல்வது போன்ற கதைகள் மிகவும் பிடிக்கும். அவளும் அவளுடைய ராஜகுமாரனைப் பற்றி கற்பனைகளை எழுதி வைத்திருந்தாள் அதுதான் அபி கையில் சிக்கிக் கொண்டு விட்டது. அன்றையில் இருந்து பயங்கரக் கிண்டல்தான்.

அதுவும்

தென் பொதிகைக் காற்றும்
தேமதுர இசையும்
அந்தி நேர வண்ணங்களும்
காற்றில் தவழுந்து சேரும் சாரல்களும்
நீ இருக்கிறாய் என்பதை
உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன

இதை ஒவ்வொரு தடவையும் சொல்லி கிண்டல் பண்ணி சிரிப்பது அபியின் வழக்கம்.

கல்பனாவுக்கு கல்யாண வயது வந்து விட்டதாக அவளுடைய அம்மா புலம்ப ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன பிறகு கல்பனாவின் அப்பா கல்யாணப் பேச்சை மெதுவாக கல்பனாவிடம் ஆரம்பித்தார்.

"அம்மா ரொம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டா. இதை பத்தி என்ன யோசனை பண்ணி இருக்கே?" என்று கேட்டார்.

அம்மா கேட்கும் போதெல்லாம் போம்மா உனக்கு வேற வேலையே இல்லை என்று முகம் சுழித்துக் கொண்டிருந்த கல்பனாவுக்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் அப்பா நன்றாக யோசிக்காமல் அவளிடம் பேச்சை ஆரம்பிக்க மாட்டார் என்று அவளுக்குத் தெரியும்.

"எனக்கு ஒண்ணும் யோசனையே இல்லைங்க அப்பா?" என்று கூறினாள் கல்பனா.

"ஒரு நல்ல வரன் வந்திருக்கு பையன் உனக்கு ஏத்த மாதிரி இருப்பான்னு தோணுது. பார்க்க வரச் சொல்லாமா?" என்று கேட்டார் கல்பனாவின் அப்பா.

அதற்குள் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்த கல்பனா "நீங்க பார்த்து எது செய்தாலும் ஓகே தான்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

நேராக அபியின் வீட்டுக்கு வந்து அவனுடைய ரூமுக்கு சென்றாள் அங்கே ஒரு கர்ண கொடூரமான ஓசையுடன் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் அபி. பக்கத்தில் சென்று "டே சனியனே எந்திரிடா" என்று அவனை உலுக்கினாள் கல்பனா.

"ஏய் குட்டிச் சாத்தான் நிம்மதியா தூங்க விடுடி" என்றபடி புரண்டு படுத்தான் அபி.

"எந்திரிடா" என்று மீண்டும் உலுக்கினாள் கல்பனா.

"ஏண்டி என்னை இப்படி வதைக்கற" என்றபடியே கண்களைத் திறந்த அபி கல்பனாவின் முகத்தை பார்த்தவுடன் "என்ன ஆச்சு?" என்றான் சீரியஸாக.

"வீட்டுல கல்யாணத்தைப் பத்தி திரும்ப பேசறாங்கடா" என்றாள்.

"அவ்வளவுதானா? நான் என்னமோன்னு நினைச்சேன். அதான் ஸ்டாண்டர்டா பதில் வைச்சிருப்பியே உனக்கு வேலையே இல்லைன்னு. நானும் ஆண்டிக்கிட்ட சொல்லீட்டே தான் இருக்கேன் சீக்கரம் கல்யாணம் பண்ணிக் குடுங்க நானாவது நிம்மதியா தூங்குவேன். காலைல 6 மணிக்கு எழுப்பி விடுறியே உனக்கே இது நியாயமா இருக்கா?" என்று சொல்லிக் கொண்டே வந்தவன் கல்பனாவின் முகத்தைப் பார்த்து அமைதியானான்.

"இந்த தடவை அப்பா இந்த விஷயத்தை பத்தி பேசினார்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனம் நிலவியது அறையில். "அப்பா பேசினாரா? என்ன சொன்னார்?"

"நாளைக்கு காலைல பொண்ணு பார்க்க ஒருத்தர் வராங்களாம்"

"ஓ அப்படியா?" என்றான் அபி ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு

"அது சரி உன்னோட டைரி எழுதி இருந்ததெல்லாம்?"

பேசாமல் அமைதி காத்தாள் கல்பனா.

"அதெல்லாம் அப்படியே மறந்திடப் போறியா?" என்றான் அபி.

"எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான்னு கனவு இருக்கத்தான் செய்யுது ஆனா எத்தனை பேருக்கு அந்த மாதிரி வாய்ப்பு அமையுது?"

அபி பேச்சை மாற்றுவதற்காக "ஹீம் விடு பார்த்துக்கலாம் இந்தப் பையன் தான் நீ நினைச்ச ராஜகுமாரனோ என்னமோ? சரி பொண்ணு பார்க்க வரப் போறாங்க எந்த டிரெஸ் போடப் போறே?"

"டிரெஸ் என்ன எதையாவது போட வேண்டியது தான்"

"என்ன எதையாவது போடறியா? ஒரு நாளைக்காவது ஊரில பொண்ணுங்க எல்லாரும் டிரெஸ் போடுற மாதிரி போட மாட்டியா? ஆம்பிளைப் பசங்க மாதிரியே இன்னைக்கும் டிரெஸ் போடாதே சரியா? இன்னைக்கு முதல் வேலையா உனக்கு ஷாப்பிங் பண்ணி டிரெஸ் எடுக்கணும் வீட்டுக்குப் போய் கிளம்பு நானும் இன்னும் 1/2 மணி நேரத்தில கிளம்பி வர்றேன்."

அன்று முழுவதும் ரெண்டு பேரும் ஊர் முழுக்க சுற்றி ஷாப்பிங் செய்து திரும்பினார்கள் இருவரும்.

அடுத்த நாள் காலை 8 மணிக்கு எல்லாம் கல்பனாவின் வீட்டுக்கு வந்த அபி "ஆண்டி அவளுக்கு இந்த பிங்க் கலர் சாரி, அப்புறம் இந்த பெரிய நகையா எதுவும் போட்டு விட்டுடாதீங்க. சும்மா மெல்லிசா ஒரு தங்க நகை, அப்புறம் இந்த முத்து வாங்கி வைச்சீங்களே அதை போட்டு விடுங்க. அப்புறம் அவளுக்கு மேக்கப்ன்னா என்னான்னே தெரியாது. உங்க முகத்தில இருக்கற மாதிரி நிறைய பவுடர் அப்பி விட்டுடாதீங்க." என்றெல்லாம் கல்பனாவின் அம்மாவுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"சரி பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட நீ யாரையாவது புதுசா மீட் பண்ணும் போது uncomfortableஆ முகத்தில் தெரியற மாதிரி uncomfortable ஒரு சிரிப்பியே அது மாதிரி சிரிச்சிடாதே. வீட்டில இருக்கும் போது இளையராஜா பாட்டு கேட்டா உன்னோட முகத்தில ஒரு அப்படியே லைட்டா ஸ்மைல் பண்ணுவியே அது மாதிரி முகத்தை வைச்சுக்கோ. இளையராஜா பாட்டு ஒண்ணை ஞாபகப்படுத்திக்கோ சரியா?" என்று படபடவென்று பொரிந்தான் அபி.

"சார் நீங்க கொஞ்சம் வெளியே இருந்தீங்கன்னா அவளை ரெடியாக்குவோம் நீங்க இங்க இப்படியே இருந்தீங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது. சரியா?" என்று சொன்னாள் கல்பனாவின் அக்கா முறை வரும் சொந்தக்காரர்களில் ஒருவர்.

"ஹீம் சரி சரி" என்றபடி வெளியே சென்றான் அபி.

அரை மணி நேரம் கழித்து "டேய் இங்க வாடா" என்ற குரல் கேட்டு உள்ளே சென்றான் அபி.

அங்கே முழு அலங்காரத்தில் அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்தாள் கல்பனா.

"என்னடா அப்படி பார்க்கறே எப்படி இருக்கு டிரெஸ்?"

"Perfect. ஒரு நிமிஷம் இரு வெளியே என்னைக் கூப்பிட்டாங்க வந்திடறேன்"

"டேய் இருடா" என்று கூப்பிட கூப்பிட வெளியே சென்றான் அபி.

10 மணி ஆயிற்று மாப்பிளை வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். மாப்பிளை பொண்ணு பார்க்க பகட்டா எல்லாம் இல்லாமல் சும்மா சாதாரணமாக ஜீன்ஸ் டீசர்டில் வந்திருந்தார்.

கல்பனா வெளியே வந்து அவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி விட்டு உட்கார்ந்தாள். மனதிற்குள் எங்கே போனான் இந்த அபி இதோ வர்றேன்னுட்டு காணாம போயிட்டான். மாப்பிளையைப் பார்த்து ஒப்பீனியன் சொல்லாம எங்கே போயிட்டான் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கல்பனாவின் அப்பா என்னோட அந்த கலெக்ஷனைப் பாக்கறீங்களா? என்று தனியா பேச வைக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை தனியாக அழைத்து சென்றார்.

கொஞ்ச நேரம் அங்கே ஒரு விதமான அமைதி நிலவியது.

"ஹாய்" என்றார் மாப்பிள்ளை கல்பனாவிடம். "ஹாய்" என்றாள் கல்பனா.

"போட்டோவில பார்த்தை விட வித்தியாசமா இருக்கீங்க. ரொம்ப மாடர்னா போட்டோவில இருந்தீங்க. இப்போ டிரெடிசனலா டிரெஸ் பண்ணிட்டு இருக்கீங்க."

"By the bye உங்க டிரெஸ் செலக்ஷன் சூப்பர் ரொம்ப அழகா இருக்கீங்க" என்றார் மாப்பிள்ளை.

கல்பானவுக்கு தன்னுடைய போட்டோ கொடுக்கப் பட்டதெல்லாம் தெரியாது. ஆகவே மௌனம் காத்தாள்.

"இது மாதிரி பொண்ணு பார்க்க வர்றது எல்லாம் எனக்கு அவ்வளவா இஷ்டம் இல்லை அம்மா சொன்னாங்களேன்னு வந்தேன்." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா புன்னகைத்தாள்.

"நம்ம சிஸ்டமே இது மாதிரிதான் இருக்கு பாருங்க உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு ஒத்து வருமுன்னு கூடத் தெரியாது ஆனா வாழ்க்கை முழுக்க சேர்ந்தே இருக்கறதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்" என்றார் மாப்பிள்ளை.

"எனக்கும் இது போலத்தான் தோணுது. கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி ஒருத்தரைப் பத்தி தெரியாமா கல்யாணம் பண்ணிக்கறது கஷ்டம்தான்" என்றாள் கல்பனா.

"கரெக்ட்டுங்க. காதல்ங்கறது என்ன? நுணுக்கமா இன்னொருத்தரைப் பத்தி தெரிந்து வைச்சிக்கறது தானே? கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது. என்ன டிரெஸ் போட்டா நல்லா இருக்கும் இருக்காது. அந்தப் பெண் எத்தனை விதமா ஸ்மைல் பண்ணுவீங்க? உங்க ஸ்மைலை வைச்சே அந்தப் பெண் என்ன நினைக்கிறாங்க. அப்படீன்னெல்லாம் நினைச்சேன். உங்களுக்கு கடவுள் பத்தி என்ன views? உங்களுக்கு என்ன பேசினா பிடிக்கும் என்ன பேசினா பிடிக்காது? என்ன சாப்பாடு பிடிக்கும் என்ன பிடிக்காது. இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் நினைச்சேன். அதே மாதிரி என்னைப் பத்தியும் எல்லாமே தெரிஞ்சிருக்கணுமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம ரெண்டு பேருக்குமே அது மாதிரி எல்லாமே தெரிஞ்சவங்கன்னு யாருமே இல்லைன்னு நினைக்கறேன்?" என்றார் மாப்பிள்ளை.

கல்பனாவின் முகம் அதற்குள் மாறி இருந்தது. "என்னங்க ஆச்சு ஏன் என்னமோ மாதிரி ஆயிட்டீங்க" என்று கேட்டார் மாப்பிள்ளை

"என்னைப் பத்தி தெரியாத சில விஷயங்களைக் கூட தெரிஞ்சுகிட்ட ஒருத்தர் இருக்காருங்க. எல்லாத்திலேயும் தேடல் இருக்கணுமுன்னு நினைப்பேன் நான் அதனால என் பக்கத்திலேயே இத்தனை நாள் இருந்த ஒருத்தரை கவனிக்காம இருந்திருக்கிறேன் நான் எப்பவுமே என் பக்கத்தில இருந்ததால கொஞ்சம் தள்ளி நின்னு கவனிக்காம விட்டுட்டேன் நான். இலவசமா கிடைச்சதால இளப்பமா நினைச்சிட்டேன் நான்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு கல்பனா "சாரிங்க இதனால் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாள்.

"இல்லீங்க தப்பா நினைக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா அபியின் ரூமுக்குள் நுழையும் சமயம் கம்ப்யூட்டரில்

"Its only words and words are all I have to take your heart away"

என்று பாட்டு கசிந்து கொண்டிருந்தது.

மெதுவாக நுழைந்த கல்பனா "நீ ரெண்டு வகையா சிரிப்பேன்னு தெரியுமா உனக்கு? ஒண்ணு உன்னோட அசட்டு சிரிப்பு. இன்னொன்னு தினமும் காலைல என்னைப் பார்க்கும் போது இப்போ உன்னோட முகத்தில இருக்குதே அந்த மாதிரி சிரிப்பு."

"இத்தனை நாள் இதைப் பத்தி நான் யோசிச்சதே இல்லை" என்றாள் கல்பனா.

மெதுவாக பக்கத்தில் வந்த அபி அவளுடைய கரங்களைப் பற்றினான். எத்தனையோ தடவை ரெண்டு பேரும் கையோட கை தோளோடு தோள் என்றிருந்தாலும் இந்த தடவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள் கல்பனா. தன்னுடைய ராஜகுமாரன் கவர வந்ததை உணர்ந்த கல்பனா முதல் முறையாக சிலிர்ப்பு அடைந்து வெட்கப் பட்டு தலை குனிந்தாள்.

1 comments:

')) said...

நல்லாயிருந்துச்சு, போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தலைவா;-)