Wednesday, October 17, 2007

ஓ மனமே!!!

அழகான பெண்கள் எல்லோருமே உன்னையே ஞாபகப்படுத்துகின்றனர். அவர்கள் ஏன் அழகாக தெரிகிறார்கள் என்பதை உன்னை வைத்தே நிர்ணயம் செய்கின்றேன் நான். முகவெட்டு உன்னைப் போலவே இருக்கிறதே, உயரம் உன்னை விட எத்தனை இஞ்ச் கூட இல்லை குறைவு அந்தப் பெண்ணின் மூக்கு உன் மூக்கு போல கூர்மையாக இல்லையே என்று அழகைப் பார்க்கும் இடத்தில் எல்லாமே நீதான் எனக்குத் தெரிகிறாய்.

கடவுள் ஒரு வரம் கொடுத்தால் மூன்று வரம் வேண்டும் என்பவன் முட்டாள் எனக்கு ஒரு வரம் மட்டும் போதும் ஒரு நொடிப் பொழுதேனும் நான் நானாகவே இருந்தாலும் நீ என்னை நீ நீயாகவே விரும்ப வேண்டும் என்ற வரம் என்று கேட்பேன். நூறு ஜென்மம் வேண்டும் சாகா வரம் வேண்டும் என்ற பேராசை இருந்தாலும் ஒரு நொடிப் பொழுது போதும் எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை உன்னோடு நூறு ஜென்மம் உட்பட.

ஆப்பிள் வட்டமாக சிகப்பு நிறத்தில் இருக்கும், சிகப்பு என்றால் இப்படி இருக்கும், வட்டம் என்றால் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தவர் வாத்தியார் என்றால் நீயும் எனக்கு வாத்தியார் தான் அழகு என்றால் என்ன கவிதை ஏன் எல்லோரும் ரசிக்கிறார்கள், ராத்திரியில் தூக்கம் இல்லாமல் இருப்பது கூட எத்தனை இனிமையானது என்பதை கற்றுக் கொடுத்தது நீயல்லவா?

Sunday, September 23, 2007

சிற்சில வருத்தங்கள், ராமர், சிந்தனைகள்

திருமணம் என்பது பல அழகான உறவுகளின் தொடக்கம். திசை இல்லாமல் திக்கித் திரியும் ஆணுக்கும் பிடிப்பும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வும் கொடுக்கும் ஒரு மிக அற்புதமான ஒரு சடங்கு திருமணம்.

கடந்த இரண்டு வருடங்களில் மிக விரைவாக குறைந்து கொண்டிருக்கிறது எங்களுடைய நட்பின் பேச்சுலர் பட்டாளம்.

இந்த இரு வருடங்களில் மிக மகிழ்ச்சியான தருணங்கள் எது என்று யோசித்துப் பார்த்தால் நண்பர்களின் திருமணங்களுக்கு மற்ற நண்பர்களுடன் சென்று மேலும் மற்ற ஊர்களில் இருந்து வந்திருக்கும் மற்ற நண்பர்களைப் பார்த்து பேசித் திரிந்த தருணங்கள் மனதிற்கு வருகிறது.

ஒவ்வொரு கல்யாணமும் ஒவ்வொரு மாதிரி, ஆனால் எல்லாமே ஆண் பெண்ணும் ஒரு அழகான பந்தத்தில் நுழைவது பற்றியது தானே?

இந்த கல்யாணங்களுக்கு செல்லும் சமயம் எல்லாம் நண்பர்களுக்காக மனதில் மகிழ்ச்சி கொண்டாலும் மனதின் ஓரத்தில் சின்ன உறுத்தல்.

4 தோசை வாங்கி 20 பேர் அதில் கை வைத்து 4 தோசையில் 1 தோசையை மேஜைக்கு தாரை வார்த்துக் கொண்டு உணவு உண்ட நாங்கள், 5 Dew வாங்கி 20 பேர் குடித்துக் கொண்டிருந்த நாங்கள்,பழகும் சமயம் நீ செட்டியாரா? கவுண்டரா? வன்னியாரா? இல்லை ஐய்யரா? என்று பார்த்து பார்த்து பழகாத நாங்கள். திருமணத்தில் மட்டும் கவுண்டராய், வன்னியராய், செட்டியாராய், ஐய்யராய் பிரிந்து போகிறோம்.

எங்க ஜாதியில் படித்த பெண்கள் கிடைப்பது மிக கஷ்டம்டா, எங்க கேஸ்ட்ல வேலைக்கு போற பொண்ணுங்க மாப்பிளை பாரின்ல இருக்கணும்ன்னு நினைக்கிறாங்க என்று கல்யாண விஷயத்தில் ஜாதி ஜாதி என்று 5 வருடங்களாக யார் எந்த ஜாதி என்று அறிந்து கொள்ளாத நான் எல்லோருடைய ஜாதியையும் தெரிந்து கொண்டு விட்டேன்.

இதில் இன்னும் வருத்தப்பட வைக்கும் விஷயம் ஏண்டா கல்யாணம் வேற கேஸ்ட்ல பண்ணிக்க வேண்டியது தானே போன்ற கேள்விகள் இது போன்ற சமயத்தில் எழாமலே இருந்து விடுவதுதான்.

ஜாதியை ஒழிக்கவே முடியாதா?

ராமர் விவகாரம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. நாசா புகைப்படம் என்ற ஒரு பொய்யான தடயத்துடன் ஒரு அற்புதமான அரசியல் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மூட மதி கொண்ட மக்கள் பலர் இதற்கு துணையாக பல துணைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ராமர், கிறிஸ்து, நபிகள் போன்றவர்கள் உண்மையில் இறைவனாகவும் இறை தூதர்களாகவும் இருந்தால் அவர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். ஏனெனில் அவர்கள் பேரில் மக்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி மனித இனத்துக்கே துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இதனை தடுத்து நிறுத்தாமல் இருக்கிறார்களே அதனால்.

இந்த மூடத்தனத்தை தடுத்து நிறுத்த இயலாததாலேயே இவர்கள் இறைவனாகவும் இறை தூதுவர்களாகவும் இருக்க முடியாது.

சில நாட்களுக்கு முன்னால் எங்கேயோ படித்த செய்தி ஒன்று விஞ்ஞானிகள் மனிதனின் எண்ணங்களை படித்து அதன் மூலம் வாகனங்களை நகர்த்தும் டெக்னிக்கை கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது ஆனால் சில காலங்களில் இது எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தப்படும் டெக்னாலஜியாகி விடும்.

இது ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் போன்ற உடல் அசைக்க முடியாத வாய் பேச முடியாதவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். ஆனால் இந்த டெக்னாலஜியின் உபயோகம் இதனுடன் முடிந்து விடப் போவதில்லை இது சில வருடங்களில் மனிதன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு டெக்னாலஜியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Sunday, August 19, 2007

GOD must be alien !!!! - 3

சமீபத்தில் Star Gate என்ற படம் பார்த்தேன். பிரமாதமான படம் ஒன்றும் இல்லை. எகிப்து பிரமீடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வித்தியாசமான ஒரு யந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். பழங்காலமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்திருந்த அந்த யந்திரம் மூலம் பல வெளிச்ச வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கிரகத்திற்கு அதனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியும் வேறு சிலரும் செல்கிறார்கள்.

அந்த கிரகத்தில் பல காலங்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய வம்சாவளியினர் ஆகியோர் அடிமையாக நடத்தப்படுவதைக் கண்டறிகிறார்கள். அந்த கிரகத்தின் உயிரினம் ஒன்று மனிதர்களை தன்னுடைய சக்தியால் இது போல நடத்துகிறது. இப்போது சென்ற மனிதர்கள் அந்த உயிரினத்தை முறியடித்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் என்னுடைய ஆர்வத்தைக் கிளறிய விஷயம் என்னவெனில் இந்த உயிரினம் மனிதர்களை எப்படி அடிமையாக்குகிறது என்றால், தான் ஒரு கடவுள் என்றும் அனைவரும் தன்னை வழிபட வேண்டும் என்று சொல்லி அடிமையாக்குகிறது. அந்த உயிரினத்தின் அறிவியல் நுட்பம் மூலம் கண்டு பிடித்த விமானம் போன்ற கருவிகளை பயன்படுத்தி தான் தான் கடவுள் என்று மக்களை நம்ப வைக்கிறது.

மனிதனுக்கு உள்ள ஒரு உணர்வு என்னவெனில் தன் அறிவுக்கு புலப்படாத விஷயங்களும் அனைத்துமே அனைத்தையும் இயக்கும் கடவுளால் தான் இயங்குகிறது என்று நம்புவது இல்லை அது தான் கடவுள் என்று நம்புவது.

இதனை உபயோகித்து தான் மனிதனை அந்த உயிரினம் அடிமைப் படுத்துகிறது.

இதே முட்டாள் தனம் பூமியிலும் நடக்கிறது. அடுத்தவனை அடக்கியாள வேண்டும் என்ற வேட்கையிலும் தனக்குத் தெரிந்தது தான் உண்மை என்ற மனிதனின் ஆணவத்தை நம்பித் தான் இன்றைய மதங்கள் இயங்கி வருகின்றன. மதங்கள் காலம் காலமாக அதன் உதவியால் அனுபவித்த வந்த அதிகாரம் போகம் போன்றவைகள் பறி போய் விடக் கூடாதே என்பதால் பலர் செத்தாலும் பரவாயில்லை என்று மூடத்தனத்தை இன்னும் மக்கள் மத்தியில் பரவச் செய்ய முற்பட்டுக் கொண்டிருக்கிறது சில கூட்டங்கள்.

மக்களும் ஆட்டு மந்தை போல அதன் பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் அந்த உயிரினத்திற்கு எதிராக பல வருடங்களுக்கு முன்னால் ஒரு புரட்சி வெடித்திருப்பதை கண்டு பிடிப்பான் கதாநாயகன். அந்த புரட்சியை பல வருடங்களுக்கு முன்னாலேயே அடக்கிய அந்த உயிரினம் மீண்டும் புரட்சி வெடிக்காமல் இருக்க மனிதர்களுக்குள் படிப்பு சொல்லிக் கொடுப்பதை நிறுத்த சொல்லி விடும். படிப்பு அறிவு இல்லாததால் அப்படி ஒரு புரட்சி நடந்த விஷயம் அப்படியே காற்றில் கரைந்து விடும்.

நம்முடைய வரலாற்றிலும் இது போன்ற பல தடவை நடந்திருக்கிறது என்பதும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சூனியக்காரிகள் என்று படித்த பெண்காளை எரித்தது. கலிலியோவை சிறையில் அடைத்து, மக்களை பாகுபடித்தி 1% மக்கள் மட்டுமே படித்தவர்களாக வைத்திருந்தது, பெண்கள் முகத்தை மூடி அடிமைப் படுத்துவது இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் எடுக்கலாம் நம்முடைய வரலாற்றில் இருந்து.

இன்றைய அறிவியல் யுகத்தில் வரலாற்றில் புரிந்த இதே கொடுமைகளை வேறு முகம் கொண்டு இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆதிக்க வாத சக்திகள். ஆனால் வரலாற்றில் மக்களுக்கு இல்லாத ஒரு விஷயம் இன்று நம்மிடத்தில் இருக்கிறது. அது தான் பல விஷயங்களைப் பற்றிய புரிதல், புரியாத விஷயங்களை புரிந்து கொள்ள முயலுதல்.

மனிதன் வடிவமைத்த இறைவனின் எந்த வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் மாயங்கள் நிறைந்ததாகவே அவை இருக்கின்றன. அப்படி மாயங்கள் நிறைந்தது தான் இறைவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மனிதன் இறைவனை அல்ல மாயம் செய்யத் தெரிந்த அவனை விட சற்று அறிவு அதிகம் கொண்டிருக்கும் ஒரு வேற்றுகிரகவாசியைத்(Alien) தான் தேடிக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் இறைவனை உணர மார்க்கங்கள் தேவையில்லை மதங்கள் மனிதனை இறைவன் அருகில் இல்லை அவனை தூர விலக்குகின்றன என்றே கருதுகிறேன்.

கடவுளை அவருடைய கட்டளைகள் அவருடைய வழி என்று கடவுளை மனிதனின் உருவாகவே வடித்து வந்திருக்கிறான் மனிதன். இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பதே ஒரு தூசி இந்த பிரபஞ்சத்தின் சக்தி வடிவம் தான் இறைவன் என்றால் மனிதன் என்பவன் ஒன்றுமே இல்லாத ஒரு துகள் அதனை அறிந்து அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சின்ன வாழ்வில் அமைதியாக வாழ்ந்து வருவதே அறிவுள்ளவன் செயல்.

Tuesday, August 14, 2007

ரௌலிங் முட்டாளாக்குகிறாரா?

சில சமயம் சில பதிவுகளைப் படிக்கும் போது எரிச்சல் வரும் கோபம் வரும்.

எனக்கும் இந்தப் பதிவைப் படித்த உடன் கோபம் எரிச்சல் தான் வந்தது ஆனால் அதனை விட மிகுந்து வருத்தம் வந்தது.

அந்தப் பதிவில் இருந்து சில Excerpts

"இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும்."

ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா?

ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள்.

இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!

முதலில் ரௌலிங் பற்றியும் அவரது பதிப்பகத்தாரான Bloomsbury பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரௌலிங்க்கு முதன் முதலில் இந்த கதை உருவான இடம் ஒரு ரயில் பயணத்தில் 1990ல். அவர் கதை புத்தகமாக வெளியானது 1996ன் கடைசியில். இந்த ஏழு வருட காலகட்டத்தில் ரௌலிங்கின் வாழ்க்கையை சற்றுப் பார்க்கலாம். இங்கிலாந்தில் பிறந்த ரௌலிங் போர்ச்சுகலை சேர்ந்த ஒருத்தரைக் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுகல் செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் திருமணம் ரத்தாகி இங்கிலாந்து வருகிறார்.

வேலை எதுவும் இல்லாததால் இங்கிலாந்து அரசாங்கம் கொடுக்கும் Welfareல் சில காலம் ஒரு வயது கூட முடியாத குழந்தையுடன் காலம் தள்ளுகிறார். குழந்தை தூங்கிய உடன் கிடைக்கும் நேரத்தில் மட்டும் எழுதுகிறார். இப்படியே 6 வருடம் எழுதிய முடித்த உடன் ஒரு ஏஜண்டுக்கு இரு பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் அடிக்கிறார்(ஜெராக்ஸ் எடுக்க பணம் இல்லாததால்). முதல் ஏஜண்ட் அவருடைய கதையை பிடிக்காமல் திருப்பி அனுப்பும் சமயம் ரௌலிங் அனுப்பிய பைல் பெரியதாக இருந்ததால் அதனை திருப்பி அனுப்பாமல் விட்டு விடுகிறார்.

மீண்டும் அவர் எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் செய்து இரண்டாவது ஏஜெண்டிடம் அனுப்புகிறார். இரண்டாவது ஏஜெண்ட் கதை பிடித்துப் போய் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்.

அதே சமயத்தில் ஒரு டீச்சராக வேலைக்கு ஒரிடத்தில் சேருகிறார். இரண்டாவது புத்தகம் வெளியாகும் வரை டீச்சராகவே பணி புரிகிறார். இரண்டாவது புத்தகம் வெளியான அதே சமயம் அமெரிக்க பதிப்பகத்தார்(Scholastic) முதல் கதையை அமெரிக்காவில் வெளியிட அந்த சமயத்தில் மிக அதிகமான தொகையாக கருதப்பட்ட 1 லட்சம் டாலருக்கு எடுத்துக் கொள்கிறார்(இன்று ரௌலிங்கின் மதிப்பு ஒரு பில்லியனுக்கு மேலே என்று கணக்கிடப்படுகிறது).

Bloomsbury குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். இந்தியாவில் குழந்தைகள் பதிப்பகங்களின் கதை எப்படியோ அதே போலத்தான் Bloomsbury கதையும். மிகப் பெரிய பதிப்பகம் கிடையாது. சில நூறு புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். ஹாரிப்பாட்டரின் முதல் புத்தகம் 1000த்துக்கும் குறைவாகவே வெளியிடப் பட்டது.

இன்று ஹாரிப்பாட்டர் புத்தகங்கள் வெளியாகும் முன்னரே 30 லட்சம்(இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்) விற்றுத் தீர்ந்திருக்கின்றன. வெளியான முதல் நாள் மட்டும் 1.1 கோடி புத்தகம் வெளியான 10 நாளில் 15 கோடி புத்தகம் விற்றிருக்கிறது.

ஏழு புத்தகங்களும் சேர்த்து 350 மில்லியன் அதாவது 35 கோடி புத்தகங்கள் 64 மொழிகளில் விற்றிருக்கிறது.

குழந்தைகள் நாவல் என்று இல்லை எந்த ஒரு நாவலும் இது வரை ஹாரி பாட்டர் அளவுக்கு விற்றதில்லை விற்கவும் போவதில்லை.

இந்தப் புத்தகம் வெளியான சமயம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஒன்றும் பெரிய players கிடையாது. எதோ 1 கோடி போட்டி இரு கோடி எடுக்கும் வியாபாரத் தந்திரம் எல்லாம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தாலும் செய்திருக்க முடியாது. இந்த நாவலைப் படித்த ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் சொல்லி அப்படியே தான் பிரபலமானது ஹாரி பாட்டர்.

இந்த உலகம் ஐடியல் உலகம் கிடையாது. 1000 ரூபாய் சட்டை வாங்கி போடும் சமயம் 100 ரூபாய்க்கு சட்டை இருக்கு அதை வாங்கிப் போட்டுட்டா போதும் மீதி 900 ரூபாய் அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவலாம் என்று எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம்.

இவ்வளவு பேரும் புகழும் கிடைத்ததால் ரௌலிங் கெட்டவரா? இந்தியாவின் மீடியாக்களுக்கு காசு கொடுத்து அவர் தான் இது போன்ற செய்திகளை காட்டச் சொல்கிறாரா? கண்டிப்பாக ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே கிடையாது.

இது போல எத்தனை புத்தகங்கள் இதே போன்ற வியாபாரத் தந்திரம் மூலம் விற்றுத் தீர்ந்திருக்கிறது? இந்தப் பதிவில் எழுதி வைத்திருக்கிறேன் இனி மேல் ரௌலிங் நினைத்தால் கூட ஹாரி பாட்டர் போன்ற பிரபலமான ஒரு புத்தகம் எழுத முடியாது இது போன்ற ஒரு euphoria இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு புத்தக வெளியீட்டால் வராது.

ஹாரிபாட்டர் வெளியாகும் அதே நாளில் அந்தப் புத்தகம் பல லைப்ரரிகளுக்கும் அனுப்ப பட்டுள்ளது.

ரஜினி படத்திற்கு 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்றது அதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்? ரஜினி இதில் எல்லாம் தலையிட்டு கூடாது என்று சொல்ல வேண்டுமா?

அப்படி சொல்ல வேண்டும் என்று கருதுபவர் 100 ரூபாய் சட்டைக்காரரைப் போல Ideal நபராக இருக்க வேண்டும் இல்லை என்றால் முதுகைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Thursday, August 09, 2007

GOD must be alien !!!! - 2

நமக்கு காய்ச்சல் தலைவலி போன்றவை வருவதற்கு காரணியாக இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை உயிரினம் என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே தோன்றுகிறது உயிரினங்களில் மிக முக்கியமான ஒரு ஆற்றல் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வது தான். மனிதன் ஒரு நுட்பம் வாய்ந்த மிருகம் என்று அறியப்படுவதற்கு பலர் அவனுடைய மூளை தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு பரிணாம வளர்ச்சி மூளையை விட மிக முக்கியமான ஆயுதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அதுதான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் மற்ற மிருகங்களிடத்தில் இருந்து தாக்குப் பிடிக்க வைத்தது. அதுதான் Opposable Thumb( எதிர்மறையான வளையக் கூடிய பெருவிரல்).

ஒரு நாய் நம் மீது கல் எடுத்து எறிய முடியுமா? இல்லை கம்பு எடுத்து சுற்ற முடியுமா? அதற்கு கை இல்லை அதனால் முடியாது என்றால் உண்மை இல்லை. நாய்க்கு நம் போலவே கை இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட அது முடியுமா? முடியாது ஏனென்றால் அதனுடைய பெருவிரல் அமைப்பு அது போல இல்லை. கீழ்கண்ட விஷயங்களை பெருவிரல் உதவி இல்லாமல் செய்து பார்க்க முயற்சி செய்தால் இதன் மகத்துவம் நமக்குத் தெரியும்.

1. ஒற்றைத் தாள் பேப்பரை எடுத்துப் பாருங்கள்
2. ஒரு மேஜை மேல் இருக்கும் பேனா இல்லை பேப்பரை எடுத்துப் பாருங்கள்.
3. புத்தகத்தை கையில் எடுத்து பக்கங்களை பெருவிரல் உதவி இல்லாமல் திருப்பிப் பாருங்கள்.

இது போல நாம் அன்றாடம் செய்யும் பல விஷயங்களுக்கு பெருவிரலை எவ்வளவு தூரம் நம்பி இருக்கிறோம் என்று தெரியும். ஏகலைவன் பெருவிரலை துரோணர் கேட்டது என்ன ஒரு கோழைத்தனமான செயல் எனபது பெருவிரல் மகிமை புரிந்தால் தான் தெரியும்.

இப்படிப்பட்ட மகத்துவமான பெருவிரல் மனிதர்களுக்கு மட்டும்தான் மிக சரியான முறையில் அமைந்திருக்கிறது. நம் முன்னோர்களான குரங்குகளுக்கும் இது ஒரு அளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

மனிதன் இனம் இன்று பெருமிதம், சிறுமிதம் கொள்ளும் பல ஆற்றல்களுக்கு மிக முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயற்கையின் இந்த சிறிய பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு தான்.

இதே போல பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் இந்த கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளிடத்திலும் இருக்கிறது. எய்ட்ஸ் நோய் உருவாக்கும் வைரஸ் கிருமி இந்த பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு ஒரு மிக மிக சிறந்த உதாரணம்.

இந்த கிருமிகளை ஆங்கிலத்தில் பாராசைட் என்று சொல்லுவார்கள். பாராஸைட் என்பதற்கு விளக்கம் என்னவெறால் மற்ற உயிரினங்களிடத்தில் ஒட்டிக் கொண்டு அதனால் உயிர் வாழ்ந்து கொண்டு அதற்கு துன்பம் விளைவிக்கும் உயிரினம்(மனிதனையும் பூமியின் பாராஸைட் என்று சொன்னால் தவறில்லையோ?).

இந்த வைரஸ்கள் மனிதனுக்கு துன்பம் விளைவிக்கின்றன என்பதால் மனிதன் அதற்கு எதிராக மருந்துகளை கண்டு பிடித்தான். இந்த வைரஸ்கள் அந்த மருந்துகளுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானதுதான் எய்ட்ஸ் வைரஸ்.

இதனை சற்று வேறு மாதிரியாக யோசித்துப் பார்க்கிறேன் நமக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கிருமிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போமா இல்லை இவற்றை எதிர்க்கும் ஆற்றலாகிய மருந்துகளை கண்டுபிடித்திருப்போமா இல்லை இவற்றைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்போமா?

ஒரு வகையில் பார்த்தால் மனிதன் என்பவன் இந்த கிருமிகளுக்கு கடவுள் போல. மனிதன் இல்லையென்றால் பல கிருமிகள் உருவாகி கூட இருக்காது அதே போல் மனிதன் நினைத்தால் இந்த கிருமிகளை அழித்து விட முடியும்.

நாம் கடவுளைப் எந்த வகையில் பார்க்கிறோமோ இந்த கிருமிகளுக்கு யோசிக்கும் திறன் இருந்தால் மனிதனைப் பற்றி அதே போல யோசிக்கலாம்.

ஆனால் மனிதன் என்பவனுக்கு இந்த கிருமிகளைப் பற்றி கவலையே இல்லை காய்ச்சல் வந்தால் மருந்து சாப்பிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அவனுக்கு முக்கியம் மற்றபடி வேறு கவலைகள் இல்லை.

இந்த பிரபஞ்சத்துடன் மனிதனை ஒப்பிட்டால் அவன் ஒரு கிருமி கூட கிடையாது.

இந்த கிருமிகளையும் மனிதனையும் ஒரே சமயத்தில் பெரிது படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம் இந்த கிருமி மனிதன் அளவுக்கு பெரிது படுத்தினால் அதே அளவில் பெரிதுபடுத்தப்பட்ட மனிதன் இமய மலை அளவுக்கு இருப்பான்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் இமய மலை அளவு பெரியதாக இருக்கும் ஒன்று மனிதன் அளவில் இருக்கும் கிருமிகளை துன்பம் விளைவிக்கிறது என்பதற்காக மட்டும் கண்டு கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தை, இது போன்ற பல பிரபஞ்சங்களை ஆட்டுவிக்கும் சக்தி ஒன்று மனிதனை ஏன் கண்டு கொள்ள வேண்டும் இல்லை மனிதன் ஏன் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாக வேண்டும்?

இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் கண்டிப்பாக மனிதன் என்பவன் சும்மா இந்த சக்தி தான் நம்மை இயக்குகிறது என்பது கப்ஸா நாமும் ஏதோ அப்படியே இருக்கிறோம் அவ்வளவுதான் மற்றபடி கடவுள் என்ற அந்த சக்திக்கு மனிதன் என்ன செய்கிறான் அவன் எப்படி இருக்கிறான் என்ற கவலை எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது.

கடவுள் விதித்தபடி நான் வாழ்கிறேன் என்பது போன்ற வாக்கியங்கள் என் கடவுள் விதித்த விதி உன் கடவுள் விதித்த விதி என்பதெல்லாம் மூடத்தனத்தின் உச்சகட்டம் இல்லை ஆணவத்தின் இமயம்.

எல்லாவற்றையும் இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் அந்த சக்தி மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதெல்லாம் முக்கியத்துவமாக இருக்காது. அல்லா, கிறிஸ்து, ராமர் என்பதெல்லாம் இந்த சக்தியை குறிக்காது. கடவுள் விதித்தது என்று ஒன்றுமே இருக்காது.

மனிதனுடைய உடல் இல்லாமல் இயங்க முடியாது கிருமிகள் போலத்தான் நாமும் இந்த பூமியில். இந்த பூமி இல்லை என்றால் இயங்க முடியாத ஒரு கிருமி. அந்த கிருமியை நாம் எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறோமோ அதே போலத்தான் இந்த பூமியில் நாமும் இருக்கிறோம்.

பிரபஞ்ச இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் நாம் கடவுள் என்று யோசித்துக் கொண்டிருப்பது உருவகித்துக் கொண்டிருப்பது எதனை அல்லது எவற்றை?

ஆடு மாடுகளை நாம் நடத்துவது போல நம்மை நடத்தும் ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆடு மாடுகளுக்கு மின்சாரம் என்பது எப்படி ஒரு மாயாஜாலமோ அதே போல நமக்கு மாயாஜாலமாக தெரியும் அல்லது தெரிவிக்கும் சக்திதான் நமக்குக் கடவுள் அது வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது ஏனென்றால்....

Monday, April 09, 2007

GOD must be alien!!!! - 1

"Hayflick limit" பூமியில் உள்ள உயிரினங்கள் ஏன் முதுமை அடைகிறான் ஏன் இறந்து போகிறான் என்பதை மிக எளிய முறையில் விளக்கும் கண்டுபிடிப்பு. உயிரினங்களுக்கு அடிப்படையானவை செல்கள். ஆணின் விந்து பெண்ணின் ஓவத்துடன் இணைந்த உடன் ஒரு செல் ஒன்று உருவாகுகிறது. இந்த ஒரு செல்லில் இருந்து தான் மனிதன் என்பவன் உருவாகுகிறான். இந்த ஒரு செல் விந்து ஓவத்துடன் இணைந்த சிறிது நேரத்திலேயே பல செல்களாக பிரியத் துவங்குகிறது.

மனிதனுடைய உடலில் பல வகையான செல்கள் உள்ளன. நமது தோலில் உள்ள செல்கள் நமது ரத்த நாளங்களில் உள்ள செல்களை விட வித்தியாசமானவை. ஆனால் இவை அனைத்தும் ஒரே ஒரு செல்லில் இருந்து தான் உருவாகுகிறது. அந்த ஒரு செல் ஒத்த பல செல்களாய் மாறிய உடன், ஒவ்வொரு செல்லிலும் சில ஜீன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். மற்ற ஜீன்கள் வேலை செய்யாமல் அமைதியாகி விடும். இப்படி ஜீன்கள் வேலை செய்வதையும் செய்யாததையும் பொறுத்து அந்த ஒரு செல்லில் இருந்து பிரிந்து வந்த ஒத்த செல்கள் வேறு வேறு செல்களாய் மாறத் தொடங்கும்.

இப்படி ஒவ்வொரு செல்லும் மாறி வேறு வேறு செல்களாய் மாறுவதை Cellular differentiation என்று சொல்லுவார்கள்.

இந்த Cellular differentiation முழுமை அடைந்த உடன், நம் உடலில் உள்ள செல்கள் பிரியத் தொடங்கும், பிரிந்து புது செல்களாய் செல்கள் உருவாக உருவாக பழைய செல்கள் இறக்கக் துவங்கும். ஆனால் இந்த செல்கள் பிரிந்து கொண்டே இருப்பது இல்லை ஒரு குறிப்பிட்ட தடவை பிரிந்த உடன் இந்த செல்கள் மீண்டும் பிரியும் தன்மையை இழக்கின்றன. இப்படி எத்தனை தடவை இந்த செல்கள் பிரியும் என்பதை மிக துல்லியமாக வரையறுத்து சொல்வதுதான் "Hayflick limit".

மனிதர்களுக்கு "Hayflick limit" 52, அதாவது மனிதர்களுடைய செல்கள் 52 தடவை மட்டுமே பிரிந்து போகும் தன்மை கொண்டது. இதில் முதல் முறையாக உருவான செல்களுக்கும் 52 தடவை உருவாகும் செல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. 52 தடவை பிரிந்து உருவான செல்களால் தான் முதுமை உருவாகுகிறது.

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 100,000,000,000,000 செல்கள் அதாவது 1 போட்டு 14 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனை வருமோ அத்தனை செல்கள்.

ஆனால் இதில் இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் 10 போட்டும் 14 பூஜ்ஜியங்கள் போட்டால் வரும் தொகை கொண்ட செல்களை உடைய நாமும் ஒரே ஒரு செல் கொண்ட ஒன்றும் உயிரினம் தான். இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் நம்முடைய கொள்ளு கொள்ளு கொள்ளு என்று பல கொள்ளு போட்டால் கிடைக்கும் கொள்ளுத் தாத்தா இந்த ஒரு செல் உயிரினம் தான்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நம்மால் பார்க்க முடிந்த அண்டவெளிகள் மட்டும் 100, 000, 000, 000 அதாவது 1 போட்டு 11 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனையோ அத்தனை. நம்மால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எத்தனை அண்டவெளிகள் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நம் உடலில் இருக்கும் ஒரு செல் மட்டும் தனியாக எடுத்தால் நம் கண்களுக்குக் கூடத் தெரியாது. இந்த பிரபஞ்சத்தை ஒரு உருவமாக எடுத்துக் கொண்டால் நம் அண்ட வெளி என்பது ஒரு செல் என்று வைத்துக் கொள்ளலாம் அதாவது நமது அண்டவெளி என்பது கண்களுக்குப் புலப்படாத ஒரு செல் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் சமயம். இந்த அண்ட வெளியுடன் ஒப்பிடும் சமயம் நமது சூரியனை ஒரு செல்லாக கருதலாம். அதாவது நமது மொத்த அண்டவெளியையும் மனிதன் உருவத்துக்கு சுருக்கினால் சூரியனை கண்களால் காண இயலாது.

நமது சூரியனை மனிதனையும் ஒப்பிடவே முடியாது. ஒரு லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்த சூரியனுடன் நம்மை எப்படி ஒப்பிடுவது?

இதற்கும் இந்த பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

கடவுள் என்பவரைப் பற்றி நாம் யோசிக்கும் சமயத்தில் எல்லாம் நாம் அவர் எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்தி வடிவமாகத்தான் கருதுகிறோம்.

இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தி வடிவம் இறைவன் என்று வைத்துக் கொண்டால் நம்மையும் அவரேதான் கட்டுப்படுத்துகிறார் என்பது ஆணவத்தின் உச்சகட்டம். இந்த பிரபஞ்சத்துடன் நம்மை ஒப்பிட்டு நாம் தூசு என்று நினைத்தால் கூட அது ஆணவத்தின், மூடத்தனத்தின் உச்ச்சகட்டம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் நம்மையும் ஒரே சக்தி கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டால் அது நம்முடைய மூடத்தனத்தின் உச்சகட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த பிரபஞ்சத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்தி தான் உண்மையான இறைவன். அப்படி என்றால் கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது யாரை எதனை?

கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வேற்றுகிரகவாசிகளாக தான் இருக்க வேண்டும். முட்டாள்தனமாக தோன்றினாலும் இது தான் உண்மை என்பதற்கு நம்முடைய எல்லாப் புனித நூல்களிலும் உதாரணங்கள் இருக்கின்றன நம் கண் முன்னே இதற்கு சாட்சியங்களும் இருக்கின்றன. அவை என்னவென்றால் ......

Wednesday, January 10, 2007

atheism-myth understood??!!

"பகுத்தறிவு என்பது மர்மங்களை அறிந்து கொண்டது. "

எங்கேயோ எப்போதோ படித்த வாசகம் இது. பல சமயங்களில் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன்.

சினிமா நடிகைகளின் இடுப்பு, அவர்கள் கட்டியிருக்கும் சேலை ஆகியவற்றுக்கு அடுத்து மனித குலத்தைக் ஆர்வத்தை சுண்டி இழுப்பதில் மர்மங்களுக்கு பெரிய பங்கு உண்டு.

பிரேமானந்தா போன்ற போலிச் சாமியார்களின் வாயில் இருந்து லிங்கம் வரவழைப்பது, கையில் விபூதி கொட்டச் செய்வது போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மனிதர்கள் ஏமாறுவது மனிதர்களுக்கு மர்மங்களில் உள்ள ஆர்வத்தாலும், ஈர்ப்பினாலும்தான்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை தவிர்த்தும் பல மர்மங்கள் இந்த உலகில் உண்டு.

ஆவிகள் என்பது இன்னும் மனிதர்கள் அறிந்து கொள்ள முடியாத மர்மம் தான். பெர்முடா முக்கோணம் என்பதும் இன்று மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத மர்மமாகவே இருக்கிறது. சில மனிதர்களுக்கு இருக்கும் சக்திகள் இல்லை சிலரால் செய்ய முடிகின்ற சில செயல்கள்(உதா யூரி கெல்லரின் ஸ்பூனை கண் பார்வையாலேயே வளைக்கும் திறன்) போன்றவை மர்மமாகவே இருக்கிறது. Ripley's beleive it or not போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காட்டப்படும் சில விஷயங்கள் ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

இது போன்ற மர்மங்கள் அனைத்தையும் பகுத்தறிவு அறிந்து கொண்டேன் என்கிறது இந்த சொல்லாடல்.முதன் முதலில் இந்த வாசகத்தைப் படித்த சமயம், இவ்வளவு மர்மங்களையும் அறிந்தேன் என்று சொல்கிறதே என்ன ஒரு ஆணவமான சொல்லாடல் என்று தோன்றியது.

பின் யோசித்துப் பார்க்கும் சமயம் இன்றைய உலகில் மர்மங்கள் என்பது குறைந்து கொண்டே வருகிறதோ என்று தோன்றுகிறது.

Big bang என்பது தெரியும் முன்னால் எப்படி இந்த உலகம் உருவானது என்பதே ஒரு மிகப் பெரிய மர்மம்தான். இன்றும் அது மர்மம் இல்லை அதனை அறிந்து கொண்டேன் என்று சொல்ல இயலாது என்றாலும் அந்த மர்மத்தின் பல முடிச்சுகள் அவிழ்ந்து விட்டது என்பதை அறிவுள்ளோர் அனைவரும் ஒப்புக் கொள்வர்.

இதே போன்று பல மர்மங்களின் முடிச்சு அவிழ்ந்து கொண்டே தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஆவிகள் குறித்த ஆராய்ச்சிகள் சில ஒரு விதமான பிரமிப்பாக ஏற்படுகிறது. ஒரு ஆராய்ச்சியில் psychon என்ற பொருள் ஒன்று இருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இந்த் பொருள்கள் உடலுக்குள் எல்லா இடங்களில் பரவி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த பொருள் ம் உடலுக்குள் நம்முடைய உணர்வுகளை நரம்புகள் மூலம் எடுத்துச் செல்ல உதவுகின்றதாக கூறுகிறார்கள். மேலும் இந்த்ப் பொருள்கள் நாம் இறக்கும் சமயம் நம் உடலை விட்டு வெளியே வெளியேறி ஆவி போன்ற தோற்றம் அளிக்கலாம் என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த ஆராய்ச்சி மூலமாக நிறைவேறாத ஏக்கம், ஆசை உள்ளவர்கள் ஆவியாகுகிறார்கள் என்று இருக்கும் நம்பிக்கைகள் கூட விளக்க முடியும் என்கிறார்கள்.

உதாரணத்திற்கு கேபிள் இல்லாமல் ஆண்டனா மட்டும் வைத்துக் கொண்டிருக்கும் வீடுகளில் பக்கத்தில் கேபிள் ஒயர் சென்றால் சன் டீவி புள்ளி புள்ளியாக தெரிகிறது இல்லையா அது போலத்தான் இதுவும் என்கிறார்கள். நம் உடலுக்குள் சென்று கொண்டிருக்கும் எண்ணங்கள் வெளியே கசிவதால் உண்டாகும் பிம்பங்களை பிரதிபலிப்பே ஆவி என்பது போல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு ஏற்படும் உணர்வு அல்லது அவர்கள் யோசிப்பது சில சமயம் வாய் விட்டு சொல்லாமலே நமக்குப் புரிகிறது இல்லையா? அதுவும் இந்த வகையையே சார்ந்ததே.

இது ஒரு வகை ஆராய்ச்சியே வேறு விதமாகவும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.

மனிதர்களுக்கு இருக்கும் விஷேசமான சக்திகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

கண் தெரியாத ஒருவருக்கு ஏன் கேட்கும் திறன் அதிகமாக இருக்கிறது? அந்த சக்தியை அவர்கள் அதிகமாக நம்பி இருப்பதால் அந்த சக்தியை நமது மூளை அதிகமாக வளர்த்து விடுகிறது. இதே போல மோப்ப சக்தி மனிதர்களுக்கு ஏன் இல்லை ஏனெனில் மோப்ப சக்தியை நம்பி மனிதர்கள் வாழவில்லை. அவனுக்கு ஏதேனும் ஒரு காரணத்திற்காக அது அதிகமாக தேவைப்பட்டிருந்தால் அந்த சக்தி அவனுக்கு இருந்திருக்கும். இதே போல தான் விஷேசமான சக்திகளும் என்று ஆராய்ச்சி நடந்து கொண்டு வருகிறது.

ஒரு ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு ஏன் telepathy சக்தி இல்லை மனிதர்களுக்கு இது ஒரு அத்தியாவசியமான ஒரு தேவை இல்லை. அதனால் அந்த சக்தியை மூளை வளர்த்துக் கொள்வதில்லை என்று சொல்கிறார்கள். மேலும் அந்த ஆராய்ச்சியில் ஆபத்துக் காலங்களில் இல்லை நம்மையே அறியாமல் பல சமயம் நாம் டெலிபதி போன்ற சக்திகளை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். யாராவது நெருங்கிய உறவினருக்கு ஆபத்து ஏற்படும் சமயம் அவருக்கு நெருக்கமானவர்கள் அதனை உணர்வது போன்ற சம்பவங்கள் பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். இதெல்லாம் நாம் நம்மை அறியாமலே telepathy உபயோகித்து செய்வதாக சொல்கிறார்கள்.

இந்த சக்திகளை மனிதர்களால் வளர்த்துக் கொள்ள முடியுமா என்றும் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு பக்கத்து அறையில் மாட்டி இருக்கும் ஓவியம் என்ன என்பதை அறியும் ஆராய்ச்சிகள். இதன் மூலம் டெலிபதி உணர்வு மூளையின் எந்தப் பகுதியில் இருந்து செயல்படுகிறது என்பது போன்றவற்றை எல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

யூரி கெல்லர் spoonஐ வளைத்துக் காட்டியது போல இன்னும் பல விஷயங்கள் மனிதர்களால் செய்ய முடியும் ஆனால் spoonஐ வளைப்பதை விட வேறு முக்கியமான பல விஷயங்கள் இருப்பதால் அவர்கள் செய்வதில்லை என்றும் சொல்கிறது ஆராய்ச்சி.

இதே போலத்தான் பெர்மூடா முக்கோணம் குறித்த ஆராய்ச்சிகளும் காந்த சக்தி, மின் சக்தி போன்றவை இந்தப் பகுதிகளில் சீராக இல்லாத காரணங்களால் கப்பல்கள், விமானங்கள் விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் இல்லை வேறு விதமாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஆகவே உலகில் உள்ள மர்மங்களை எல்லாம் அறிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவமானதாக ஆரம்பத்தில் தோன்றினாலும் அதனைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் சமயம் வேறு விதமாக தோன்றுகிறது.

அந்த சொல்லாடல் மர்மங்களை அறிந்து கொண்டேன் என்று சொல்வது மர்மங்களை முழுவதுமாக புரிந்து கொண்டேன் என்பது போல அர்தத்தில் இல்லை. ஆனால் அதன் அர்த்தம் எந்த விதமான மர்மமாக இருந்தாலும் அதனை புரிந்து கொள்ள தேவையான அறிவைப் பெற்றிருக்கிறேன் என்று சொல்வது போலத்தான் அமைந்திருக்கிறது.

நிற வெறி என்பது melanin பற்றிய மர்மத்தை அறிந்து கொள்ளாததால் உருவானது. ஜாதிகள் எல்லா மனிதர்களும் குரங்கில் இருந்து மனிதர்களாக வளர்ச்சி அடைந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளாததால் உருவானது தான். இன்று ஏற்படும் மத சண்டைகள் பிரபஞ்சத் தோற்றத்தில் தொடங்கி எல்லா விஷயங்களிலும் பிற மதம் மட்டும் தப்பு தப்பாக போதிக்கவில்லை தன் மதமும் தப்பு தப்பாகத் தான் போதிக்கிறது என்பதை உணராததால் வருவது தான்.

மர்மங்களை புரிந்து கொண்டேன் என்று சொல்வது ஆணவம் இல்லை அறியாமையில் இருந்து வெளியே வரும் ஒரு வாயில்.

மதனின் மனிதனும் மர்மங்களும் படித்த போது தோன்றிய சில சிந்தனைகள்.

Sunday, December 03, 2006

குறும்பு - 1

வெள்ளந்தியா சுத்தி வந்த
காலந்தான் மறக்கவில்லை

அக்குறும்பு செய்யாதீன்னு
அம்மாச்சி சத்தம் போட
சத்தம் கேட்டு குஷியாகி
கூடைக் கோழி திறந்து விட்டு
எதை தொறத்தறதுன்னு முழிக்க
வைச்சு அக் குறும்பில்
வெள்ளந்தியா சிரிச்சு திரிஞ்ச
காலந்தான் மறக்கவில்லை

காலைல போன புள்ள
காணலையேன்னு வீட்டிலதான்
அப்பனாத்தா கவலை கொள்ள
ரெண்டு ரூபா பந்துமா
தென்னை மட்டை பேட்டுமா
இருட்டியும் தெரு லைட்டோரமா
வெள்ளந்தியா விளையாண்டு பறந்த
காலந்தான் மறக்கவில்லை

எலந்த வடை ருசிக்கு முன்னே
கோடி ரூபா தேவையில்லை
வாங்கி தின்ன கொள்ளை
காசு எல்லாம் தேவையில்லை
கண்டதை வாங்கி திங்குதேன்னு
அப்பன் ஆத்தா கவலை கொள்ள
வெள்ளந்தியா தின்னு ரசிச்சு ருசிச்ச
காலந்தான் மறக்கவில்லை

சுரைக்காய் எல்லாம் கட்டினதில்லை
புதுசாப் போட்ட சொக்காயோட
சிநேகிதக்காரங்க தண்ணில போட
ததக்கா பிதக்கான்னு நீச்சல் கத்து
தூக்கி போட்ட பயலுகளை
எல்லாம் தண்ணில அமுக்கி அமுக்கி
வெள்ளந்தியா துள்ளி நீந்தின
காலந்தான் மறக்கவில்லை

பக்கத்து வீட்டு பாரதி அக்கா
வயசுக்கு வந்ததுக்கு அப்புறமும்
ஜடையை புடிச்சு இழுத்துட்டு
அவிங்கம்மா அடிக்கு தப்பி
அவிங்க ஜடையையும் இழுத்து ஓடி
பின்னால தாஜா செஞ்சு
வெள்ளந்தியா வலைய வந்த
காலந்தான் மறக்கவில்லை

சோறு தண்ணி தேவையில்லை
அப்பன் ஆத்தா நெனைப்பில்லை
வானம் எல்லைன்னு தோணவில்லை
மழையில ஜலதோஷம் நினைச்சதில்லை
இருட்டைத் தவிர பயமேயில்லை
கவலையோட அர்த்தமே தெரிஞ்சதில்லை

வெள்ளந்தித்தனம் மறந்(த்)து போன
இன்னைக்கும்
வெள்ளந்தியா சுத்தி வந்த
காலம் மட்டும் மறக்கவில்லை

Monday, November 20, 2006

இலவசம் இளப்பம் காதல்

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”

கல்பனா பக்கத்தில் கொஞ்ச நேரம் இருந்தா இந்தப் பாடலைக் கேட்கலாம். கல்பனாவுக்கு எல்லாமே தேடல் தான். அவங்க அப்பா கத்துக் கொடுத்தது. சின்ன வயசில் அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் போது பொறுமையா அது என்ன என்று சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதற்கு அப்புறம் வேற எதைப் பத்தியும் கேட்க முடியாது. அதுக்குள்ள இவங்க அப்பா அதைப் பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவார். பேரை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதனைப் பற்றி கொஞ்சம் விவரமும் தெரியும் வரை விட மாட்டார்.

சாமின்னா என்னான்னு தெரியணுமா? எனக்கு தெரிஞ்சது இது. இது அவங்க சொன்னது. இது இன்னொருத்தர் சொன்னது. இங்க இது மாதிரி சொல்லி இருக்கு. ஆக இதில் இருந்து சாமின்னா என்னான்னு நீயே முடிவு பண்ணிக்கோ அப்படின்னு சொல்லீடுவார்.

"இன்னைக்கும் எல்லாருமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி எல்லாரும் யாரோ எப்பவோ சொன்னதை அப்படியே நம்பீட்டு இருக்காங்க, மாற்றம் ஒண்ணு மட்டும் தான் நிலையானதுன்னு எல்லோரும் புரிஞ்சுக்கணும். மனிதன்,மதம்,அரசாங்கம்,கொள்கைகள் எல்லாமே சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் காலகட்டத்துக்கு தகுந்த மாதிரியும் மாறிகிட்டே இருக்கணும் அப்போ தான் நிலைக்க முடியும். பழையன் கழிதலும், புதியன புகுதலும் என்பது தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கணும்.

மாற்றங்களை யாரும் ஒத்துக்கலேன்னாலும் நடந்துகிட்டே தான் இருக்கும். அதை ஒத்துகிட்டு அமைதியா வழிவிடாம எங்க அப்பன் பாட்டன் காலத்தில் இருந்து இருக்கறதுன்னால நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சில பேர் நினைக்கறதுனால தான் எல்லாப் பிரச்சனையும்.

இதில என்ன ஒரு வேதனையான விஷயம்ன்னா ஒரு பழையதுக்கு பதிலா புதுசா ஒண்ணை நுழைக்கறவங்களே அது பழசாகும் வேற புதுசா ஒண்ணு வரும் பொழுது குறுக்கே நிற்கறாங்க இதனால் எத்தனை பிரச்சனைகள் தெரியுமா. மனித சரித்திரம் புல்லா இது போலத் தான் நடந்துட்டே இருக்கு."

என்று பேசிக் கொண்டே வந்த கல்பனா அபி கவனம் எங்கோயோ போவதைப் பார்த்து விட்டு

"ஏண்டா குரங்கு நான் எவ்வளவு சீரியஸா பேசீட்டு இருக்கேன் அங்க அந்த மஞ்ச சுடிதாரைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருக்கியா?" என்று தோளில் ஓங்கிக் குத்தினாள்.

"இல்லை இல்லை. மதங்கற அமைப்பு ரொம்ப தப்புதான். உலகில் பல அநியாயத்துக்கும் அதுதான் காரணமா இருக்கு நான் ஒத்துக்கறேன்." என்றான் அபி.

"ஏண்டா நான் பேசுன ஒரு வார்த்தையைக் கூட கவனிக்கலியா?" என்று மீண்டும் குத்தினாள் கல்பனா.

"இல்லை இல்லை மதம் பத்தி பேசலியா? அப்போ பிளாக் ஹோல்சைப் பத்தியா? ஐய்யோ அடிக்காத ப்ளீஸ். அப்போ தேடல் பத்தி பேசினியா? ஐயோ அடிக்காத அடிக்காத ப்ளீஸ்" என்றான் அபி.

"போடா பன்னி, குரங்கு, கரடி எங்கூட பேசாத போடா" என்று திட்டிக் கொண்டே வந்தாள்.

"அய்யோ சாரிமா சாரிமா நீ என்ன டாபிக்கைப் பத்தி பேசினேன்னு சொல்லு நீ என்ன பேசுனேன்னு நான் அப்படியே திரும்பி பேசிக் காட்டுறேன். ப்ளீஸ் ப்ளீஸ்." என்றான் அபி.

அவனுடன் சண்டைப் போட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை ரெண்டு நிமிஷம் கூட தாங்காது என்று தெரிந்து வைத்திருந்த கல்பனா. "ஏண்டா நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கேன். போயும் போயும் அந்த யெல்லோ சுடிதாருக்காக நீ இப்படி பண்ணீட்டியேடா?" என்றாள்.

"எல்லாத்துலேயும் தொலை நோக்குப் பார்வை வேணும்ன்னு சொல்லுவே இதில் மட்டும் உனக்கு அது இல்லையே. நான் அந்த யெல்லோ சுடிதாரைப் பார்க்கலே. அதையும் தாண்டி ஒரு பிங்க் கலர் டாப்ஸ் போட்டுகிட்டு ஒரு குட்டி நிக்குது பாரு அதைத் தான் பார்த்தேன்." என்றான் அபி.

"டேய் உன் ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி பாருடா. குரங்கு மாதிரி இருந்துட்டு உனக்கு கிளி கேட்குதா? அடங்குடா" என்றாள் கல்பனா.

ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்று ஒரு ஒரு நிமிஷ சண்டை மீண்டும் ஆரம்பமானது.

அபி கல்பனா அப்பாவின் உயிர் தோழனின் பிள்ளை. இருவரும் சிறு வயதில் இருந்து இணைபிரியாத நண்பர்கள். அபி கல்பனாவிற்கு நேர் எதிர். எல்லாத்தையும் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது என்று நினைக்கும் ஆள்.

வாழ்க்கையே கண் மூடி கண் திறக்கறதுக்குள்ளே முடிந்து விடும் அதனால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை கொண்டவன்.

இந்த இரு துருவங்களும் பிறந்ததில் இருந்து பிரிந்ததை கிடையாது. ஒட்டிப் பிறந்த சயாமீஸ் டிவின்ஸ் மாதிரி சேர்ந்தே இருப்பார்கள்.

பூப்பெய்திய காலத்தில் கல்பனா அம்மா சொன்ன தகவல்களைக் கல்பனா அபியிடம் சொல்ல கல்பனாவை விட அதிக கவலைப் பட்டு ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லை அபி.

இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதிலும் வல்லவர்கள்.

அதுவும் கல்பனாவோட ரகசிய டைரி பத்தி அபி கிண்டல் அடிக்க ஆரம்பிச்சா கல்பனா உடனே டென்ஷன் ஆகி விடுவாள்.

கல்பனா பத்தி அபிக்கு தெரியாதது என்று ஒன்றுமே இல்லாவிட்டாலும் கல்பனா ரகசியமா ஒரு டைரி எழுதி வந்தாள். அதை அபிக்கு தெரியாமல் பல காலம் ஒளித்து வைத்தாலும் கடைசியா அபி கண்ணில மாட்டீடுச்சு. விடுவானா அன்னைக்கு இருந்து ஒரே கிண்டல்தான்.

கல்பனாவுக்கு ராஜகுமாரன் வெள்ளைக் குதிரையில் வந்து இளவரசியை மீட்டுச் செல்வது போன்ற கதைகள் மிகவும் பிடிக்கும். அவளும் அவளுடைய ராஜகுமாரனைப் பற்றி கற்பனைகளை எழுதி வைத்திருந்தாள் அதுதான் அபி கையில் சிக்கிக் கொண்டு விட்டது. அன்றையில் இருந்து பயங்கரக் கிண்டல்தான்.

அதுவும்

தென் பொதிகைக் காற்றும்
தேமதுர இசையும்
அந்தி நேர வண்ணங்களும்
காற்றில் தவழுந்து சேரும் சாரல்களும்
நீ இருக்கிறாய் என்பதை
உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன

இதை ஒவ்வொரு தடவையும் சொல்லி கிண்டல் பண்ணி சிரிப்பது அபியின் வழக்கம்.

கல்பனாவுக்கு கல்யாண வயது வந்து விட்டதாக அவளுடைய அம்மா புலம்ப ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன பிறகு கல்பனாவின் அப்பா கல்யாணப் பேச்சை மெதுவாக கல்பனாவிடம் ஆரம்பித்தார்.

"அம்மா ரொம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டா. இதை பத்தி என்ன யோசனை பண்ணி இருக்கே?" என்று கேட்டார்.

அம்மா கேட்கும் போதெல்லாம் போம்மா உனக்கு வேற வேலையே இல்லை என்று முகம் சுழித்துக் கொண்டிருந்த கல்பனாவுக்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் அப்பா நன்றாக யோசிக்காமல் அவளிடம் பேச்சை ஆரம்பிக்க மாட்டார் என்று அவளுக்குத் தெரியும்.

"எனக்கு ஒண்ணும் யோசனையே இல்லைங்க அப்பா?" என்று கூறினாள் கல்பனா.

"ஒரு நல்ல வரன் வந்திருக்கு பையன் உனக்கு ஏத்த மாதிரி இருப்பான்னு தோணுது. பார்க்க வரச் சொல்லாமா?" என்று கேட்டார் கல்பனாவின் அப்பா.

அதற்குள் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்த கல்பனா "நீங்க பார்த்து எது செய்தாலும் ஓகே தான்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

நேராக அபியின் வீட்டுக்கு வந்து அவனுடைய ரூமுக்கு சென்றாள் அங்கே ஒரு கர்ண கொடூரமான ஓசையுடன் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் அபி. பக்கத்தில் சென்று "டே சனியனே எந்திரிடா" என்று அவனை உலுக்கினாள் கல்பனா.

"ஏய் குட்டிச் சாத்தான் நிம்மதியா தூங்க விடுடி" என்றபடி புரண்டு படுத்தான் அபி.

"எந்திரிடா" என்று மீண்டும் உலுக்கினாள் கல்பனா.

"ஏண்டி என்னை இப்படி வதைக்கற" என்றபடியே கண்களைத் திறந்த அபி கல்பனாவின் முகத்தை பார்த்தவுடன் "என்ன ஆச்சு?" என்றான் சீரியஸாக.

"வீட்டுல கல்யாணத்தைப் பத்தி திரும்ப பேசறாங்கடா" என்றாள்.

"அவ்வளவுதானா? நான் என்னமோன்னு நினைச்சேன். அதான் ஸ்டாண்டர்டா பதில் வைச்சிருப்பியே உனக்கு வேலையே இல்லைன்னு. நானும் ஆண்டிக்கிட்ட சொல்லீட்டே தான் இருக்கேன் சீக்கரம் கல்யாணம் பண்ணிக் குடுங்க நானாவது நிம்மதியா தூங்குவேன். காலைல 6 மணிக்கு எழுப்பி விடுறியே உனக்கே இது நியாயமா இருக்கா?" என்று சொல்லிக் கொண்டே வந்தவன் கல்பனாவின் முகத்தைப் பார்த்து அமைதியானான்.

"இந்த தடவை அப்பா இந்த விஷயத்தை பத்தி பேசினார்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனம் நிலவியது அறையில். "அப்பா பேசினாரா? என்ன சொன்னார்?"

"நாளைக்கு காலைல பொண்ணு பார்க்க ஒருத்தர் வராங்களாம்"

"ஓ அப்படியா?" என்றான் அபி ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு

"அது சரி உன்னோட டைரி எழுதி இருந்ததெல்லாம்?"

பேசாமல் அமைதி காத்தாள் கல்பனா.

"அதெல்லாம் அப்படியே மறந்திடப் போறியா?" என்றான் அபி.

"எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான்னு கனவு இருக்கத்தான் செய்யுது ஆனா எத்தனை பேருக்கு அந்த மாதிரி வாய்ப்பு அமையுது?"

அபி பேச்சை மாற்றுவதற்காக "ஹீம் விடு பார்த்துக்கலாம் இந்தப் பையன் தான் நீ நினைச்ச ராஜகுமாரனோ என்னமோ? சரி பொண்ணு பார்க்க வரப் போறாங்க எந்த டிரெஸ் போடப் போறே?"

"டிரெஸ் என்ன எதையாவது போட வேண்டியது தான்"

"என்ன எதையாவது போடறியா? ஒரு நாளைக்காவது ஊரில பொண்ணுங்க எல்லாரும் டிரெஸ் போடுற மாதிரி போட மாட்டியா? ஆம்பிளைப் பசங்க மாதிரியே இன்னைக்கும் டிரெஸ் போடாதே சரியா? இன்னைக்கு முதல் வேலையா உனக்கு ஷாப்பிங் பண்ணி டிரெஸ் எடுக்கணும் வீட்டுக்குப் போய் கிளம்பு நானும் இன்னும் 1/2 மணி நேரத்தில கிளம்பி வர்றேன்."

அன்று முழுவதும் ரெண்டு பேரும் ஊர் முழுக்க சுற்றி ஷாப்பிங் செய்து திரும்பினார்கள் இருவரும்.

அடுத்த நாள் காலை 8 மணிக்கு எல்லாம் கல்பனாவின் வீட்டுக்கு வந்த அபி "ஆண்டி அவளுக்கு இந்த பிங்க் கலர் சாரி, அப்புறம் இந்த பெரிய நகையா எதுவும் போட்டு விட்டுடாதீங்க. சும்மா மெல்லிசா ஒரு தங்க நகை, அப்புறம் இந்த முத்து வாங்கி வைச்சீங்களே அதை போட்டு விடுங்க. அப்புறம் அவளுக்கு மேக்கப்ன்னா என்னான்னே தெரியாது. உங்க முகத்தில இருக்கற மாதிரி நிறைய பவுடர் அப்பி விட்டுடாதீங்க." என்றெல்லாம் கல்பனாவின் அம்மாவுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"சரி பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட நீ யாரையாவது புதுசா மீட் பண்ணும் போது uncomfortableஆ முகத்தில் தெரியற மாதிரி uncomfortable ஒரு சிரிப்பியே அது மாதிரி சிரிச்சிடாதே. வீட்டில இருக்கும் போது இளையராஜா பாட்டு கேட்டா உன்னோட முகத்தில ஒரு அப்படியே லைட்டா ஸ்மைல் பண்ணுவியே அது மாதிரி முகத்தை வைச்சுக்கோ. இளையராஜா பாட்டு ஒண்ணை ஞாபகப்படுத்திக்கோ சரியா?" என்று படபடவென்று பொரிந்தான் அபி.

"சார் நீங்க கொஞ்சம் வெளியே இருந்தீங்கன்னா அவளை ரெடியாக்குவோம் நீங்க இங்க இப்படியே இருந்தீங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது. சரியா?" என்று சொன்னாள் கல்பனாவின் அக்கா முறை வரும் சொந்தக்காரர்களில் ஒருவர்.

"ஹீம் சரி சரி" என்றபடி வெளியே சென்றான் அபி.

அரை மணி நேரம் கழித்து "டேய் இங்க வாடா" என்ற குரல் கேட்டு உள்ளே சென்றான் அபி.

அங்கே முழு அலங்காரத்தில் அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்தாள் கல்பனா.

"என்னடா அப்படி பார்க்கறே எப்படி இருக்கு டிரெஸ்?"

"Perfect. ஒரு நிமிஷம் இரு வெளியே என்னைக் கூப்பிட்டாங்க வந்திடறேன்"

"டேய் இருடா" என்று கூப்பிட கூப்பிட வெளியே சென்றான் அபி.

10 மணி ஆயிற்று மாப்பிளை வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். மாப்பிளை பொண்ணு பார்க்க பகட்டா எல்லாம் இல்லாமல் சும்மா சாதாரணமாக ஜீன்ஸ் டீசர்டில் வந்திருந்தார்.

கல்பனா வெளியே வந்து அவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி விட்டு உட்கார்ந்தாள். மனதிற்குள் எங்கே போனான் இந்த அபி இதோ வர்றேன்னுட்டு காணாம போயிட்டான். மாப்பிளையைப் பார்த்து ஒப்பீனியன் சொல்லாம எங்கே போயிட்டான் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கல்பனாவின் அப்பா என்னோட அந்த கலெக்ஷனைப் பாக்கறீங்களா? என்று தனியா பேச வைக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை தனியாக அழைத்து சென்றார்.

கொஞ்ச நேரம் அங்கே ஒரு விதமான அமைதி நிலவியது.

"ஹாய்" என்றார் மாப்பிள்ளை கல்பனாவிடம். "ஹாய்" என்றாள் கல்பனா.

"போட்டோவில பார்த்தை விட வித்தியாசமா இருக்கீங்க. ரொம்ப மாடர்னா போட்டோவில இருந்தீங்க. இப்போ டிரெடிசனலா டிரெஸ் பண்ணிட்டு இருக்கீங்க."

"By the bye உங்க டிரெஸ் செலக்ஷன் சூப்பர் ரொம்ப அழகா இருக்கீங்க" என்றார் மாப்பிள்ளை.

கல்பானவுக்கு தன்னுடைய போட்டோ கொடுக்கப் பட்டதெல்லாம் தெரியாது. ஆகவே மௌனம் காத்தாள்.

"இது மாதிரி பொண்ணு பார்க்க வர்றது எல்லாம் எனக்கு அவ்வளவா இஷ்டம் இல்லை அம்மா சொன்னாங்களேன்னு வந்தேன்." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா புன்னகைத்தாள்.

"நம்ம சிஸ்டமே இது மாதிரிதான் இருக்கு பாருங்க உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு ஒத்து வருமுன்னு கூடத் தெரியாது ஆனா வாழ்க்கை முழுக்க சேர்ந்தே இருக்கறதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்" என்றார் மாப்பிள்ளை.

"எனக்கும் இது போலத்தான் தோணுது. கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி ஒருத்தரைப் பத்தி தெரியாமா கல்யாணம் பண்ணிக்கறது கஷ்டம்தான்" என்றாள் கல்பனா.

"கரெக்ட்டுங்க. காதல்ங்கறது என்ன? நுணுக்கமா இன்னொருத்தரைப் பத்தி தெரிந்து வைச்சிக்கறது தானே? கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது. என்ன டிரெஸ் போட்டா நல்லா இருக்கும் இருக்காது. அந்தப் பெண் எத்தனை விதமா ஸ்மைல் பண்ணுவீங்க? உங்க ஸ்மைலை வைச்சே அந்தப் பெண் என்ன நினைக்கிறாங்க. அப்படீன்னெல்லாம் நினைச்சேன். உங்களுக்கு கடவுள் பத்தி என்ன views? உங்களுக்கு என்ன பேசினா பிடிக்கும் என்ன பேசினா பிடிக்காது? என்ன சாப்பாடு பிடிக்கும் என்ன பிடிக்காது. இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் நினைச்சேன். அதே மாதிரி என்னைப் பத்தியும் எல்லாமே தெரிஞ்சிருக்கணுமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம ரெண்டு பேருக்குமே அது மாதிரி எல்லாமே தெரிஞ்சவங்கன்னு யாருமே இல்லைன்னு நினைக்கறேன்?" என்றார் மாப்பிள்ளை.

கல்பனாவின் முகம் அதற்குள் மாறி இருந்தது. "என்னங்க ஆச்சு ஏன் என்னமோ மாதிரி ஆயிட்டீங்க" என்று கேட்டார் மாப்பிள்ளை

"என்னைப் பத்தி தெரியாத சில விஷயங்களைக் கூட தெரிஞ்சுகிட்ட ஒருத்தர் இருக்காருங்க. எல்லாத்திலேயும் தேடல் இருக்கணுமுன்னு நினைப்பேன் நான் அதனால என் பக்கத்திலேயே இத்தனை நாள் இருந்த ஒருத்தரை கவனிக்காம இருந்திருக்கிறேன் நான் எப்பவுமே என் பக்கத்தில இருந்ததால கொஞ்சம் தள்ளி நின்னு கவனிக்காம விட்டுட்டேன் நான். இலவசமா கிடைச்சதால இளப்பமா நினைச்சிட்டேன் நான்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு கல்பனா "சாரிங்க இதனால் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாள்.

"இல்லீங்க தப்பா நினைக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா அபியின் ரூமுக்குள் நுழையும் சமயம் கம்ப்யூட்டரில்

"Its only words and words are all I have to take your heart away"

என்று பாட்டு கசிந்து கொண்டிருந்தது.

மெதுவாக நுழைந்த கல்பனா "நீ ரெண்டு வகையா சிரிப்பேன்னு தெரியுமா உனக்கு? ஒண்ணு உன்னோட அசட்டு சிரிப்பு. இன்னொன்னு தினமும் காலைல என்னைப் பார்க்கும் போது இப்போ உன்னோட முகத்தில இருக்குதே அந்த மாதிரி சிரிப்பு."

"இத்தனை நாள் இதைப் பத்தி நான் யோசிச்சதே இல்லை" என்றாள் கல்பனா.

மெதுவாக பக்கத்தில் வந்த அபி அவளுடைய கரங்களைப் பற்றினான். எத்தனையோ தடவை ரெண்டு பேரும் கையோட கை தோளோடு தோள் என்றிருந்தாலும் இந்த தடவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள் கல்பனா. தன்னுடைய ராஜகுமாரன் கவர வந்ததை உணர்ந்த கல்பனா முதல் முறையாக சிலிர்ப்பு அடைந்து வெட்கப் பட்டு தலை குனிந்தாள்.

Thursday, November 16, 2006

ஆன்மீகமும் மதமும் நாத்திகமும்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

இல்வாழ்க்கைக்கு பண்பு உண்டெனில் அது அன்புடனும், அறத்துடனும் வாழ்க்கையை நடத்துவதே என்ற இந்த ஒன்றரை வரிக் குறள் சொல்லி இருப்பதை விட சிறப்பாக வாழ்க்கை நெறிமுறைகளைப் எந்த மத நூல்களும் சொல்லி விட முடியாது. சராசரி மனிதன் ஒருவனுக்கு இந்த ஒன்றரை வரிகளே போதுமானது. வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொள்ள மற்ற ஆயிரத்து முன்னூற்றி இருபத்தொன்பது குறள்களும் கூட அவசியமற்றதாகி விடுகிறது.

உண்மையான ஆன்மீகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது வேதாத்திரி மகரிஷி அவர்கள். அகத்தாய்வு என்றும் குண்டலினி என்று பல வேறு அற்புதமான விஷயங்களை எனக்கு சொல்லி கொடுத்த ஆன்மீக குரு அவர்.

மகரிஷியின் சிந்தனைகளில் மிக முக்கியமானது "பிறருக்கு உடலாலும் மனதாலும் துன்பம் நினையாதே" என்பதுதான்.

வள்ளுவரின் குறளுக்கும் மகரிஷியின் சிந்தனைக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.

அவர் தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தைக் கழித்தது ஓம்கார மண்டபத்தில்.

சைவ சிந்தாதத்தின் ஒரு முக்கியமான அம்சமான ஓம் வடிவிலான அந்த மண்டபத்தில் யார் நுழைந்தாலும் அங்கே எழுதப் பட்டிருக்கும் இந்த வாக்கியத்தைக் காணலாம்.

"உலகில் உள்ள மதங்களை எல்லாவற்றையும் நீக்கி மக்களிடையே ஒற்றுமை வளரச் செய்ய வேண்டும்." என்பது தான் அந்த வாக்கியம்.

மதமும் ஆன்மீகமும் ஒன்றே என்பதை எனக்கு உடைத்துக் காட்டிய வாக்கியம் இது.

மதம் என்ற அரசியல் அமைப்புக்கும் ஆன்மீகம் என்ற சிந்தனைக்கும் உள்ள பல வேறுபாடுகளை உணர்ந்தும் வாக்கியம் இது.

இன்றைய மதம் என்பது மனிதனுக்கு புரியாத வகையிலும் அவனை ஒரு பிரமிப்புக்கு ஆட்படுத்தி, பயமுறுத்தி, பரவச நிலை போன்ற தந்திரமான வார்த்தைகளை பயன் படுத்தி ஆளுமை செய்யவே பயன்படுகிறது.

சமஸ்கிரத மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை என்று மாயையை உண்டாக்குவது. ஏன் என்று கேட்டால் அதனை விளக்க மறுப்பது(பதில் தெரியாமல் முழிப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்) இப்படி மந்திர தந்திரங்கள் மூலமாக ஆளுமை செய்யவே ஆசைப் படுகிறது.

இந்து மதம் என்று மட்டும் இல்லை இஸ்லாம் கிறிஸ்துவம் எல்லாமே இதைத் தான் செய்ய ஆசைப்படுகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு மிக மட்டமான தலைமைகள் இருக்கின்றன.

இன்று பால் தாக்கரே, நரேந்திர மோடி இந்து மதக் காவலர்கள் தலைவர்கள் என்று கூறி செய்யும் அக்கிரமங்கள் இல்லையா?

அதே போல சிலுவைப் போர் தொடுக்க சொன்ன போப், பல கொலைகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் செய்த போப் என்று கிறிஸ்துவத்திலும் பல அக்கிரமக்கார தலைவர்கள் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ஒரு பெண் அதிகமாக படித்து விட்டாள் என்று அந்த கிராமத்தின் மதத் தலைமை ஒரு வாரம் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து கற்பழித்ததாக குமுதத்தில் படித்தேன்.

மதம் என்னும் அரசியல் அமைப்பை எதிர்ப்பதற்கு இதுவே காரணிகள்.

மிதவாதிகள் இதன் பெயரில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். மதம் என்னும் அரசியல் அமைப்பு தன்னுடைய கைகளில் அதிகாரம் வேண்டும் என்பதற்காக மக்களை கொன்று எடுத்தாலும் யாருக்கும் கவலை இல்லை.

இன்று வேற்று மதத்தை சாடி தன் மதம் பெரிது என்று பேசும் அனைவரும் அதிகாரம் மாயை என்பது எல்லாம் தன் கைகளை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக துவேசங்களை வளர்ப்பதே மதத்தின் அசிங்கமான அரசியல் பக்கத்தைக் காட்டுகிறது.

நாத்திகம், ஆன்மீகம் என்பதற்கு எந்த அளவு வித்தியாசம் இருந்ததோ என்னைப் பொறுத்த வரை அதே அளவு வித்தியாசம் ஆன்மீகத்திற்கும் மதங்களுக்கும் உண்டு

நாத்திகம் என்பதற்கும் பகுத்தறிவிற்கும் அதே போல வித்தியாசங்கள் உண்டு. ஆன்மீகத்தில் பகுத்தறிவிற்கு அவசியமாகிறது.

மதம் என்பதற்கு பகுத்தறிவுதான் எதிரி. கேள்விகள் கேட்டு உண்மை அறிவது பகுத்தறிவு ஆன்மீகம். கேள்வி கேட்டவர்களை பகுத்து அறிய முற்படுபவர்களை heretic என்று தூக்கில் இடுவது கொலை செய்வது ஒதுக்கி வைப்பது மதம்.

ஆன்மீகம் என்பது இறைவனை அறிவது வாழ்க்கையில் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது.

மதவாதிகளுக்கு இந்த இரண்டு கொள்கைகளுமே கிடையாது. இறைவனை உணர தனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட வழிமுறைகளை பெரிது என்று சண்டை போட்டுக் கொள்வது. பிறரை துன்பம் அடைவதைப் பற்றி கவலைப் படாமல் இன்பமுறுவது இது தான் மதம்.

தீண்டாமையை எதிர்க்க காந்தியடிகள் ஒரு ஊருக்கு சென்ற பொழுது அவருக்கு அங்கே மிகப் பெரிய எதிர்ப்பு கிடைத்ததாக "இந்து மதம் எங்கே போகிறது" என்ற புத்தகத்தில் எழுதப் பட்டிருந்தது.

ஜாதிகளை எதிர்ப்பதும் தவறு என்று இன்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் ஜாதி என்பது தான் மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக கீழ்தரமானது என்பது வெள்ளிடமலை.

மதம் என்பதை இன்று எதிர்க்கும் சமயமும் இன்று எதிர்க்கும் சமயம் அதே போலத்தான் எதிர்ப்புகள் வருகின்றன. ஜாதியைப் பற்றிய மிதவாத சிந்தனை சில காலங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அதே போலத் தான் இன்றைய மத மிதவாத சிந்தனைகளும் உள்ளன.

இன்றுள்ள பல மதங்களும் சண்டை போட்டுக் கொள்வது பல அரசியல் அமைப்புகள் அடித்துக் கொள்வதும் ஒன்றே தான். எல்லாமே தவறானவை அவற்றுள் எந்த அரசியல் அமைப்பு வெற்றி பெரும் என்றே அடித்துக் கொள்கின்றன.

ஜாதிகள் விட மத அமைப்புகள் மிக மிக கீழ்தரமானவை என்ற சிந்தனைகளும் தோன்றும் காலம் வரும்.

மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பலருக்கும் புரியும் காலம் வரும்.

அந்த சமயத்தில் மதம் என்ற அரசியல் அமைப்பிற்கு ஆதரவு தராமல் உண்மையான ஆன்மீக சிந்தனைகள் அறிவுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பரவும். அன்று எல்லா மதங்களும் outdated ஆகிவிட்டது என்று மக்கள் உணரும் சமயம் வரும்.

மதம் மனித குலத்தை அழிக்காமல் விட்டால் அந்தக் காலமும் வரும்.

கடைசியாக 10000 வருடங்களுக்கு முன்னால் தோன்றிய நாகரீகத்தின் சின்னங்களை 4000 வருடங்கள் கழித்து மதம் தனக்குள்ளே எடுத்துக் கொண்டது, 4000 வருடங்கள் கழித்து தோன்றிய மதத்தின் சின்னங்களை 10000 வருடம் முன்பே தோன்றிய நாகரீகம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாவது சிலருக்குப் புரியும்( கடைசி பத்தி என்னுடைய சென்ற பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தால் மட்டுமே புரியும் :-))) )

Sunday, November 05, 2006

மதம், வாழ்க்கை நெறி புடலங்காய்

பலர் மதம் என்பது நாகரீகங்களைத் தோற்றுவித்தது. மதம் என்ற அமைப்பு புனிதமானது சிலரால் மட்டுமே மதம் என்ற அமைப்புக்கு கெட்ட பெயர் வருகிறது என்பது போலவும் கருதுகிறார்கள். மறுபடியும் சரித்திரத்தை புரட்டிப் பார்க்கிறேன்.

ஹிந்து மதம் என்பது 3500 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக தெரிகிறது. ஜுடாயிஸம்(வஜ்ராவால் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்பட்டிருக்கிறது) 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது.

ஹரப்பா நாகரீகம் 9000-10000 ஆண்டுகள் முன் கூட இருந்திருக்கிறது என்பதை இன்று கண்டறிந்திருக்கிறோம்.

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஹரப்பா மொகஞ்தாரோ ஆகியவற்றின் புகைப்படங்களைக் கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.

http://www.mohenjodaro.net/index.html

கிண்றுகள், நெல் சேமிக்கும் கிடங்கு, குளியலறை, சுகாதார மையம் எல்லாம் பார்க்கலாம் ஆனால் இதில் எங்கேனும் மதம் சம்பந்தமான கோயில்லகளோ மசூதிகளோ இல்லை வேறு அடையாளங்களோ தென் படுகிறதா? நாகரீகத்தின் தோற்றத்திற்கும் மதங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை இதை விட தெளிவாக நாம் அறிய முடியுமா?

இந்த உலகில் நடந்த மிகக் கொடூரமான இனப் படு கொலைகளுக்கு மதமே காரணியாக இருந்திருக்கிறது. இனப் படு கொலை என்றதும் holocaust மட்டுமே நமக்கெல்லாம் ஞாபகம் வரும். யூதர்கள் பல வகையில் நமக்கு அதனை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் அது மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மதம் நுழைந்தவுடன் என்ன நடந்தது?

முதலில் ஆஸ்திரேலியா இங்கு நடந்த இனப் படுகொலை போல எங்குமே நடந்ததில்லை. பழங்குடியினரைக் கொன்றால் ஒரு கொலைக்கு ஒரு பவுண்ட் என்று நடத்த படுகொலைகள் நமக்கு ஞாபகம் இருக்காது. complete wipe out ஆனது ஒரு இனம் ஆஸ்திரேலியாவில். What is history but a fable agreed upon? இது எவ்வளவு உணமை என்று தான் தோன்றுகிறது.

அமெரிக்கா சிவப்பிந்தியர்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் இனப் படுகொலைகள் அதிகம் வெளியே வராது இன்று,

ஆப்பிரிக்காவின் நிற வெறி கொடுமை(apartheid) பற்றி சொல்வவே தேவையில்லை.

அப்புறமாக யூதர்கள். யூதர்கள் ஒரு சாராரை மதத்தால் அடிமைப் படுத்தினர். மோஸஸ் காலத்தில் இருந்து இது கிறிஸ்து என்ற யூதர் வரும் வரை தொடர்ந்தது. பின்னர் பல யூதர்களே கிறிஸ்துவர்களானார்கள். அதற்கு பிறகு பின்னர் கிறிஸ்துவர்கள் இப்பொழுது குறைவான அளவில் இருந்த யூதர்களைக் கொன்று குவிக்கின்றனர். எதற்காக கொல்கிறார்கள் என்றால் அவர்களும் யூதர்கள் என்பதால். இவர்கள் மூதாதையினர் பலர் யூதர் என்பதே தெரியாமல்.

இந்தியாவில் இந்து - முஸ்லீம் பிரச்சனையும் இதே போலத்தான். எந்த மன்னன் வந்தாலும் காலை முத்தமிட்டு தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் கூட்டம் முஸ்லீம் மன்னன் காலில் விழ அவர்கள் தலை துண்டிக்கப்பட்டது(இது ஒரு சாராரைக் குறிப்பது போல இருந்தாலும் இவை சரித்திர உண்மைகள்). அந்தக் காலத்தில் இருந்து தணியாத வெறி கொண்ட கூட்டம் முஸ்லீம்கள் மேல் வெறி கொண்டு அழைகிறது.

இன்று முஸ்லீம்களாய் இருப்பவர் பலர் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்திருக்கலாம். அது கூட புரியாத வெறி கொண்ட கூட்டம் இன்று ஒருவர் மேல் ஒருவர் வெறி கொண்டு சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதம் என்பது இதற்கு தான் பயன் படுகிறது.

மிருகத்தில் இருந்து மனிதனானான். இன்று மதம் கொண்டு தன்னுடைய irrational உணர்வுகளால் மிருகமாகிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை நெறி வாழ்க்கை நெறி என்று சொல்பவர்கள் அனைவரிடமும் கேட்கிறேன். விதவைகள் கொலை செய்யும் சதி பழக்கம் வாழ்க்கை நெறியா? சின்ன பெண்களை பால்ய விவாகம் என்ற பெயரில் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் கணவர்கள் இறந்தவுடன் வாழ்க்கை முழுவதும் கொடுமைப் படுத்துவதுதான் வாழ்க்கை நெறியா? ஜாதி மூலம் அடிமைப் படுத்துவது வாழ்க்கை நெறியா?

வாழ்க்கை நெறியாம் வாழ்க்கை நெறி, புடலங்காய் வாழ்க்கை நெறி.

இவை தான் இந்து மதத்தின் வாழ்க்கை நெறிகளாக கடைபிடிக்கப் பட்டது, மிகச் சிறப்பான வாழ்க்கை நெறிகள் இல்லையா?

இன்று நரேந்திர மோடி போன்ற கொலையாளிகள் தான் இது போன்ற வாழ்க்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்னொரு பக்கம் இன்னும் அழகான வாழ்க்கை நெறி சொல்லப் படுகிறது. சானியா மிஸ்ராவின் fore handஐயும் back handஐயும் பார்க்காமல் அவர் தொடையை பார்த்து ரசித்த சிலர் அவர் தொடை தெரிகிறது என்று கத்தகிறார்கள். இவர்கள் மனது விகாரம் பிடித்திருப்பதால் அந்த பெண்மணியின் ஆடை அணியும் விதம் மாறவில்லை? உலகம் எங்கிலும் எல்லோரும் இதே போல ஆடை தான் அணிகிறார்கள். இவர் மட்டுமா அணிந்தார்?

யார் யாருடைய மனதின் விகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். விகாரங்களின் உற்பத்தி நிலையமாக செயல் படுவதே மதம் என்னும் மாயை சூழ்ந்திருக்கும் மனங்கள்தான்.

mystic என்பதை விளக்குவதிலும் மதங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. எத்தனை காலத்திற்குதான் ஆறு நாள், ஏழு நாள், முட்டை, இல்லை யாருக்கும் புரியாத வகையில் ஒரு touch of mystery உடன் கூடிய பழம் கதைகளையே கேட்டுக் கொண்டிருப்பது? யாரேனும் புது மதம் ஆரம்பித்து Black Holes, Singularity என்று இன்று அவர்களுக்கு தெரிந்ததை எழுதி வைத்தால் பரவாயில்லை. அதுவும் கொஞ்ச நாளில் விளக்க வர outdate ஆகி விடும் என்பது வேறு விஷயம்.

அல் கொய்தா அமைப்பு அமெரிக்காவை எதிர்ப்பதாலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு இருக்கும் நட்பால், அல் கொய்தாவை உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ஆதரித்தால் எப்படி முட்டாள் தனமாக இருக்குமோ அதே போலத் தான் மதமும்.

சானியா மிஸ்ரா விஷயத்தில் மன விகாரங்களை வெளிப்படுத்துகிறவர்கள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். நரேந்திர மோடி போன்ற பயங்கரவாதிகள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். படித்த பெண்களை சூனியக்காரிகள் என்று எரிக்க மதம் உதவுகிறது. எத்தனை காலம் தான் ஒரு பயங்கரவாத அமைப்பை நாம் ஆதரித்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

உங்கள் மனது சஞ்சலப் படும் பொழுது தேவை என்றால் நல்ல மியூசிக் கேளுங்கள். மதங்களை ஆதரித்து முட்டாள்தனம் செய்யாதீர்கள்.

மதம் நாகரீகத்தை வளர்க்க உதவுகிறது என்று யாரோ சொன்னார்கள். எனக்கு என்னவோ அது காட்டு மிராண்டித் தனத்தை வெளிக்காட்டவே உதவுவது போலத் தோன்றுகிறது.

இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.

Thursday, November 02, 2006

எது மிக தீங்கான மதம்?

இந்தப் பதிவு சரித்திர நிகழ்வுகளின் ஒரு நினைவூட்டல் மட்டுமே.

பொதுவாக ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் மீதும், கிறிஸ்துவம் மீதும் புழுதி வாரி போட்டுக் கொண்டு அவர்கள் மதம் எதோ புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிப்பார்கள். அதே போல இஸ்லாமியர்கள் ஹிந்து மதத்தின் மேல் புழுதி வாரிப் போட்டு தங்கள் மதம் எதோ ரொம்ப புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா மதங்களிலும் பொதுவானது.

மற்றவர் மேல் புழுதி வாரி அடித்து தன் தவறுகளை மூடி மறைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல். அவரவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டிக் காட்டலே இதன் நோக்கம்.

அது மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாக சிலர் ஒரு மதத்தின் மேல் மட்டும் காட்டம் கொண்டவர்களாக இருப்பதால் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் இவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் செயல் படுவதுமாக இருக்கிறது.

இன்று நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் என்று கூறி கொள்ளும் பல அரசியல்வாதிகளே நம்முள் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே ஒரு உண்மையான பகுத்தறிவாளனின் பதிவு இது.

இன்றுள்ள சூழ்நிலையில் எல்லா மதங்களுமே தீங்கானவை என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ஆகவே இதில் ஒவ்வொரு மதத்தினரின் கடந்த கால சாதனைகள், சமீப கால சாதனைகள், நீண்ட கால சாதனைகள் எல்லாவற்றையும் பட்டியலிடலாம் என்று யோசித்து இந்தப் பதிவை இட்டிருக்கிறேன்.

ஹிந்து மதம்

கடந்த கால சாதனைகள்

ஒற்றுமை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. அடிக்க வேறு மதத்தினர் இல்லாமல் இருந்த சமயம் தன்னுள்ளேயே அரி, சிவன் என்று அடித்துக் கொண்டது. அடிப்படைக் கொள்கையான எல்லாமே இறைமயம் என்பதை கொஞ்சம் கூட பின்பற்றப் படாதது.

சமீபத்திய சாதனைகள்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா, இஸ்லாம் தீவிரவாதம் வளர ஊற்றுக் கண்ணாக திகழ்வது என்று கணக்கற்றவை.

நீண்ட கால சாதனை

ஜாதி என்ற விஷச் செடியை மக்கள் மனதிற்குள் விதைத்தது. பலவாயிரம் வருடங்கள் ஒரு சாராரை அடிமைப் படுத்தி வைத்தது.

இஸ்லாம்

கடந்த கால சாதனைகள்

அடிப்படையிலேயே தன் மதத்தினரைத் தவிர எல்லோரையும் காபிர் என்று ஒதுக்கி பிரிவினைகளை உண்டாக்கியது. இவரைக் கொல்லலாம் அவரைக் கொல்லலாம் என்று வன்முறையை சரி என்று சொல்லும் ஒரே மதம். இறை தூதராக கருதப்படும் முகமதுவே பல போர்களை தன்னுடைய வாழ்நாளில் மேற்கொண்டதுவே இதற்கு உதாரணம்.

சமீபத்திய சாதனைகள்

கணக்கற்ற தீவிரவாத செயல்கள், செப் 11, போப்பைக் கொல்ல பகிரங்கமாக அறிவித்தது. ஜிகாத் புனிதப் போர் என்ற பெயரில் அப்பாவிகளை கொலை செய்வது.

நீண்ட கால சாதனை

கணக்கிலடங்காத குண்டுவெடிப்புகள், பெண்களை அடிமையாக நடத்துவது.

கிறிஸ்துவம்

கடந்த கால சாதனைகள்

சிலுவை யுத்தம், சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை எரித்தது.

சமீபத்திய சாதனைகள்

ஜீஸஸ் வெள்ளையானவர் என்று நிற வெறி காலத்தில் கருப்பர்களை கொலை செய்தது.

நீண்ட கால சாதனை

மதத்தின் பெயரால் போர் என்பதை தொடங்கி வைத்தது. மதத்தின் பெயரால் இன்று உலகில் நடக்கும் பல பிரச்சனைகளை (பாலஸ்தீனப் பிரச்சனை உட்பட) தொடங்கி வைத்தது.

மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பதில் எல்லா மதங்களும் 100/100 மதிப்பெண் பெறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதில் ஒன்றோடு ஒன்று சளைத்தது அல்ல என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள மதங்கள் மட்டும் அல்ல ஜியோனிஸம், பௌத்தம் என்று எல்லா மதங்களுக்கும் இந்தப் பெருமை உண்டு.

Tuesday, October 17, 2006

இந்தியாவில் வலை மேய்பவர்கள்.

விஷய தானம் rediff

Around 38 per cent of all Internet users in India are 'heavy users' and on an average spend about 8.2 hrs per week on the Internet, according to the, I-Cube 2006 report by the Internet And Mobile Association of India and IMRB International.

The report also revealed that the percentage of heavy Internet users in India is rapidly increasing: from 16% in 2001, 20% in 2004 to 38% in 2006 of the overall Internet users.

Similarly, the percentage of light Internet users has steadily declined from 63% in 2001 to 28% in 2006.

The study further states that school going kids spend an average of 322.3 minutes a week on the Internet, while college going students spend an average of 433.2 minutes a week.

Older men spend an average of 580.5 minutes a week. Among women, working women spend an average 535.3 minutes and non-working women spend 334.5 minutes a week.

Monday, October 16, 2006

விடுதலை தேன்கூடு-போட்டி

"எனக்கு விடுதலை வேணும்" என்றான் அபி கல்பனாவிடம்.

பெரும் பாலும் சின்ன வயதில் இருந்து ஒருவரை இன்னொருவர் அறிந்திருக்கும் சமயம் எப்படி சந்தித்தோம், எப்பொழுது முதன் முதலில் பார்த்தோம் என்பதெல்லாம் தெரிந்திருக்காது. சிறு வயதில் சேர்ந்து செய்த தவறுகள், சேர்ந்து விளையாடிய விளையாட்டு என்றெல்லாம் வேண்டுமானால் ஞாபகம் இருக்கலாம். ஆனால் முதன் முதலில் எப்பொழுது சந்தித்தோம் என்பதெல்லாம் ஞாபகம் இருப்பது கடினம்.

ஆனால் சில சந்திப்புகள் மனதை விட்டு விலகாது.

காதல் காரணமாக இருக்கலாம் பார்த்த கணத்தில் அழகைப் பற்றிய அனைத்து வர்ணணைகளும் அர்த்தம் பொதிந்ததாக மாறிய கணமாக இருக்கலாம்.

ஆனால் சிலரைப் பார்த்த உடன் மனதில் ஒரு வெறுப்பு தோன்றும், ஏன் என்றே தெரியாமல் அங்கே போய் அவனை அப்படியே என்று நாடி நரம்பெல்லாம் ஒரு கோபம் படரும். அப்படிப் பட்டவர்கள் சிலர் மேல் இருக்கும் கோபம் நாளாக நாளாக குறைந்து கூட போய் விடலாம் ஆனால் அது அதிகரித்தால் அந்த முதல் சந்திப்பு எப்படி மறக்கும்?

அபியும், கல்பனாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட பொழுது அப்படித்தான் ஒருவர் மேல் மற்றொருவருக்கு கோபம் வந்தது. அந்த கோபம் வாழ்க்கை முழுவதும் அவர்களுடனே தங்கி விட்டது.

அபியின் அம்மா அவன் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அபியின் அப்பாவின் வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் கடவுள் கிட்ட போய் விட்டதால் அவன் வேறு ஊருக்கு வர வேண்டியதாகி விட்டது.

புது பள்ளி புதிதான சூழ்நிலை முதல் நாள் முதல் பாடம் சரித்திரம். அபி ஒரு குட்டி ஜீனியஸ் என்று அவன் அம்மா அவனை எப்பவும் கொஞ்சுவார் அதில் அவனுடைய பள்ளி ஆசிரியர்களுக்கும் அவ்வளவு கருத்து வேறுபாடு இல்லை. அவன் இருக்கும் வரை அவன் வகுப்பில் யார் இரண்டாவது ரேங்க் என்பதற்கு மட்டுமே போட்டி இருக்கும். அபியை மிஞ்ச ஆள் இல்லை என்பதில் யாருக்குமே இரண்டாவது கருத்தே இல்லை. அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடம் சரித்திரம்.

சரித்திர ஆசிரியருக்கு பழுத்த பழம் முதல் நாளே பாடம் ஆரம்பித்தால் விடுமுறை முடிந்து வந்திருக்கும் மாணவர்களுக்கு அது அயர்ச்சியாக இருக்கும் என்பதை தெரிந்திருந்தது. ஆகவே முதல் நாளே போட்டி ஒன்றை வைத்து பரிசு கொடுத்தால் மாணவர்களை உற்சாகப் படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தார்.

போட்டி என்று வந்து விட்டால் யார் வெற்றி பெறுவார் என்பதும் சரித்திர ஆசிரியருக்குத் தெரியும் இருந்தாலும் போட்டி வைத்தால் மாணவர்கள் உற்சாகப் படுவார்கள் அது மட்டும் இல்லாமல் சென்ற வருடம் படித்ததை அப்படியே நினைவு படித்திய மாதிரியும் இருக்கும் என்று நினைத்திருந்தார்.

முதல் கேள்வியாக இந்திய தேசிய காங்கிரஸைக் கண்டு பிடித்தவர் யார் என்று கேட்டார்.

"ஹுயூம்" என்று பதில் வர வழக்கமாக கேட்கும் பெண் குரல் இல்லாமல் ஆண் குரல் கேட்கிறதே என்று தன் மேஜையை விட்டு நிமிர்ந்து பார்த்தார் சரித்திர ஆசிரியர். அவர் மட்டும் அல்ல வகுப்பில் உள்ள பலரும் அபியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் வழக்கமாக கேட்கும் கல்பனாவின் குரலைத் தான் எதிர் பார்த்து இருந்தார்கள்.

ஏன் எல்லோரும் இப்படிப் பார்க்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே அப்படியே திரும்பி எல்லோரையும் பார்த்த அபியின் கண்கள் அவனுக்கு முன்னால் உட்கார்ந்து யார் என்று எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கண்களுக்குத் தெரிந்தாள்.

"கேள்வி கேட்டால் யாருக்குத் தெரியுமோ அவர்கள் கையை தூக்கினால் போதும்" என்ற சரித்திரப் பேராசிரியரின் குரல் அனைவரையும் மறுபடியும் அவரை பார்க்கும் படி வைத்தது.

"மூன்றாம் பானிபட் யுத்தம் எந்த ஆண்டு துவங்கியது?" இரண்டு கைகள் உடனே மேலே சென்றன. முதல் கேள்விக்கு பதில் அபி சொன்னதால் "கல்பனா" என்று சொன்னார் சரித்திர பேராசிரியர் "January 14, 1761" என்று வந்தது பதில். அபிக்கு உடனே ஒரு எரிச்சல் சரித்திர ஆசிரியர் மீது. எனக்கு பதில் தெரியுன்னு கையைத் தூக்கி இருக்கறேன் என்னைக் கேட்காம என்ன இந்தப் பொண்ணைக் கேட்டுகிட்டு? அடுத்த கேள்வி "தியோசோபிக்கல் சொஸைட்டி இந்தியாவில் ஆரம்பித்தது யார்" இரண்டு கைகள் வழக்கம் போல மேலே உயர்ந்தன. இந்த முறை "அபி" என்றார் சரித்திர ஆசிரியர். "ஆல்காட், பிளவாட்ஸ்கி" என்று சொன்னான் அபி. இந்த முறை எரிச்சல் கல்பனாவுக்கு. இப்படி சரித்திர ஆசிரியர் கேள்வி மேல் கேள்வி மாற்றி மாற்றி கேட்க சரித்திர ஆசிரியர் மேலிருந்த எரிச்சல் எல்லாம் எரிச்சலாகவும் கோபமாகவும் கல்பனாவுக்கு அபி மேலும் அபிக்கு கல்பனா மேலும் திரும்ப ஆரம்பித்தது.

வகுப்பின் இறுதியில் சரித்திர ஆசிரியர் அவருடைய வகுப்பில் இரண்டு ஜீனியஸ் இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்தார். அவருக்கு தெரிந்து விட்டது இந்தப் போட்டி இந்த வகுப்புடன் முடிந்து விடாது என்பதில் மேலும் மகிழ்ச்சி அடைந்தார்.

இவர்கள் இருவரின் திறமையும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வெகு சீக்கிரம் பரவி விட்டது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஆசிரியர்களுக்கு மேல் தெரிந்து கொண்டு விட ஆசிரியர்களின் பாடு திண்டாடமாகி விட்டது.

இது இன்னொரு வகைப் போட்டியையும் தூண்டி விட காரணமாகி விட்டது. அவர்கள் வகுப்பில் இருக்கும் ஆண்கள் அனைவரும் அது வரை கல்பனாவின் திறனுடன் போட்டி இட முடியாததால் சில ஆசிரியர்கள் பெண் பிள்ளைகளிடம் தோற்கிறீர்களே என்று சொல்லி வர, அபியின் வரவு அவர்களுக்கு வரப் பிரசாதமாகி விட்டது. எப்பொழுது அபி கல்பனாவை விட போட்டியில் முன்னேறுகிறானோ அப்பொழுது எல்லாம் வகுப்பில் இருக்கும் ஆண் பொடுசுகள் பெண்களைச் சீண்டுவதும் அதனாலேயே கல்பனா முண்ணனியில் இருக்கும் சமயம் பெண் பிள்ளைகள் ஆண்களை சீண்டுவதுமாக இந்தப் போட்டி பொறாமை எப்பொழுதும் உச்சத்தில் இருந்தது.

இதற்கு நடுவில் அபி ஒரு ஈர்ப்புக்குறிய ஆணாகவும். பள்ளியில் உள்ள அனைவருக்கும் காதல் பற்றிய சிந்தனைகளை உண்டாக்கும் அளவு அழகிய பெண்ணாகவும் மாறுவதை இருவருமே அறிந்திருக்கவில்லை. இவர்களுக்கு இடையில் இருக்கும் போட்டி தான் முக்கியமாகப் பட்டது இருவருக்குமே.

இப்படியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கல்பனா ஒரு மார்க் அதிகமாக எடுத்தது, அபி +2 பொதுத் தேர்வில் ஒரு மார்க் கல்பனாவை விட அதிகமாக எடுத்தது என்று இருவருமே தமிழகத்தின் முதல் நிலை பொறியியல் கல்லூரியில் இருவரும் காலெடுத்து வைத்தார்கள்.

இருவருக்குமே ஆச்சரியம் என்னவென்றால் இருவருமே பொறியியல் பாடம் தேர்வு செய்தது தான். இருவருமே மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இருவருமே அதைத் தேர்வு செய்யாமல் ஒரே பொறியியல் கல்லூரியில் ஒரே பாடப் பிரிவை தேர்தெடுத்திருப்பது ஆச்சர்யமளித்தது. ஆனால் இன்னும் நான்கு வருடம் இவனுடனே போட்டி போட வேண்டும் என்பது மேலும் எரிச்சல் அளித்தது.

அதுவும் இவர்களின் போட்டி உச்சத்தில் இருந்தது +2 பொதுத் தேர்வின் சமயம்தான். அதுவும் அபி கல்பனா தன்னை விட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தது அவனைக் காயப் படுத்தி இருந்தது. பொதுத் தேர்வு என்று வரும் சமயம் ஆசிரியரை சோப்பு போட்டு கல்பனா அளவுக்கு மார்க் எடுக்க முடியவில்லை என்று அவளது தோழியர் அடித்த கமெண்ட் அவனைப் புண்படுத்தி இருந்தது.

ஆகவே கஷ்டப்பட்டு ஒரு மார்க் +2 தேர்வில் அதிகம் பெற்று விட அவன் நண்பர்கள் கல்பனாவின் தோழிகளைப் பார்த்து அடித்த கமெண்ட் கல்பனாவை மேலும் புண்படுத்தி இருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற சூழ்நிலை உருவாகி இருவரும் வேறு வேறு கல்லூரியில் சேர்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே கல்லூரியில் பார்த்துக் கொண்டது ஒரு ஆயாசத்தை ஏற்படுத்தியது.

அபி தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் கல்லூரி சேர்ந்த முதல் நாளே அந்த எண்ணம் மாறி விட்டது. அந்தக் கல்லூரியுடன் ஒரு நிறுவனம் இணைந்து செயல் பட்டு வந்தது. அந்த நிறுவனம் வருடா வருடம் அந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி வந்தது. எல்லா முண்ணனி தொழில் நுட்பங்களும் அந்தக் கல்லூரியில் இருப்பதற்கு அந்த முண்ணனி நிறுவனமே காரணியாக இருந்தது. அந்த நிறுவனம் அந்தக் கல்லூரியில் இருந்து ஒரே ஒரு மாணவரை மட்டும் வருடா வருடம் எடுப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன் அந்த நிறுவனத்தின் தலைவர் புதிதாக தொடங்கும் வகுப்பில் ஒரு சின்ன உரை நிகழ்த்தி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளச் சொல்லுவார். அதோடு ஏன் அந்த மாணவரை இந்த நிறுவனம் கவனிக்க வேண்டும் என்ற கேள்வியும் வைக்கப்படும். அறிமுகத்தின் சமயத்தில் இருந்தே அந்தக் நிறுவனம் மாணவர்களை கவனிக்கத் தொடங்கி விடும்.

அபிக்கு இதில் ஆர்வமே இல்லை அவன் ஆர்வமெல்லாம் அவன் மேல்நாட்டுக்குச் சென்று மேல்படிப்பு படிப்பதில் தான் இருந்தது.

கல்பனா வழக்கம் போல முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். இந்தப் பெண்களுக்கு முதல் வரிசையில் அமர்வது குறித்து அப்படி என்ன ஆர்வமோ என்று நினைத்துக் கொண்டான் அபி. கல்பனாவை நிறுவனத் தலைவர் அறிமுகம் கொடுக்கச் சொன்னதும் மிடுக்காக நடந்து சென்ற கல்பனா "என் பெயர் கல்பனா. என் தந்தையார் பால்ராஜ், அம்மா சுசிலா. எனக்கு வாழ்க்கையில் இரண்டாவதாக வருவது பிடிக்கவே பிடிக்காது. ஒரே முறை தான் இரண்டாவதாக வந்திருக்கிறேன். இனி மேல் அப்படி வரும் எண்ணம் இல்லை. உங்கள் நிறுவனம் முதல் வரும் மாணவர்களை எடுக்கும் என்று எனக்குத் தெரியும். ஆகையால் தான் சொல்கிறேன் என்னை உங்கள் நிறுவனம் எடுக்க வேண்டும்." என்று சொல்லி விட்டு அமர்ந்தாள். அவளுடைய தன்னம்பிக்கையைக் கண்டு அங்கு உள்ளவர்களுக்கு ஆச்சர்யம் மிகுந்தது ஒருவனைத் தவிர.

அடுத்து அபி வந்து பேசும் சமயம் அவனுக்கு மேல்படிப்பு மேல் இருந்த ஆர்வம் அனைத்தும் காணாமல் போயிருந்தது. தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு "நான் கடைசியாக வந்தத் தேர்வில் முதலாக வந்தவன். எனக்கு இரண்டாவதாக போவது பிடிக்காது. ஆகவே முதல் மாணாக்கனாகப் போவது நானே. எனவே உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த நபர் நானே" என்று சொல்லி அமர்ந்தான்.

பிறகு நடந்த தேர்வு, பேச்சுப் போட்டி, விவாத மேடைகளில் அனல் பறக்க ஆரம்பித்தது. இருவரும் மட்டுமே போட்டி இருக்கும் என்று தெரிந்தாலும் இருவரின் பகையும் கல்லூரி முழுக்க பரவி இருந்ததால் இவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளில் கூட்டமும் மிகுந்தது.

இப்படி மூன்று ஆண்டுகள் சென்ற நிலையில் கல்பனாவின் அப்பா திடீர் என மரணமடைந்தார். கல்லூரி முழுக்க தன் அழகாலும் அறிவாலும் நண்பர்களைப் பெற்றிருந்த கல்பனாவின் தந்தை மரணத்திற்கு அவனுடைய வகுப்பில் இருந்த அனைவரும் சென்றார்கள். அபியும் உடன் சென்றான். முதல் முறையாக தன் தந்தையின் மரணத்தின் பொழுதுதான் கல்பனாவை போட்டியாளராகப் பார்க்காமல் ஒரு சராசரி மகளாக மனுஷியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அழுகையுடனே எல்லா ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்து கொண்டு இருக்கும் கல்பனாவைப் பார்க்கும் பொழுது ஏனோ அவனுக்கு அவன் அம்மா ஞாபகம் வந்தது. கல்பனாவுக்கு அவ்வளவு சோகத்திலும் அபி முன் அழுகிறோமே என்ற கவலை இருந்தது. அதனால் அவன் பக்கம் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்க்க அவன் முகத்தில் தெரிந்த சோகம், கரிசனம் எல்லாம் உண்மையாகப் பட முதன் முறையாக அவனை வேறு விதமாக பார்க்க தொடங்கினாள்.

காரியம் எல்லாம் முடிந்து வந்த சில நாட்களிலேயே ஒரு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் மதிப்பெண்களில் அதிக இடைவெளி இல்லாததால் இருவரும் மீண்டும் கடினமாக உழைக்கத் தொடங்கினர்.

கல்லூரி அருகே ஒரு பூங்கா இருக்கிறது. பொதுவாக மாணவர்கள் அங்கு சென்று அமர்ந்து கொண்டிருப்பது உண்டு.

ஒரு சமயம் அந்த சமயம் நடந்து போய்க் கொண்டிருந்த அபிக்கு பெண் ஒருத்தி விசும்புவது போலக் கேட்டது. என்னவென்று அந்தப் பக்கம் சென்று பார்த்தால் கல்பனா அங்கு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தந்தை இறந்த சமயம் கூட இந்தப் பெண் இவ்வளவு அழுததில்லையே என்னவாயிற்று என்று அருகே சென்று அமர்ந்தான்.

யாரோ பக்கத்தில் வந்து அமர்ந்ததை உணர்ந்த கல்பனா சட்டென்று தன் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் அங்கு அபி உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவளுக்கு வெட்கமாக போய் விட்டது.

தன்னை நிலைப் படுத்திக் கொண்டு இரண்டு நிமிடம் அங்கு அமர்ந்திருந்தாள். பின் எழுந்து செல்ல முயற்சிக்க சட்டென அபி "எனக்கும் எங்க அம்மா ஞாபகம் அடிக்கடி வரும்" என்று கூறினான்.

எழுந்து செல்ல முயற்சித்த கல்பனா அப்படியே உட்கார்ந்தாள். "எனக்கு 10 வயசு இருக்கும் போதே எங்க அம்மா இறந்துட்டாங்க. அம்மாதான் எனக்கு எல்லாம் ஸ்கூலைத் தவிர எங்க அம்மா பின்னாடியே தான் சுத்துவேன். கடைக்கும் எங்க போனாலும் என்னை விட்டுட்டே போக மாட்டாங்க." என்ன இது அவன் கண்களிலும் கண்ணீரா? இல்லை நம்ம கண்ல கண்ணீர் இருக்கறதுனால அப்படித் தெரியுதா என்று யோசித்தாள் கல்பனா. "எங்க அம்மா என்னை விட்டுப் போன சமயம் தான் எனக்கு வாழ்க்கையிலேயே ரொம்ப கஷ்டமான நேரம் எனக்கு. எனக்கு எல்லாப் பிரச்சனைகளும் வந்தது அந்த சமயம்தான்" என்று சொல்லி ஒரு இடைவெளி விட்டு "உன்னோடு மீட் பண்ணிணது கூட அந்த சமய்த்தில தானே?" என்று ஒரு சின்ன புன்னகையுடன் சொன்னான்.

கல்பனாவிற்கும் புன்னகை வந்தது அடக்கிக் கொண்டு போலிக் கோபத்துடத்துடன் "என் வாழ்க்கையில கூட ஏழரை நாட்டுச் சனி அப்போதான் ஆரம்பிச்சிருக்கணும்" என்றாள்.

"அறிவியல் இந்த அளவு வளர்ந்திருச்சு என்ன இன்னும் சனி, வெள்ளின்னுட்டு இருக்கே நீ" என்றான் அபி. உடனே "எந்த அளவு வளர்திருச்சு? சிங்குலாரிட்டின்னு ஒரு சிக்கல். Evolutionல probablity கம்மி இப்படி எல்லாத்திலயும் பதில் தெரியாம முழிச்சுட்டு தானே இருக்கு?" என்றாள் கல்பனா.

இப்படியாக இவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் முழுவதும் அபியின் புன்னகையின் நீளம் அதிகமாகிக் கொண்டே தான் சென்றது. கல்பனாவிற்கும் மனது லேசான மாதிரி இருந்தது. கடைசியாக இருவரும் ஒருவரை மற்றொருவர் திட்டிக் கொண்டே பிரிந்து சென்றார்கள். அடுத்த ஒரு வாரம் அந்த கல்லூரியே அவர்களை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இருவரும் பக்கத்தில் அமர்ந்து விவாதிப்பதும் கடைசியாக சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து செல்வதுமாக இருந்தார்கள். முதலில் இவர்கள் இருவருடைய நண்பர்களும் சண்டையா இருக்கே பிரச்சனையாகி விடுமோ என்று பயந்தார்கள். ஆனால் ஒவ்வொரு தடவை தனியாக செல்ல வேண்டிய சமயம் வரும் போது சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து செல்வதை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

மேலும் படத்திற்கு செல்வது என்ற ஆச்சர்யகரமான செயல்களையும் இருவரும் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு முன் இவர்கள் படத்திற்கு கூப்பிட்டால் அவன் என்னை விட அதிகமாக படித்து விடுவானோ என்றோ இல்லை அவள் என்னை மிஞ்சி விடுவாளோ என்றோ செல்லாமல் இருந்தார்கள். ஆனால் இருவருமே செல்வதால் ஒருவர் மற்றொருவரை விட அதிகமாக முன்னேறி விட முடியாது என்று நம்பிக்கையில் செல்ல ஆரம்பித்தார்கள்.

அந்த முறை தேர்வு முடிவுகள் வரும் சமயமும் இருவரும் மற்றவர்களை விட பல மடங்கு அதிக மதிப்பெண் எடுத்திருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது ஒவ்வொரு முறையும் இவர்கள் இருவரும் தேர்வுக்கு பாடம் ஆரம்பிக்கும் முதல் நாளே தயாராக இருந்ததும், மற்றவர் மேல் கொண்டிருந்த போட்டியினாலேயே திரும்ப திரும்ப படித்ததையும்.

ஒவ்வொரு முறை இவர்கள் சந்திக்கும் பொழுதும் பயங்கரமாக சண்டை போடுவதும் உடனே மறுபடியும் ஒன்று சேர்ந்து கொள்வதும் எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது.

இது இவர்கள் இருவருக்குள் இருக்கும் போட்டியை குறைக்கவில்லை. இருவரும் முன் போலவே ஆக்ரோஷத்துடன் போட்டி போட்டுக் கொண்டார்கள்.

ஆனால் பொறாமை இருக்கவில்லை. இப்பொழுது எல்லாம் இருவரும் போட்டியில் எந்த அளவு போட்டியில் வெல்ல வேண்டும் என்று எண்ணிணார்களோ அதே அளவு தோற்க வேண்டும் என்றும் விரும்ப ஆரம்பித்தார்கள்.

இதற்காக வென்ற பின் ஒருவரை ஒருவர் நக்கல் அடிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்றொருவர் வென்றதால் மனம் மகிழ்ந்த ஒருவரும், மற்றவர் தோற்றதால் லேசாக கவலை கொண்ட மற்றொருவரும் இருந்ததால் எல்லா வெற்றிகளும் இவர்களது வெற்றிகளானது, எல்லாத் தோல்விகளும் இவர்களின் வெற்றியானது.

இப்படி அந்த நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்வு நாள் நெருங்க நெருங்க எல்லோருக்கும் தெளிவாகி விட்டது போட்டி இவர்கள் இருவருக்கும் தான் என்று ஆகவே இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று பெரிய விவாதமே நடக்க ஆரம்பித்து விட்டது.

அதற்கு முந்திய நாள் தான் கல்பனா அபியை சந்தித்து முதல் வரிகளைக் கூறினான்.

கல்பனா என்ன சொல்கிறான் என்று நிமிர்ந்து பார்த்தாள்.

"உன் கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நான் சண்டை போட்டுகிட்டே இருக்கேன். என்னோட கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்பதமா இருக்கற ஆளை நான் பார்த்ததே இல்லை. நீ என்னை எடுத்து எறிஞ்சு பேசறது, மட்டமா எனக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறது, உனக்கு இருக்கற அகம்பாவம் எல்லாத்தையும் நினைச்சா எனக்கு எவ்வளவு கோபம் வருது தெரியுமா? நான் எதாவது புத்திசாலித் தனமா சொன்னாலும் அதுக்கு அதை விட புத்திசாலித்தனமா எதாவது சொல்லி விவாதத்துக்கு ஒரு புல் ஸ்டாப்பே வைக்க விடாம செய்யறதை நினைக்கும் போது பயங்கர கோபம் வருது." என்று சொல்லி ஒரு சின்ன இடைவெளி விட்டான்.

கல்பனா அவன் இன்னும் முடிக்கவில்லை என்று எப்படியோ தெரிந்தது அதனால் அமைதியாக இருந்தாள்.

"ஆனால் உன்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் உன்னைப் பத்தி யோசிக்காம இருக்கவே முடியல. என் மேல கோபப் படும் போது கண்ணை பெருசாகி அதை உருட்டுவியே அதை ஏன் நினைச்சு நினைச்சுப் பார்க்கறேன்னு தெரியல. என்னை எதாவது நல்லா திட்டீட்டு இருக்கும் போது பாதில அந்தத் திட்டை நிறுத்த உதட்டைக் கடிச்சுக்குவியே அதையும் நினைச்சுப் பார்க்காம இருக்க முடியல.நாம பேசும் போது நீ பேசறதை கவனிக்காம உன்னோட கை முடியை ஒதுக்கி விடுதே அந்த அழகை ரசிக்கறனே அது ஏன்னு தெரியல. உன் கூட நடக்கற சமயம் வேற எதுவுமே இந்த உலகத்தில தேவை இல்லைன்னு தோணுதே அது ஏன்னு தெரியல. எனக்கு நீ வேணும் என்னோட தனிமை ஒரு சிறைன்னு உன்னைப் பார்த்ததில் இருந்து தான் தெரிஞ்சுகிட்டேன். அந்தச் சிறைல இருந்து எனக்கு விடுதலை வேணும்" என்றான் அபி.

புண்கண்ணீர் பூசல் தருமா தெரியலை ஆனால் கல்பனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஆனா அதெல்லாம் பத்திக் கவலைப் படாம "என்ன நீ லவ் பண்ணறேன்னு சொன்ன நான் அப்படியே திரும்ப சொல்லீருவேனா? லவ் பண்ணறேன்னு ஒரு ரொமான்டிக்கா கூட சொல்ல தெரியல. கோபப்படுறேன் திட்டறேன்னு சொல்லீட்டு உன்னைப் போய் லவ் பண்ணணுமா? சரியான லூஸ் நீ" என்றெல்லாம் திட்டிக் கொண்டே அவன் அருகில் வர இருவரும் அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இருவருக்குமே வேலை கிடைத்தது என்று சொன்னால் கல்பனாவுக்கு கோபம் வந்து விடும். முதலில் கல்பனா பெயர் சொன்னதால் அவளுக்குத் தான் வேலை கிடைத்ததாம் அப்புறம் போனாப் போகுதுன்னு அவனுக்கும் கொடுத்தார்களாம். இப்படித் தான் சொல்லி வருகிறாள். அபிக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை அவன் இப்பொழுது தேனில் குளிக்கும் வண்டாகி விட்டானே.

Saturday, October 07, 2006

மரண தண்டனை சிந்தனைகள்

காலையில் வந்து தமிழ் மணத்தை திறந்து பார்த்தால் ஒரே மரண தண்டனை பற்றிய செய்திகளா இருந்தது. செல்வன் ஆவேசமா தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். நல்லடியார் மதம் சார்ந்து கருத்துக்களை சொல்லி இருந்தார். உஷா அவர்கள் ஒரு விதமாக தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். குழலி தன் கருத்துக்களை குற்றவாளிகள் பார்வையில் இருந்து பார்க்கற மாதிரி சொல்லி இருந்தார். முதலில் என் கருத்தை பின்னூட்டமா வெளியிடலாம் என்றுதான் எண்ணி இருந்தேன் அப்புறம் தான் தனியா வெளியிடுவோம் என்று தனிப் பதிவாக போட்டிருக்கிறேன்.

முதலில் தண்டனை என்ற இந்த பழக்கம் எப்படி வந்திருக்கும் சமூகத்தில் வாழும் மனிதர்கள் தங்களுக்கு இடையே வாழ வேண்டும் என்றால் இது இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று வரைமுறைகளை வகுத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த வரையறைகள் மீறப் படும் சமயம் மீறுபவர்கள் தண்டனைக்கு உரியவர்களாவர்கள் என்று சட்டம் அமைந்திருக்க வேண்டும்.

இந்த சமூகத்தில் ஒருவன் இருக்கிறான். அவன் பசியால் திருடி விட்டான் என்று வைத்துக் கொள்வோம். மேலும் அவன் திருடும் முன் தன்னால் இயன்ற வரை பசியை தணித்துக் கொள்ள சமூகம் வரையுறுத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து முயற்சிக்கிறான என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவனால் இயலவில்லை. கடைசியாக பிச்சை கேட்கிறான். ஆனால் சமூகம் அவனுக்கு பிச்சை கூட கொடுக்கவில்லை. அவனை விரட்டி விட்டு மிச்ச சாப்பாட்டை சாக்கடையில் கொட்டி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

சமூகம் மிகக் கொடுமையான தண்டனைகளுக்கு மரணம் என்பதை தண்டனையாக வைத்திருக்கிறது.

பசி எடுத்தவன் திருடும் சமயம் ஒருவனை கொலை செய்து விடுகிறான். கொலை செய்து விட்ட அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

பசி எடுத்தவன் ஒரு கொலை செய்து கொஞ்ச காலம் பசியாற்றி விடுகிறான் கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பசி எடுக்க இன்னொரு கொலை செய்து விடுகிறான். இப்பொழுது அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

இந்த குற்றங்களை பசித்தவன் புரிந்தானே அதில் சமூகத்தின் பங்கு இருக்கிறதா?

சரி ஔஔஔஅப்சலை தூக்கில் போட வேண்டுமா என்றால் கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் என்றுதான் சொல்லுவேன்.

ஆனால் அவனை தூக்கில் இடப் பட வேண்டுமா என்ற கேள்வி எழும் சமயம் இதில் இந்த சமூகத்தின் தவறும் இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

survival to the fittest இதுதான் இன்று உலகில் எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் தாரக மந்திரம்.

மனிதன் மட்டும் அல்ல எல்லா உயிரினங்களும் இதற்காகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

மரண தண்டனை கொடுக்கப் படும் ஒவ்வொருவருக்கும் நான் சார்ந்திருக்கும் சமூகம் அந்த தண்டனைக்கு காரணியாக எதோ ஒரு வகையில் இருக்கிறது என்ற எண்ணம் என் மனதில் வந்தால் எனக்கு கொஞ்சம் சோகமும் வருகிறது.

அதற்காக சமூகத்தில் உள்ள அனைவரும் சோகம் கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் நமக்கும் கொஞ்சமாவது நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திடம் அக்கறை இருக்க வேண்டும்.

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக எனக்கு எந்த வித மகிழ்ச்சியும் இல்லை.

Thursday, October 05, 2006

காந்தி மஹான்

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியே நீ ஒரு மஹான். உன்னில் குறைகள் இல்லை, நீ தவறுகள் செய்யவில்லை என்று சொன்னால் அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும்.

உன்னிடம் குறைகள் இருந்தால் என்ன? உன் குறைகளையா நான் பின்பற்றப் போகிறேன் உன் நிறைகள் அல்லவா எனக்கு முக்கியம்?

டிராபிக்கில் ரெட் விழுந்த உடன் வண்டியை கோட்டிற்கு அருகே நான் நிறுத்த பின்னால் வண்டியில் இருந்தவர் என்னை திட்ட, கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் உன்னைப் போன்றவர்கள் எனக்கு சொல்லித் தந்ததால் அல்லவா என்னால் அமைதியாக அவருக்கு பதில் சொல்ல முடிந்தது. அங்கு திரும்ப திட்டி எல்லோருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் இருக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர்களில் நீயும் ஒருவன் அல்லவா?

மரியாதையாக பேசாத பலரிடம் கூட திரும்ப முகம் சுழிக்காமல் நாம் கொடுக்க வேண்டிய மரியாதையுடன் பேச எனக்கு கற்று தந்தது நீ அல்லவா?

மத தலை தூக்கி ஆடிய நவகாளிக்குச் சென்றாய், அங்கிருந்து பல இடங்களுக்கும் சென்று அன்புதான் கடவுள் என்று பல கோரங்களை தவிர்த்து வைத்தாய். இன்று எனக்கு அன்புதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?

பொறுமை எவ்வளவு அவசியம் உணர்த்தும் வகையில்தான் உன் வாழ்க்கையில் எத்தனை உதாரணங்கள், பொறுமையால் எத்தனை காரியங்களை செய்திருக்கிறாய். பொறுமையை எனக்கு கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?

எதிரிக்கு துன்பம் நினைக்காதே என்று எனக்கு எனக்கு கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?

இன்றைய உலகில் அன்பு அறம் மேல் யாருக்குமே நம்பிக்கை இல்லாத சமயத்தில் எல்லோரும் பொறுமை இல்லாமல் கோபம் கொண்டு இருக்கும் சமயத்தில் அன்பின் பலத்தை உன்னைப் போன்றவர்களாலேயே உணர்ந்திருக்கிறேன்.

மனித உயிரே மலிவாய் போய் விட்ட இன்றைய நிலையில் எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்று உன்னைப் போன்ற சிலரைக் கண்டே உணர்ந்து கொள்கிறேன்.

மத வெறி மனித குலத்தையே அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும் இக்காலத்தில் எல்லா மதங்களையும் எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை உன்னைப் போன்ற சிலரைக் கண்டே உணர்ந்து கொள்கிறேன்.

உன்னிடம் குறைகள் இருந்தால் என்ன? உன் குறைகளையா நான் பின்பற்றப் போகிறேன் உன் நிறைகள் அல்லவா எனக்கு முக்கியம்?

அன்பு அறன் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லாத இந்தக் காலத்தில் அன்பையும் அறனையும் எனக்குக் கற்றுத் தந்த நீ எனக்கு ஒரு மஹான்.

வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்.

Friday, September 22, 2006

காதல் ஒரு வார்த்தையில்

கௌதம் போட்டியில் போட்டது கொஞ்சம் டீசன்டா இருக்கறதுனால என் பதிவில் போட்டுகிட்டேன் :-)))).

காதல் ஒரு வார்த்தையில் வருணனை

விவரிக்க
பலவாயிரம் காப்பியங்களால் இயலவில்லை
நூற்றாண்டுகளாய் வார்த்தைகள் போதவில்லை
வார்த்தைகளில் விவரிக்க மொழிகளில்லை
கேள்விக்கு என்னிடம் பதிலுமில்லை
என்னவள் என்றுரைக்க என்னிடமில்லை
காதலில் மிச்சமாய் வேறெதுமில்லை

நினைவுகள்

Wednesday, September 20, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம் - II

மீசை அரும்பிய நாளில் அருகியது
மனதில் தணிக்க இயலாத தாகமொன்று

பகலவன் ஈர்ப்பால் பூமி சுற்றுகிறது
கன்னியர் பால் கொண்ட ஈர்ப்பு
தாகம் தணிப்பதாய் மனதை சுற்றிவிட்டு
தாகத்துக்கு நீருட்டி தாகம் வளர்த்தது

மேகம் காணாத விளைப் பயிர்
கன்னி தலை சாய்க்காத தோள்
இவை இரண்டும் இருந்துதான் பயனென்ன

பயனில்லா தோளும் அடங்கா தாகமும்
கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் சுழன்ற
சமயத்தில் தான் கண்டேன் கன்னியை

மழை வாசத்தில் தோகை விரித்தாடும்
மயிலின் பரவசம் விவரிக்க வார்த்தையேது
மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட
மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது

பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஒட்டப்
பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே

இதயம் ஓய்வில்லாமல் துடித்து அன்றுவரை
பழுதில்லாமல் இயங்கியதும் அவளைக் காணவே

கண்டேன் அவளை கண்டேன் அவளை
களிப்பில் காலம் உறைந்த சமயமது
அப்பொழுது அறியேன் காலம் உறைந்தால்
அதனை சமப்படுத்த விரைந்து ஓடுமென்று
ஓடியது வாழ்க்கை சக்கரத்தில் சுழற்றி

மனிதனின் கண்களுக்கு தெரியும் நீலவானம்
ஒளிச் சிதறல்களால் ஏற்படும் மாயை
அறிந்தும் உணர்ந்து இருக்கிறான் மனிதன்
இருப்பினும் இன்னும் இருக்கிறது ஆகாயம்
இருக்கும் மனிதன் உள்ளவரை மாயையாய்

அவள் உயிரணு பந்தயத்தில் வெல்ல
உந்து சகதி நானல்ல என்றறிந்தேன்
தாகம் தணிக்காத கானல்நீர் என்றுணர்ந்தேன்
இருந்தாலும் இன்னும் இருக்கிறாள் மனதுக்குள்
இருப்பாள் வாழும்வரை ஒருதலை ராகமாய்


முதல்ல ஒரு படைப்பை அனுப்பிச்சேன் அது ரொம்ப நெகடிவா குற்றம் குறைகளை மட்டும் சொல்றா மாதிரி தெரிஞ்சதால இதை எழுதி அனுப்பிச்சேன். நன்றி தமிழ் சங்கம் நான் தமிழில் எழுத வாய்பளித்ததற்கும், நான் அனுப்பியதை திட்டி திரும்ப அனுப்பாமல் இருந்ததற்கும் :-))).

Tuesday, September 19, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

உலகின் எல்லா மூலைகளிலும் பொதுவுடமை
மலிவாய் சுலபமாய் எடுக்கப் படுகிறது
மனிதவுயிர் சகஜமுமாகி விட்டது இந்நிகழ்வுகள்
இலங்கை பாலஸ்தீனம் லெபனான் மும்பை

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறக்கின்றனர் பாலகர் பசியால் விவசாயி
வறுமையால் ஒருவேளை உணவுண்டு வாழ்கிறது
பெரும்பான்மை கோடி குவிக்கிறார்கள் அரிதாரிகள்
அவர்களுக்கே உயிர் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள்

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

துவேஷங்களைப் பரப்பிகிறார் மனிதர்கள் பலர்
துவேஷங்களால் இறக்கிறார் பச்சிளம் பாலகர்
கண்டித்தால் அன்பைப் பாராட்டினால்(கோ.வி.) கோபம்
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்

இன்னுமா இருக்கிறது ஆகாயம்.

ஏ ஆகாயமே
மனிதனின் செயல்களால் கண்ணீர்தான் வடிப்பாயா?
விண்கல்லால் டைனோசர் இனமழித்தது போல்
என்றழிக்கப் போகிறாய் கேடுகெட்ட மனிதரை

தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு
போட்டி நடத்தி தலைப்பு கொடுப்பவர்களுக்கு நன்றி.

இந்தப் பதிவின் தாக்கத்தில் எழுதியது

Sunday, September 17, 2006

ஒரு மாலை இள வெயில் நேரம்

தமிழ் மணம் அறிமுகமான சமயத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன் வரை மும்பையில் இருந்ததால் எந்த ஒரு வலைப் பதிவாளரையும் சந்தித்தது இல்லை. பெங்களூர் வரும் வரை எந்த ஒரு வலைப் பதிவாளருடனும் தொடர்பு கொண்டதும் இல்லை.

மேலும் சிறப்பான எழுத்தாற்றல் இல்லாததாலும், வலை அரசியலில் சார்பு நிலை எடுக்காமல் இருந்ததாலும் அதிகமாக வலைப் பதிவாளர்களுடன் தொடர்பு இருந்ததில்லை.

வலைப் பூக்களில் அரசியல் இருக்கலாம், சண்டைகள் இருக்கலாம் அது எல்லை மீறியும் செல்லலாம் இருப்பினும் திராவிடர், பிராமிணர், ஹிந்து, முஸ்லீம், இது எதிலும் சாராதவர் என்று குழு குழுவாக பிரிந்து செயல் படும் அனைவரையும் இணைப்பது தமிழ் மேல் நம் அனைவருக்கும் இருக்கும் ஈர்ப்புதான்.

என்ன பிரிவினைகள் இருந்தாலும் தமிழ் தாயின் குழந்தைகள் என்று நாமெல்லாம் இணைந்திருப்பதால் அப்படி ஆர்வம் உள்ள அனைவரையும் சந்திக்கும் ஆவல் எனக்குள் இருந்தது.

இது போக வலைப் பதிவுகளில் ஒரு வருடமாக மட்டுமே இருப்பதால் கொஞ்சம் முன்னால் இருந்து இருக்கும் சிலரை சந்தித்து history of blogging தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தேன்.

பெங்களூர் வந்ததில் இருந்து அதற்கு கிடைத்த முதல் வாய்ப்பாக டோண்டு அவர்களின் பெங்களூர் வருகை அமைந்திருந்தது.

பெங்களூர் புதிது என்பதால் எப்படி லால் பார்க் செல்வது என்பதெல்லாம் தெரியாததால் முழித்துக் கொண்டிருந்த எனக்கு சிவ பிரகாசம் அவர்கள் தானும் அந்த வழியாக செல்வதாக கூறியதால் அவரை வீட்டருகே சந்தித்து அவருடன் இணைந்து லால் பார்க் சென்றேன்.

செல்லும் வழியிலேயே டோண்டு அவர்கள் லால் பார்க் வந்து விட்டதாக சிவ பிரகாசம் அவர்களில் கை தொலை பேசிக்கு அழைப்பு வந்தது. ஒரு வழியாக கடைசியாக லால் பார்க் சென்று வண்டியைப் பார்க் செய்த சமயம் சிறிது பதட்டமாகக் கூட இருந்தது.

லால் பார்க் கண்ணாடி வீட்டிற்கு பக்கத்தில் சென்று ஒரு வழியாக கடைசியாக டோண்டு, மியூஸ், மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். அதன் பின் ஹாய் கோபி, மௌள்ஸ், செந்தழல் ரவி அவருடைய நண்பர் மோகன் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

டோண்டு அவர்கள் போட்டோவில் பார்ப்பதை நிறம் கம்மியாக இருந்தார், நிறைய பேசுகிறார். மியூஸ் இவருடைய பின்னூட்டங்கள் சில இடங்களில் மிக புத்திசாலித்தனமாக ஆழமான சிந்தனையுடன் இருக்கும். சில இடங்களில் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் ஆள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கிறார் பிறை வடிவில் ஒரு சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இவரை eccentric ஆக கற்பனை செய்து வைத்திருந்த எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. ஹாய் கோபி அவர்களின் பதிவுகள் எனக்கு பழக்கம் இல்லை ஆனால் மிகவும் நன்றாக பேசுகிறார் jovial டைப் நல்லா அரட்டை அவரோட. ஆனால் எல்லா பேச்சிலர்கள் போலவேதான் இவரும் இருக்கிறார். இதற்கு மேல் அவர் சென்சார் செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் அவ்வளவுதான். மௌள்ஸ் வலைப் பதிவுகளை ஒரு 15 நாட்களாகத் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். பைஜாமா ஜிப்பாவில் ஸ்மார்ட்டாக வந்திருந்தார். சிவப் பிராகசம் அவர்கள் வலைப் பதிவுகளில் பின்னூட்டம் மட்டும் இடுபவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருக்கிறார் மிக மெதுவாக ஓட்டுகிறார் அவரைத் தொடர்ந்து என்னுடைய பைக்கில் வருவது மிகக் கடினமாக இருந்தது. மகாலிங்கம் அவர்கள் வலைப் பதிவுகளை படிப்பதுடன் சரி என்றும் ஆர்வத்தில் வந்துள்ளதாகவும் கூறினார். அமைதியாக அங்கு நடப்பதை கவனித்து வந்தார். அனுபவம் நிறைந்த அவரைப் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழ் மணம் படிப்பதை நினைக்கும் பொழுது, இது போன்று எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்று எண்ணும் பொழுது தமிழ் மணத்தில் எழுதும் அனைவருக்கும் எத்தனை பொறுப்புகள் உள்ளது என்று தோன்றியது. கடைசியாக செந்தழல் ரவி இவர் இருக்கும் இடமெல்லாம் இருப்பார்கள் அனானி என்பது போல மோகன் குமார் என்ற அனானி நண்பருடன் வந்தார். போட்டோவில் பார்ப்பதை விட இளமையாக இருக்கிறார். வரும் பொழுதே என்னையும், மியூஸையும் என்ன நான் சண்டை போடுற ஆளுங்க எல்லாம் இருக்கீங்களா? சண்டையை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

சந்திப்பில் பேசியது டோண்டுவுடனான சந்திப்பில் போண்டா இல்லாமலா ஆகவே போண்டா போன்றவைகள் குறித்து மீண்டும் எழுதுகிறேன்.