Showing posts with label Alien. Show all posts
Showing posts with label Alien. Show all posts

Sunday, August 19, 2007

GOD must be alien !!!! - 3

சமீபத்தில் Star Gate என்ற படம் பார்த்தேன். பிரமாதமான படம் ஒன்றும் இல்லை. எகிப்து பிரமீடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வித்தியாசமான ஒரு யந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். பழங்காலமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்திருந்த அந்த யந்திரம் மூலம் பல வெளிச்ச வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கிரகத்திற்கு அதனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியும் வேறு சிலரும் செல்கிறார்கள்.

அந்த கிரகத்தில் பல காலங்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய வம்சாவளியினர் ஆகியோர் அடிமையாக நடத்தப்படுவதைக் கண்டறிகிறார்கள். அந்த கிரகத்தின் உயிரினம் ஒன்று மனிதர்களை தன்னுடைய சக்தியால் இது போல நடத்துகிறது. இப்போது சென்ற மனிதர்கள் அந்த உயிரினத்தை முறியடித்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் என்னுடைய ஆர்வத்தைக் கிளறிய விஷயம் என்னவெனில் இந்த உயிரினம் மனிதர்களை எப்படி அடிமையாக்குகிறது என்றால், தான் ஒரு கடவுள் என்றும் அனைவரும் தன்னை வழிபட வேண்டும் என்று சொல்லி அடிமையாக்குகிறது. அந்த உயிரினத்தின் அறிவியல் நுட்பம் மூலம் கண்டு பிடித்த விமானம் போன்ற கருவிகளை பயன்படுத்தி தான் தான் கடவுள் என்று மக்களை நம்ப வைக்கிறது.

மனிதனுக்கு உள்ள ஒரு உணர்வு என்னவெனில் தன் அறிவுக்கு புலப்படாத விஷயங்களும் அனைத்துமே அனைத்தையும் இயக்கும் கடவுளால் தான் இயங்குகிறது என்று நம்புவது இல்லை அது தான் கடவுள் என்று நம்புவது.

இதனை உபயோகித்து தான் மனிதனை அந்த உயிரினம் அடிமைப் படுத்துகிறது.

இதே முட்டாள் தனம் பூமியிலும் நடக்கிறது. அடுத்தவனை அடக்கியாள வேண்டும் என்ற வேட்கையிலும் தனக்குத் தெரிந்தது தான் உண்மை என்ற மனிதனின் ஆணவத்தை நம்பித் தான் இன்றைய மதங்கள் இயங்கி வருகின்றன. மதங்கள் காலம் காலமாக அதன் உதவியால் அனுபவித்த வந்த அதிகாரம் போகம் போன்றவைகள் பறி போய் விடக் கூடாதே என்பதால் பலர் செத்தாலும் பரவாயில்லை என்று மூடத்தனத்தை இன்னும் மக்கள் மத்தியில் பரவச் செய்ய முற்பட்டுக் கொண்டிருக்கிறது சில கூட்டங்கள்.

மக்களும் ஆட்டு மந்தை போல அதன் பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் அந்த உயிரினத்திற்கு எதிராக பல வருடங்களுக்கு முன்னால் ஒரு புரட்சி வெடித்திருப்பதை கண்டு பிடிப்பான் கதாநாயகன். அந்த புரட்சியை பல வருடங்களுக்கு முன்னாலேயே அடக்கிய அந்த உயிரினம் மீண்டும் புரட்சி வெடிக்காமல் இருக்க மனிதர்களுக்குள் படிப்பு சொல்லிக் கொடுப்பதை நிறுத்த சொல்லி விடும். படிப்பு அறிவு இல்லாததால் அப்படி ஒரு புரட்சி நடந்த விஷயம் அப்படியே காற்றில் கரைந்து விடும்.

நம்முடைய வரலாற்றிலும் இது போன்ற பல தடவை நடந்திருக்கிறது என்பதும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சூனியக்காரிகள் என்று படித்த பெண்காளை எரித்தது. கலிலியோவை சிறையில் அடைத்து, மக்களை பாகுபடித்தி 1% மக்கள் மட்டுமே படித்தவர்களாக வைத்திருந்தது, பெண்கள் முகத்தை மூடி அடிமைப் படுத்துவது இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் எடுக்கலாம் நம்முடைய வரலாற்றில் இருந்து.

இன்றைய அறிவியல் யுகத்தில் வரலாற்றில் புரிந்த இதே கொடுமைகளை வேறு முகம் கொண்டு இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆதிக்க வாத சக்திகள். ஆனால் வரலாற்றில் மக்களுக்கு இல்லாத ஒரு விஷயம் இன்று நம்மிடத்தில் இருக்கிறது. அது தான் பல விஷயங்களைப் பற்றிய புரிதல், புரியாத விஷயங்களை புரிந்து கொள்ள முயலுதல்.

மனிதன் வடிவமைத்த இறைவனின் எந்த வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் மாயங்கள் நிறைந்ததாகவே அவை இருக்கின்றன. அப்படி மாயங்கள் நிறைந்தது தான் இறைவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மனிதன் இறைவனை அல்ல மாயம் செய்யத் தெரிந்த அவனை விட சற்று அறிவு அதிகம் கொண்டிருக்கும் ஒரு வேற்றுகிரகவாசியைத்(Alien) தான் தேடிக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் இறைவனை உணர மார்க்கங்கள் தேவையில்லை மதங்கள் மனிதனை இறைவன் அருகில் இல்லை அவனை தூர விலக்குகின்றன என்றே கருதுகிறேன்.

கடவுளை அவருடைய கட்டளைகள் அவருடைய வழி என்று கடவுளை மனிதனின் உருவாகவே வடித்து வந்திருக்கிறான் மனிதன். இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பதே ஒரு தூசி இந்த பிரபஞ்சத்தின் சக்தி வடிவம் தான் இறைவன் என்றால் மனிதன் என்பவன் ஒன்றுமே இல்லாத ஒரு துகள் அதனை அறிந்து அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சின்ன வாழ்வில் அமைதியாக வாழ்ந்து வருவதே அறிவுள்ளவன் செயல்.

Thursday, August 09, 2007

GOD must be alien !!!! - 2

நமக்கு காய்ச்சல் தலைவலி போன்றவை வருவதற்கு காரணியாக இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை உயிரினம் என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே தோன்றுகிறது உயிரினங்களில் மிக முக்கியமான ஒரு ஆற்றல் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வது தான். மனிதன் ஒரு நுட்பம் வாய்ந்த மிருகம் என்று அறியப்படுவதற்கு பலர் அவனுடைய மூளை தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு பரிணாம வளர்ச்சி மூளையை விட மிக முக்கியமான ஆயுதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அதுதான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் மற்ற மிருகங்களிடத்தில் இருந்து தாக்குப் பிடிக்க வைத்தது. அதுதான் Opposable Thumb( எதிர்மறையான வளையக் கூடிய பெருவிரல்).

ஒரு நாய் நம் மீது கல் எடுத்து எறிய முடியுமா? இல்லை கம்பு எடுத்து சுற்ற முடியுமா? அதற்கு கை இல்லை அதனால் முடியாது என்றால் உண்மை இல்லை. நாய்க்கு நம் போலவே கை இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட அது முடியுமா? முடியாது ஏனென்றால் அதனுடைய பெருவிரல் அமைப்பு அது போல இல்லை. கீழ்கண்ட விஷயங்களை பெருவிரல் உதவி இல்லாமல் செய்து பார்க்க முயற்சி செய்தால் இதன் மகத்துவம் நமக்குத் தெரியும்.

1. ஒற்றைத் தாள் பேப்பரை எடுத்துப் பாருங்கள்
2. ஒரு மேஜை மேல் இருக்கும் பேனா இல்லை பேப்பரை எடுத்துப் பாருங்கள்.
3. புத்தகத்தை கையில் எடுத்து பக்கங்களை பெருவிரல் உதவி இல்லாமல் திருப்பிப் பாருங்கள்.

இது போல நாம் அன்றாடம் செய்யும் பல விஷயங்களுக்கு பெருவிரலை எவ்வளவு தூரம் நம்பி இருக்கிறோம் என்று தெரியும். ஏகலைவன் பெருவிரலை துரோணர் கேட்டது என்ன ஒரு கோழைத்தனமான செயல் எனபது பெருவிரல் மகிமை புரிந்தால் தான் தெரியும்.

இப்படிப்பட்ட மகத்துவமான பெருவிரல் மனிதர்களுக்கு மட்டும்தான் மிக சரியான முறையில் அமைந்திருக்கிறது. நம் முன்னோர்களான குரங்குகளுக்கும் இது ஒரு அளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

மனிதன் இனம் இன்று பெருமிதம், சிறுமிதம் கொள்ளும் பல ஆற்றல்களுக்கு மிக முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயற்கையின் இந்த சிறிய பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு தான்.

இதே போல பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் இந்த கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளிடத்திலும் இருக்கிறது. எய்ட்ஸ் நோய் உருவாக்கும் வைரஸ் கிருமி இந்த பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு ஒரு மிக மிக சிறந்த உதாரணம்.

இந்த கிருமிகளை ஆங்கிலத்தில் பாராசைட் என்று சொல்லுவார்கள். பாராஸைட் என்பதற்கு விளக்கம் என்னவெறால் மற்ற உயிரினங்களிடத்தில் ஒட்டிக் கொண்டு அதனால் உயிர் வாழ்ந்து கொண்டு அதற்கு துன்பம் விளைவிக்கும் உயிரினம்(மனிதனையும் பூமியின் பாராஸைட் என்று சொன்னால் தவறில்லையோ?).

இந்த வைரஸ்கள் மனிதனுக்கு துன்பம் விளைவிக்கின்றன என்பதால் மனிதன் அதற்கு எதிராக மருந்துகளை கண்டு பிடித்தான். இந்த வைரஸ்கள் அந்த மருந்துகளுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானதுதான் எய்ட்ஸ் வைரஸ்.

இதனை சற்று வேறு மாதிரியாக யோசித்துப் பார்க்கிறேன் நமக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கிருமிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போமா இல்லை இவற்றை எதிர்க்கும் ஆற்றலாகிய மருந்துகளை கண்டுபிடித்திருப்போமா இல்லை இவற்றைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்போமா?

ஒரு வகையில் பார்த்தால் மனிதன் என்பவன் இந்த கிருமிகளுக்கு கடவுள் போல. மனிதன் இல்லையென்றால் பல கிருமிகள் உருவாகி கூட இருக்காது அதே போல் மனிதன் நினைத்தால் இந்த கிருமிகளை அழித்து விட முடியும்.

நாம் கடவுளைப் எந்த வகையில் பார்க்கிறோமோ இந்த கிருமிகளுக்கு யோசிக்கும் திறன் இருந்தால் மனிதனைப் பற்றி அதே போல யோசிக்கலாம்.

ஆனால் மனிதன் என்பவனுக்கு இந்த கிருமிகளைப் பற்றி கவலையே இல்லை காய்ச்சல் வந்தால் மருந்து சாப்பிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அவனுக்கு முக்கியம் மற்றபடி வேறு கவலைகள் இல்லை.

இந்த பிரபஞ்சத்துடன் மனிதனை ஒப்பிட்டால் அவன் ஒரு கிருமி கூட கிடையாது.

இந்த கிருமிகளையும் மனிதனையும் ஒரே சமயத்தில் பெரிது படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம் இந்த கிருமி மனிதன் அளவுக்கு பெரிது படுத்தினால் அதே அளவில் பெரிதுபடுத்தப்பட்ட மனிதன் இமய மலை அளவுக்கு இருப்பான்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் இமய மலை அளவு பெரியதாக இருக்கும் ஒன்று மனிதன் அளவில் இருக்கும் கிருமிகளை துன்பம் விளைவிக்கிறது என்பதற்காக மட்டும் கண்டு கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தை, இது போன்ற பல பிரபஞ்சங்களை ஆட்டுவிக்கும் சக்தி ஒன்று மனிதனை ஏன் கண்டு கொள்ள வேண்டும் இல்லை மனிதன் ஏன் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாக வேண்டும்?

இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் கண்டிப்பாக மனிதன் என்பவன் சும்மா இந்த சக்தி தான் நம்மை இயக்குகிறது என்பது கப்ஸா நாமும் ஏதோ அப்படியே இருக்கிறோம் அவ்வளவுதான் மற்றபடி கடவுள் என்ற அந்த சக்திக்கு மனிதன் என்ன செய்கிறான் அவன் எப்படி இருக்கிறான் என்ற கவலை எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது.

கடவுள் விதித்தபடி நான் வாழ்கிறேன் என்பது போன்ற வாக்கியங்கள் என் கடவுள் விதித்த விதி உன் கடவுள் விதித்த விதி என்பதெல்லாம் மூடத்தனத்தின் உச்சகட்டம் இல்லை ஆணவத்தின் இமயம்.

எல்லாவற்றையும் இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் அந்த சக்தி மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதெல்லாம் முக்கியத்துவமாக இருக்காது. அல்லா, கிறிஸ்து, ராமர் என்பதெல்லாம் இந்த சக்தியை குறிக்காது. கடவுள் விதித்தது என்று ஒன்றுமே இருக்காது.

மனிதனுடைய உடல் இல்லாமல் இயங்க முடியாது கிருமிகள் போலத்தான் நாமும் இந்த பூமியில். இந்த பூமி இல்லை என்றால் இயங்க முடியாத ஒரு கிருமி. அந்த கிருமியை நாம் எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறோமோ அதே போலத்தான் இந்த பூமியில் நாமும் இருக்கிறோம்.

பிரபஞ்ச இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் நாம் கடவுள் என்று யோசித்துக் கொண்டிருப்பது உருவகித்துக் கொண்டிருப்பது எதனை அல்லது எவற்றை?

ஆடு மாடுகளை நாம் நடத்துவது போல நம்மை நடத்தும் ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆடு மாடுகளுக்கு மின்சாரம் என்பது எப்படி ஒரு மாயாஜாலமோ அதே போல நமக்கு மாயாஜாலமாக தெரியும் அல்லது தெரிவிக்கும் சக்திதான் நமக்குக் கடவுள் அது வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது ஏனென்றால்....

Monday, April 09, 2007

GOD must be alien!!!! - 1

"Hayflick limit" பூமியில் உள்ள உயிரினங்கள் ஏன் முதுமை அடைகிறான் ஏன் இறந்து போகிறான் என்பதை மிக எளிய முறையில் விளக்கும் கண்டுபிடிப்பு. உயிரினங்களுக்கு அடிப்படையானவை செல்கள். ஆணின் விந்து பெண்ணின் ஓவத்துடன் இணைந்த உடன் ஒரு செல் ஒன்று உருவாகுகிறது. இந்த ஒரு செல்லில் இருந்து தான் மனிதன் என்பவன் உருவாகுகிறான். இந்த ஒரு செல் விந்து ஓவத்துடன் இணைந்த சிறிது நேரத்திலேயே பல செல்களாக பிரியத் துவங்குகிறது.

மனிதனுடைய உடலில் பல வகையான செல்கள் உள்ளன. நமது தோலில் உள்ள செல்கள் நமது ரத்த நாளங்களில் உள்ள செல்களை விட வித்தியாசமானவை. ஆனால் இவை அனைத்தும் ஒரே ஒரு செல்லில் இருந்து தான் உருவாகுகிறது. அந்த ஒரு செல் ஒத்த பல செல்களாய் மாறிய உடன், ஒவ்வொரு செல்லிலும் சில ஜீன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். மற்ற ஜீன்கள் வேலை செய்யாமல் அமைதியாகி விடும். இப்படி ஜீன்கள் வேலை செய்வதையும் செய்யாததையும் பொறுத்து அந்த ஒரு செல்லில் இருந்து பிரிந்து வந்த ஒத்த செல்கள் வேறு வேறு செல்களாய் மாறத் தொடங்கும்.

இப்படி ஒவ்வொரு செல்லும் மாறி வேறு வேறு செல்களாய் மாறுவதை Cellular differentiation என்று சொல்லுவார்கள்.

இந்த Cellular differentiation முழுமை அடைந்த உடன், நம் உடலில் உள்ள செல்கள் பிரியத் தொடங்கும், பிரிந்து புது செல்களாய் செல்கள் உருவாக உருவாக பழைய செல்கள் இறக்கக் துவங்கும். ஆனால் இந்த செல்கள் பிரிந்து கொண்டே இருப்பது இல்லை ஒரு குறிப்பிட்ட தடவை பிரிந்த உடன் இந்த செல்கள் மீண்டும் பிரியும் தன்மையை இழக்கின்றன. இப்படி எத்தனை தடவை இந்த செல்கள் பிரியும் என்பதை மிக துல்லியமாக வரையறுத்து சொல்வதுதான் "Hayflick limit".

மனிதர்களுக்கு "Hayflick limit" 52, அதாவது மனிதர்களுடைய செல்கள் 52 தடவை மட்டுமே பிரிந்து போகும் தன்மை கொண்டது. இதில் முதல் முறையாக உருவான செல்களுக்கும் 52 தடவை உருவாகும் செல்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. 52 தடவை பிரிந்து உருவான செல்களால் தான் முதுமை உருவாகுகிறது.

வளர்ச்சியடைந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 100,000,000,000,000 செல்கள் அதாவது 1 போட்டு 14 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனை வருமோ அத்தனை செல்கள்.

ஆனால் இதில் இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால் 10 போட்டும் 14 பூஜ்ஜியங்கள் போட்டால் வரும் தொகை கொண்ட செல்களை உடைய நாமும் ஒரே ஒரு செல் கொண்ட ஒன்றும் உயிரினம் தான். இன்னும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் நம்முடைய கொள்ளு கொள்ளு கொள்ளு என்று பல கொள்ளு போட்டால் கிடைக்கும் கொள்ளுத் தாத்தா இந்த ஒரு செல் உயிரினம் தான்.

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் இந்த பிரபஞ்சத்தில் நம்மால் பார்க்க முடிந்த அண்டவெளிகள் மட்டும் 100, 000, 000, 000 அதாவது 1 போட்டு 11 பூஜ்ஜியங்கள் போட்டால் எத்தனையோ அத்தனை. நம்மால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தான் பார்க்க முடியும். அப்படிப் பார்த்தால் இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எத்தனை அண்டவெளிகள் இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நம் உடலில் இருக்கும் ஒரு செல் மட்டும் தனியாக எடுத்தால் நம் கண்களுக்குக் கூடத் தெரியாது. இந்த பிரபஞ்சத்தை ஒரு உருவமாக எடுத்துக் கொண்டால் நம் அண்ட வெளி என்பது ஒரு செல் என்று வைத்துக் கொள்ளலாம் அதாவது நமது அண்டவெளி என்பது கண்களுக்குப் புலப்படாத ஒரு செல் இந்த பிரபஞ்சத்துடன் ஒப்பிடும் சமயம். இந்த அண்ட வெளியுடன் ஒப்பிடும் சமயம் நமது சூரியனை ஒரு செல்லாக கருதலாம். அதாவது நமது மொத்த அண்டவெளியையும் மனிதன் உருவத்துக்கு சுருக்கினால் சூரியனை கண்களால் காண இயலாது.

நமது சூரியனை மனிதனையும் ஒப்பிடவே முடியாது. ஒரு லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்த சூரியனுடன் நம்மை எப்படி ஒப்பிடுவது?

இதற்கும் இந்த பதிவின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

கடவுள் என்பவரைப் பற்றி நாம் யோசிக்கும் சமயத்தில் எல்லாம் நாம் அவர் எல்லாம் வல்ல இந்த பிரபஞ்சத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு சக்தி வடிவமாகத்தான் கருதுகிறோம்.

இந்த பிரபஞ்சத்தை கட்டுப்படுத்தும் சக்தி வடிவம் இறைவன் என்று வைத்துக் கொண்டால் நம்மையும் அவரேதான் கட்டுப்படுத்துகிறார் என்பது ஆணவத்தின் உச்சகட்டம். இந்த பிரபஞ்சத்துடன் நம்மை ஒப்பிட்டு நாம் தூசு என்று நினைத்தால் கூட அது ஆணவத்தின், மூடத்தனத்தின் உச்ச்சகட்டம்.

இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தையும் நம்மையும் ஒரே சக்தி கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டால் அது நம்முடைய மூடத்தனத்தின் உச்சகட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த பிரபஞ்சத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் சக்தி தான் உண்மையான இறைவன். அப்படி என்றால் கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது யாரை எதனை?

கடவுள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பது வேற்றுகிரகவாசிகளாக தான் இருக்க வேண்டும். முட்டாள்தனமாக தோன்றினாலும் இது தான் உண்மை என்பதற்கு நம்முடைய எல்லாப் புனித நூல்களிலும் உதாரணங்கள் இருக்கின்றன நம் கண் முன்னே இதற்கு சாட்சியங்களும் இருக்கின்றன. அவை என்னவென்றால் ......