Sunday, December 03, 2006

குறும்பு - 1

வெள்ளந்தியா சுத்தி வந்த
காலந்தான் மறக்கவில்லை

அக்குறும்பு செய்யாதீன்னு
அம்மாச்சி சத்தம் போட
சத்தம் கேட்டு குஷியாகி
கூடைக் கோழி திறந்து விட்டு
எதை தொறத்தறதுன்னு முழிக்க
வைச்சு அக் குறும்பில்
வெள்ளந்தியா சிரிச்சு திரிஞ்ச
காலந்தான் மறக்கவில்லை

காலைல போன புள்ள
காணலையேன்னு வீட்டிலதான்
அப்பனாத்தா கவலை கொள்ள
ரெண்டு ரூபா பந்துமா
தென்னை மட்டை பேட்டுமா
இருட்டியும் தெரு லைட்டோரமா
வெள்ளந்தியா விளையாண்டு பறந்த
காலந்தான் மறக்கவில்லை

எலந்த வடை ருசிக்கு முன்னே
கோடி ரூபா தேவையில்லை
வாங்கி தின்ன கொள்ளை
காசு எல்லாம் தேவையில்லை
கண்டதை வாங்கி திங்குதேன்னு
அப்பன் ஆத்தா கவலை கொள்ள
வெள்ளந்தியா தின்னு ரசிச்சு ருசிச்ச
காலந்தான் மறக்கவில்லை

சுரைக்காய் எல்லாம் கட்டினதில்லை
புதுசாப் போட்ட சொக்காயோட
சிநேகிதக்காரங்க தண்ணில போட
ததக்கா பிதக்கான்னு நீச்சல் கத்து
தூக்கி போட்ட பயலுகளை
எல்லாம் தண்ணில அமுக்கி அமுக்கி
வெள்ளந்தியா துள்ளி நீந்தின
காலந்தான் மறக்கவில்லை

பக்கத்து வீட்டு பாரதி அக்கா
வயசுக்கு வந்ததுக்கு அப்புறமும்
ஜடையை புடிச்சு இழுத்துட்டு
அவிங்கம்மா அடிக்கு தப்பி
அவிங்க ஜடையையும் இழுத்து ஓடி
பின்னால தாஜா செஞ்சு
வெள்ளந்தியா வலைய வந்த
காலந்தான் மறக்கவில்லை

சோறு தண்ணி தேவையில்லை
அப்பன் ஆத்தா நெனைப்பில்லை
வானம் எல்லைன்னு தோணவில்லை
மழையில ஜலதோஷம் நினைச்சதில்லை
இருட்டைத் தவிர பயமேயில்லை
கவலையோட அர்த்தமே தெரிஞ்சதில்லை

வெள்ளந்தித்தனம் மறந்(த்)து போன
இன்னைக்கும்
வெள்ளந்தியா சுத்தி வந்த
காலம் மட்டும் மறக்கவில்லை

11 comments:

')) said...

//எலந்த வடை ருசிக்கு முன்னே
கோடி ரூபா தேவையில்லை
வாங்கி தின்ன கொள்ளை
காசு எல்லாம் தேவையில்லை//

அட! இது நம்ம ஐட்டம்!

கவிதை நல்லா வந்திருக்கு!
வாழ்த்துக்கள்! செந்தில் குமரன்!

')) said...

நன்றி சிபி.

')) said...

நன்றாக இருக்கிறது

வெள்ளந்தி என்பதெல்லாம்
வெள்ளத்தாளில்
அந்தி மைக்கருப்பில் எழுதி
பிள்ளை மனம் கொள்ளும்போதெல்லாம்
எடுத்து வாசிக்கும் பொத்தகம்.

')) said...

நன்றி ஓகை அவர்களே.

உங்களுடைய குறும்பாவும் சூப்பர்.

')) said...

//வானம் எல்லைன்னு தோணவில்லை
மழையில ஜலதோஷம் நினைச்சதில்லை
இருட்டைத் தவிர பயமேயில்லை
கவலையோட அர்த்தமே தெரிஞ்சதில்லை
//

குமரன் உண்மையாக் குறும்பு செய்திருக்கிறீர்கள் !

')) said...

கோவி உங்களை மாதிரி அக்குறும்பு செய்யலை வெறும் குறும்புதான்

')) said...

//ஜடையை புடிச்சு இழுத்துட்டு//

செந்திலுன்னு பேர வச்சிக்கிட்டு கிருஷ்ணரு வேல எல்லாம் செஞ்சி கீறிங்கோ... நல்லாதான் கீது...

')) said...

சின்ன வயதுக் குறும்பு நினைவுகள் எல்லாம் நினைத்துப் பார்த்தால் இப்போதும் கரும்பு போல தான்...

கவிதை நல்லாருக்கு... வாழ்த்துக்கள்!!!

')) said...

அருட்பெருங்கோ, அரை பிளேடு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

')) said...

//வெள்ளந்தியா சுத்தி வந்த
காலம் மட்டும் மறக்கவில்லை//
ஆம். மறப்பதேயில்லை.
அதுதான் நம் சோக காலத்தின் சுகங்கள்.

')) said...

வருகைக்கு நன்றீங்க சுல்தான்.

சோக காலத்தின் சுகங்கள்

நல்லா சொல்லி இருக்கீங்க